விக்டோரியாவில் கொரோனா வைரஸ் காரணமாக மேலும் 15 பேர் மரணமடைந்த அதேநேரம் கடந்த 24 மணிநேரத்தில் 113 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இவர்களில் கடந்த 24 மணிநேரத்தில் மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 6 எனவும், ஏனைய 9 பேரும் புதன்கிழமைக்கு முன்னதாக மரணமடைந்ததாகவும், இவ்வெண்ணிக்கை மொத்தமாக மரணமடைந்தவர்களின் எண்ணிக்கையுடன் தற்போது சேர்க்கப்பட்டுள்ளதாகவும் Premier Daniel Andrews தெரிவித்தார்.
இதையடுத்து விக்டோரியாவில் கொரோனாவினால் இறந்தவர்களின் எண்ணிக்கை 591 ஆக உயர்ந்துள்ளது. ஆஸ்திரேலியா முழுவதும் பலியானோர் எண்ணிக்கை 678 ஆக அதிகரித்துள்ளது.
விக்டோரியா முழுவதும் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களில் அதிதீவிர சிகிச்சைப்பிரிவிலுள்ள 20 பேர் உட்பட 361 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சைபெற்று வருகின்றனர்.
விக்டோரியாவில் தற்போது கொரோனா பாதிப்பிற்குள்ளான 2295 பேர் இருக்கிறார்கள்.
விக்டோரியாவில் தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள stage 4 கட்டுப்பாடுகளை அடுத்தகட்டமாக தளர்த்துவது குறித்த அறிவிப்பினை Premier Daniel Andrews எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை வெளியிடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதுஒருபுறமிருக்க நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 12 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
உங்களுக்கு சளி அல்லது flu அறிகுறிகள் ஏற்பட்டால் வீட்டிலேயே இருங்கள். மற்றும் உங்கள் மருத்துவரை அழைத்து சோதனைக்கு ஏற்பாடு செய்யுங்கள். அல்லது Coronavirus Health Information Hotline-ஐ 1800 020 080 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.
கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டால் மிகவும் இலேசான அறிகுறிகள் முதல் நிமோனியா வரை செல்லக்கூடும் என அரச இணையத்தளம் கூறுகின்றது. காய்ச்சல், தொண்டை நோவு, இருமல், உடற்சோர்வு, சுவாசிப்பதில் சிரமம் போன்ற அறிகுறிகள் முக்கியமானவை.
உங்களுக்கு கடுமையான உடல்நலக்குறைவு ஏற்பட்டால் அல்லது சுவாசிப்பதற்கு சிரமம் ஏற்பட்டால் 000 என்ற இலக்கத்தை அழையுங்கள்.
ஒவ்வொருவருக்கிடையிலும் 1.5 மீட்டர் சமூக இடைவெளியைப் பேணுங்கள்.
அரசால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள COVIDSafe செயலியை உங்கள் கைபேசியில் தரவிறக்கிக்கொள்ளுங்கள்.
கொரோனா வைரஸ் (COVID-19) குறித்த முக்கிய தகவல்கள் sbs.com.au/coronavirus என்ற எமது இணையத்தில் 63 மொழிகளில் கிடைக்கின்றன.
Share
