விக்டோரியாவில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 278 பேருக்கு கொரோனா தொற்று இனங்காணப்பட்டுள்ள அதேநேரம் 8 பேர் மரணமடைந்துள்ளனர்.
தொடர்ந்து பல நாட்களாக அதிகளவு தொற்றுக்களும் மரணங்களும் பதிவான நிலையில் இவ்வெண்ணிக்கை சற்றே குறைவடைந்துள்ளது.
மரணமடைந்தவர்களில் 4 பேர் முதியோர் இல்லங்களில் ஏற்பட்ட பரவலுடன் தொடர்புடையவர்கள் என குறிப்பிடப்படுகிறது.
50 வயதுகளிலுள்ள பெண், 70 வயதுகளிலுள்ள 2 ஆண்கள், 80 வயதுகளிலுள்ள 2 பெண்கள் மற்றும் 2 ஆண்கள், 90 வயதுகளிலுள்ள ஆண் ஆகியோரே இவ்வாறு மரணமடைந்தனர்.
இதையடுத்து விக்டோரியாவில் கொரோனாவினால் இறந்தவர்களின் எண்ணிக்கை 275 ஆக உயர்ந்துள்ளது.
ஆஸ்திரேலியா முழுவதும் பலியானோர் எண்ணிக்கை 360 ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை விக்டோரியா முழுவதும் தொற்றுக்குள்ளானவர்களில் பலர் தொடர்ந்தும் மருத்துவமனைகளில் சிகிச்சைபெற்றுவருகின்ற நிலையில் மரணமடைபவர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்படக்கூடும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.
இதுஒருபுறமிருக்க COVID-19 சோதனை மேற்கொண்டுவிட்டு தம்மை தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டியநிலையில் உள்ளவர்களுக்கு வேலையில் சம்பளத்துடனான விடுப்பு இல்லையெனில், விக்டோரிய அரசிடமிருந்து 300 டொலர்கள் கொடுப்பனவைப் பெற்றுக்கொள்ளமுடியும் என அறிவிக்கப்பட்டிருந்தநிலையில் இத்தொகை 450 டொலர்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
உங்களுக்கு சளி அல்லது flu அறிகுறிகள் ஏற்பட்டால் வீட்டிலேயே இருங்கள். மற்றும் உங்கள் மருத்துவரை அழைத்து சோதனைக்கு ஏற்பாடு செய்யுங்கள். அல்லது Coronavirus Health Information Hotline-ஐ 1800 020 080 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டால் மிகவும் இலேசான அறிகுறிகள் முதல் நிமோனியா வரை செல்லக்கூடும் என அரச இணையத்தளம் கூறுகின்றது. காய்ச்சல், தொண்டை நோவு, இருமல், உடற்சோர்வு, சுவாசிப்பதில் சிரமம் போன்ற அறிகுறிகள் முக்கியமானவை.
உங்களுக்கு கடுமையான உடல்நலக்குறைவு ஏற்பட்டால் அல்லது சுவாசிப்பதற்கு சிரமம் ஏற்பட்டால் 000 என்ற இலக்கத்தை அழையுங்கள்.
ஒவ்வொருவருக்கிடையிலும் 1.5 மீட்டர் சமூக இடைவெளியைப் பேணுங்கள்.
அரசால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள COVIDSafe செயலியை உங்கள் கைபேசியில் தரவிறக்கிக்கொள்ளுங்கள்.
கொரோனா வைரஸ் (COVID-19) குறித்த முக்கிய தகவல்கள் sbs.com.au/coronavirus என்ற எமது இணையத்தில் 63 மொழிகளில் கிடைக்கின்றன.
