விக்டோரியாவில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 317 பேருக்கு COVID-19 தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ள அதேநேரம் மேலும் இருவர் உயிரிழந்துள்ளனர்.
ஆஸ்திரேலியாவில் கொரோனா வைரஸ் பரவல் ஆரம்பித்ததன் பின்னர் ஒரேநாளில் பதிவான அதிகூடிய தொற்றாளர்களின் எண்ணிக்கை இதுவாகும்.
இந்த மரணங்களுடன் விக்டோரியாவில் கொரோனாவினால் இறந்தவர்களின் எண்ணிக்கை 29 ஆகவும் ஆஸ்திரேலியாவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 113 ஆகவும் உயர்ந்துள்ளது.
COVID-19 தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளவர்களில் 109 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 29 பேர் அதிதீவிரசிகிச்சைப் பிரிவில் சிகிச்சைபெற்றுவருகின்றனர்.
உங்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்தால் உங்களது மருத்துவரையோ அல்லது 1800 020 080 என்ற இலக்கத்தையோ அழையுங்கள்.
கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டால் மிகவும் இலேசான அறிகுறிகள் முதல் நிமோனியா வரை செல்லக்கூடும் என அரச இணையத்தளம் கூறுகின்றது. காய்ச்சல், தொண்டை நோவு, இருமல், உடற்சோர்வு, சுவாசிப்பதில் சிரமம் போன்ற அறிகுறிகள் முக்கியமானவை.
உங்களுக்கு கடுமையான உடல்நலக்குறைவு ஏற்பட்டால் அல்லது சுவாசிப்பதற்கு சிரமம் ஏற்பட்டால் 000 என்ற இலக்கத்தை அழையுங்கள்.
ஒவ்வொருவருக்கிடையிலும் 1.5 மீட்டர் சமூக இடைவெளியைப் பேணுங்கள்.
அரசால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள COVIDSafe செயலியை உங்கள் கைபேசியில் தரவிறக்கிக்கொள்ளுங்கள்.
கொரோனா வைரஸ் (COVID-19) குறித்த முக்கிய தகவல்கள் sbs.com.au/coronavirus என்ற எமது இணையத்தில் 63 மொழிகளில் கிடைக்கின்றன.
Share
