விக்டோரியாவில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 394 பேருக்கு கொரோனா தொற்று இனங்காணப்பட்டுள்ள அதேநேரம் 17 பேர் மரணமடைந்துள்ளனர்.
ஆஸ்திரேலியாவில் கொரோனா பரவல் ஆரம்பித்ததன் பின்னர் ஒரேநாளில் பதிவான அதிகூடிய மரணங்களின் எண்ணிக்கை இதுவாகும்.
மரணமடைந்தவர்களில் 10 பேர் முதியோர் இல்லங்களில் ஏற்பட்ட பரவலுடன் தொடர்புடையவர்கள் என குறிப்பிடப்படுகிறது.
50 வயதுகளிலுள்ள ஆண்கள் இருவர், 70 வயதுகளிலுள்ள 4 ஆண்கள், 80 வயதுகளிலுள்ள 4 பெண்கள் மற்றும் 2 ஆண்கள், 90 வயதுகளிலுள்ள 2 பெண்கள் மற்றும் 3 ஆண்களே இவ்வாறு மரணமடைந்தனர்.
இதையடுத்து விக்டோரியாவில் கொரோனாவினால் இறந்தவர்களின் எண்ணிக்கை 210 ஆக உயர்ந்துள்ளது.
ஆஸ்திரேலியா முழுவதும் பலியானோர் எண்ணிக்கை 295 ஆக அதிகரித்துள்ளது.
தற்போது விக்டோரியா முழுவதும் தொற்றுக்குள்ளானவர்களில் அதிதீவிர சிகிச்சைப்பிரிவிலுள்ள 43 பேர் உட்பட 634 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சைபெற்றுவருகின்றனர்.
விக்டோரியாவில் தொடர்ந்து 35வது நாளாக மூன்று இலக்கங்களில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை பதிவாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் விக்டோரியர்களுக்கான மனநல மேம்பாட்டு உதவிகளுக்கென மேலதிகமாக 59.7 மில்லியன் டொலர்கள் ஒதுக்கப்படுவதாக இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுஒருபுறமிருக்க விக்டோரியாவில் கடந்த 24 மணிநேரத்தில் கொரோனா கட்டுப்பாடுகளை மீறிய சுமார் 268 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
உங்களுக்கு சளி அல்லது flu அறிகுறிகள் ஏற்பட்டால் வீட்டிலேயே இருங்கள். மற்றும் உங்கள் மருத்துவரை அழைத்து சோதனைக்கு ஏற்பாடு செய்யுங்கள். அல்லது Coronavirus Health Information Hotline-ஐ 1800 020 080 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.
கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டால் மிகவும் இலேசான அறிகுறிகள் முதல் நிமோனியா வரை செல்லக்கூடும் என அரச இணையத்தளம் கூறுகின்றது. காய்ச்சல், தொண்டை நோவு, இருமல், உடற்சோர்வு, சுவாசிப்பதில் சிரமம் போன்ற அறிகுறிகள் முக்கியமானவை.
உங்களுக்கு கடுமையான உடல்நலக்குறைவு ஏற்பட்டால் அல்லது சுவாசிப்பதற்கு சிரமம் ஏற்பட்டால் 000 என்ற இலக்கத்தை அழையுங்கள்.
ஒவ்வொருவருக்கிடையிலும் 1.5 மீட்டர் சமூக இடைவெளியைப் பேணுங்கள்.
அரசால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள COVIDSafe செயலியை உங்கள் கைபேசியில் தரவிறக்கிக்கொள்ளுங்கள்.
கொரோனா வைரஸ் (COVID-19) குறித்த முக்கிய தகவல்கள் sbs.com.au/coronavirus என்ற எமது இணையத்தில் 63 மொழிகளில் கிடைக்கின்றன.
Share
