விக்டோரியாவில் இன்று புதிதாக 288 பேருக்கு COVID-19 தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலியாவில் கொரோனா வைரஸ் பரவல் ஆரம்பித்ததன் பின்னர் ஒரேநாளில் பதிவான அதிகூடிய தொற்றாளர்களின் எண்ணிக்கை இதுவாகும்.
விக்டோரியாவில் தொற்று கண்டவர்களின் எண்ணிக்கை இதைவிடவும் அதிகரித்து பின்னர் படிப்படியாக குறையும் என எதிர்பார்க்கப்படுவதாக மாநில Premier Daniel Andrews தெரிவித்தார்.
தற்போது மாநிலம் முழுவதும் 1172 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. இவர்களில் 47 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை மாநிலம் முழுவதும் கொரோனா பரவல் அதிகரித்திருப்பதையடுத்து அத்தியாவசிய தேவைகளுக்காக வெளியே செல்பவர்கள் சமூக இடைவெளியைப் பேணமுடியாதவிடத்து முகக்கவசங்களை அணிந்துகொள்ளலாம் என ஊக்குவிக்கப்படுகிறது.
உங்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்தால் உங்களது மருத்துவரையோ அல்லது 1800 020 080 என்ற இலக்கத்தையோ அழையுங்கள்.
கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டால் மிகவும் இலேசான அறிகுறிகள் முதல் நிமோனியா வரை செல்லக்கூடும் என அரச இணையத்தளம் கூறுகின்றது. காய்ச்சல், தொண்டை நோவு, இருமல், உடற்சோர்வு, சுவாசிப்பதில் சிரமம் போன்ற அறிகுறிகள் முக்கியமானவை.
உங்களுக்கு கடுமையான உடல்நலக்குறைவு ஏற்பட்டால் அல்லது சுவாசிப்பதற்கு சிரமம் ஏற்பட்டால் 000 என்ற இலக்கத்தை அழையுங்கள்.
ஒவ்வொருவருக்கிடையிலும் 1.5 மீட்டர் சமூக இடைவெளியைப் பேணுங்கள்.
அரசால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள COVIDSafe செயலியை உங்கள் கைபேசியில் தரவிறக்கிக்கொள்ளுங்கள்.
கொரோனா வைரஸ் (COVID-19) குறித்த முக்கிய தகவல்கள் sbs.com.au/coronavirus என்ற எமது இணையத்தில் 63 மொழிகளில் கிடைக்கின்றன.
Share
