விக்டோரியாவில் கடந்த 24 மணிநேரத்தில் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக மூவர் உயிரிழந்த அதேநேரம் 374 பேருக்கு தொற்று ஏற்பட்டிருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.
70, 80 மற்றும் 100 வயதுகளிலுள்ள மூன்று முதியவர்களே இவ்வாறு மரணமடைந்ததாக மாநில Premier Daniel Andrews இன்று அறிவித்தார்.
இந்த மரணங்களுடன் விக்டோரியாவில் கொரோனாவினால் இறந்தவர்களின் எண்ணிக்கை 42 ஆகவும் ஆஸ்திரேலியாவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 126 ஆகவும் உயர்ந்துள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை 428 ஆகவும் அதைத் தொடர்ந்து சனிக்கிழமை 217, ஞாயிற்றுக்கிழமை 363, திங்கட்கிழமை 275 என்ற அடிப்படையில் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுவருகின்ற போதிலும் பாரிய அதிகரிப்பு இல்லாதமைக்குக் காரணம் விக்டோரியாவில் இறுக்கமான கட்டுப்பாடுகள் பேணப்படுகின்றமையே என Daniel Andrews தெரிவித்தார்.
மேலும் கொரோனா வைரஸ் தொடர்பில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுவது மக்களின் கைகளிலேயே தங்கியுள்ளதாக குறிப்பிட்ட அவர், மேலதிக கட்டுப்பாடுகள் நடைமுறைப்படுத்தப்படுவது தொடர்பில் இப்போது தீர்மானிக்கமுடியாதுள்ளதாக கூறினார்.
இதேவேளை நாளை புதன்கிழமை இரவு 11.59 முதல் மெல்பேர்ன் மற்றும் Mitchell Shireஆகிய பகுதிகளில் வாழ்பவர்கள் வீட்டிற்கு வெளியே செல்லும்போது முகக்கவசம் அணிந்துகொள்வது கட்டாயமாக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
உங்களுக்கு சளி அல்லது flu அறிகுறிகள் ஏற்பட்டால் வீட்டிலேயே இருங்கள். மற்றும் உங்கள் மருத்துவரை அழைத்து சோதனைக்கு ஏற்பாடு செய்யுங்கள். அல்லது Coronavirus Health Information Hotline-ஐ 1800 020 080 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.
கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டால் மிகவும் இலேசான அறிகுறிகள் முதல் நிமோனியா வரை செல்லக்கூடும் என அரச இணையத்தளம் கூறுகின்றது. காய்ச்சல், தொண்டை நோவு, இருமல், உடற்சோர்வு, சுவாசிப்பதில் சிரமம் போன்ற அறிகுறிகள் முக்கியமானவை.
உங்களுக்கு கடுமையான உடல்நலக்குறைவு ஏற்பட்டால் அல்லது சுவாசிப்பதற்கு சிரமம் ஏற்பட்டால் 000 என்ற இலக்கத்தை அழையுங்கள்.
ஒவ்வொருவருக்கிடையிலும் 1.5 மீட்டர் சமூக இடைவெளியைப் பேணுங்கள்.
அரசால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள COVIDSafe செயலியை உங்கள் கைபேசியில் தரவிறக்கிக்கொள்ளுங்கள்.
கொரோனா வைரஸ் (COVID-19) குறித்த முக்கிய தகவல்கள் sbs.com.au/coronavirus என்ற எமது இணையத்தில் 63 மொழிகளில் கிடைக்கின்றன.
Share
