SKIP TO MAIN CONTENT

விக்டோரியாவில் சமூகப் பரவல் ஊடாக புதிதாக 17 பேருக்கு தொற்று!

விக்டோரியா மாநிலத்தில் சமூகப்பரவல் ஊடாக மேலும் 17 பேருக்கு கோவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

A hand sanitising station is seen in Melbourne.
Source: AAP

2 min read

Published

Updated


Skip to article content

புதிதாக தொற்றுக்கண்டவர்கள் அனைவரும் ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட பரவல்களுடன் தொடர்புடையவர்கள் எனவும் இவர்களில் ஒருவர் விக்டோரியாவின் regional பகுதியான Mildura-வைச் சேர்ந்தவர்  எனவும் தெரிவிக்கப்படுகிறது.

தொற்றாளர் ஒருவர் கடந்த ஜுலை 10ம் திகதி சனிக்கிழமை MCG-இல் நடைபெற்ற Carlton-Geelong இடையிலான AFL போட்டியைப் பார்ப்பதற்கு சென்றிருந்தநிலையில் குறித்த Mildura நபரும் அன்றையதினம்  MCG சென்றிருந்ததாக குறிப்பிடப்படுகிறது.

நியூசவுத் வேல்ஸ் மாநிலத்திலிருந்து கோவிட் தொற்றுடன் மெல்பன் வந்த removalists ஊடாகவும் சிட்னியிலிருந்து மெல்பன் திரும்பிய குடும்பம் ஒன்றினூடாகவும் ஆரம்பித்த கோவிட் பரவலை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் நோக்குடன் 5 நாட்களுக்கு விக்டோரியாவில் முடக்கநிலை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

புதிதாக தொற்று காண்போரின் எண்ணிக்கை தொடர்ந்தும் அதிகரித்து வருவதால் மாநிலம் முழுவதும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள முடக்கநிலை நீடிக்கப்படலாம் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.

அதேபோன்று regional பகுதிகளுக்கான முடக்கநிலையை முன்கூட்டியே தளர்த்தமுடியுமா என்பது தொடர்பில் இப்போதைக்கு எதுவும் கூறமுடியாதுள்ளதாக Premier Daniel Andrews தெரிவித்தார்.

அதேநேரம்  வெளிநாட்டிலிருந்து திரும்பிவந்து விடுதியில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள  இருவருக்கும் கோவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதுவரை தொற்றாளர்கள் சென்றுவந்த 200க்கும் மேற்பட்ட இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

கோவிட் தொற்றாளர்கள் சென்றுவந்த இடங்களின் முழுமையான பட்டியலை www.coronavirus.vic.gov.au/exposure-sites என்ற இணையமுகவரியில் பார்வையிடலாம்.

கடந்த 24 மணிநேரத்தில் 53,283 கோவிட் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் பொதுமக்கள் மிகவும் விழிப்புடன் இருக்கும் அதேநேரம் சிறியளவிலான அறிகுறி தோன்றினாலும் உடனடியாக சோதனைக்கு உட்படுமாறும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

கொரோனா குறித்த தகவல்கள்

உங்களுக்கு சளி அல்லது flu அறிகுறிகள் ஏற்பட்டால் வீட்டிலேயே இருங்கள். மற்றும் உங்கள் மருத்துவரை அழைத்து சோதனைக்கு ஏற்பாடு செய்யுங்கள். அல்லது கொரோனாவைரஸ்உதவிமையத்தை 1800 020 080 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டால் மிகவும் இலேசான அறிகுறிகள் முதல் நிமோனியா வரை செல்லக்கூடும் என அரச இணையத்தளம் கூறுகின்றது. காய்ச்சல், தொண்டை நோவு, இருமல், உடற்சோர்வு, சுவாசிப்பதில் சிரமம் போன்ற அறிகுறிகள் முக்கியமானவை.

உங்களுக்கு கடுமையான உடல்நலக்குறைவு ஏற்பட்டால் அல்லது சுவாசிப்பதற்கு சிரமம் ஏற்பட்டால் 000 என்ற இலக்கத்தை அழையுங்கள்.

ஒவ்வொருவருக்கிடையிலும் 1.5 மீட்டர் சமூக இடைவெளியைப் பேணுங்கள்.

அரசால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள COVIDSafe செயலியை உங்கள் கைபேசியில் தரவிறக்கிக்கொள்ளுங்கள்.

கொரோனா வைரஸ் (COVID-19) குறித்த முக்கிய தகவல்கள் sbs.com.au/coronavirus என்ற எமது இணையத்தில் 63 மொழிகளில் கிடைக்கின்றன.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.

டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now