விக்டோரியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 357 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்ட அதேநேரம் மேலும் 5 பேர் மரணமடைந்துள்ளனர்.
60,70,80 மற்றும் 90 வயதுகளிலுள்ள முதியவர்களே இவ்வாறு மரணமடைந்ததாக Premier Daniel Andrews தெரிவித்தார்.
இதையடுத்து விக்டோரியாவில் கொரோனாவினால் இறந்தவர்களின் எண்ணிக்கை 61 ஆக உயர்ந்துள்ள அதேநேரம் ஆஸ்திரேலியா முழுவதும் பலியானோர் எண்ணிக்கை 145 ஆக உயர்வடைந்துள்ளது.
தற்போது மாநிலம் முழுவதும் கிட்டத்தட்ட 4000 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியிருக்கின்றனர். இவர்களில் 313 பேர் சுகாதாரத்துறை பணியாளர்கள் என குறிப்பிடப்படுகிறது.
அதேநேரம் தொற்றுக்குள்ளானவர்களில் அதிதீவிர சிகிச்சைப் பிரிவிலுள்ள 42 பேர் உட்பட 229 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சைபெற்று வருகின்றனர்.
விக்டோரியாவில் தொடர்ந்து 20வது நாளாக மூன்று இலக்கங்களில் புதிய தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.
உங்களுக்கு சளி அல்லது flu அறிகுறிகள் ஏற்பட்டால் வீட்டிலேயே இருங்கள். மற்றும் உங்கள் மருத்துவரை அழைத்து சோதனைக்கு ஏற்பாடு செய்யுங்கள். அல்லது Coronavirus Health Information Hotline-ஐ 1800 020 080 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.
கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டால் மிகவும் இலேசான அறிகுறிகள் முதல் நிமோனியா வரை செல்லக்கூடும் என அரச இணையத்தளம் கூறுகின்றது. காய்ச்சல், தொண்டை நோவு, இருமல், உடற்சோர்வு, சுவாசிப்பதில் சிரமம் போன்ற அறிகுறிகள் முக்கியமானவை.
உங்களுக்கு கடுமையான உடல்நலக்குறைவு ஏற்பட்டால் அல்லது சுவாசிப்பதற்கு சிரமம் ஏற்பட்டால் 000 என்ற இலக்கத்தை அழையுங்கள்.
ஒவ்வொருவருக்கிடையிலும் 1.5 மீட்டர் சமூக இடைவெளியைப் பேணுங்கள்.
அரசால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள COVIDSafe செயலியை உங்கள் கைபேசியில் தரவிறக்கிக்கொள்ளுங்கள்.
கொரோனா வைரஸ் (COVID-19) குறித்த முக்கிய தகவல்கள் sbs.com.au/coronavirus என்ற எமது இணையத்தில் 63 மொழிகளில் கிடைக்கின்றன.
Share
