விக்டோரியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 723 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்ட அதேநேரம் மேலும் 13 பேர் மரணமடைந்துள்ளனர்.
ஆஸ்திரேலியாவில் கொரோனா பரவல் ஆரம்பித்ததன்பின்னர் ஒரேநாளில் பதிவான அதிகூடிய தொற்றாளர்களின் எண்ணிக்கை இதுவாகும்.
இதேவேளை தற்போது விக்டோரியாவின் Regional பகுதிகளிலுள்ள தொற்றாளர்களின் எண்ணிக்கை 255 ஆக அதிகரித்துள்ளதையடுத்து அங்கு வாழ்பவர்களும் இனிமேல் வெளியில் செல்லும்போது முகக்கவசம் அணிந்துகொள்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை இரவு 11.59 மணிமுதல் இது நடைமுறைப்படுத்தப்படுகிறது.
இதேவேளை கடந்த 24 மணிநேரத்தில் மரணமடைந்தவர்களில் 8 ஆண்களும் 5 பெண்களும் அடங்குகின்றனர். இவர்கள் தமது 70, 80 மற்றும் 90 வயதுகளிலுள்ளவர்கள் என குறிப்பிடப்படுகிறது.
தற்போது விக்டோரியா முழுவதும் கொரோனா தொற்றுக்குள்ளான 5,385 பேரில் அதிதீவிர சிகிச்சைப்பிரிவிலுள்ள 34 பேர் உட்பட 312 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சைபெற்று வருகின்றனர்.
மேலும் தொற்றுக்குள்ளானவர்களில் 913 பேர் முதியோர் பராமரிப்பு இல்லங்களில் உள்ளவர்கள் என குறிப்பிடப்படுகிறது.
விக்டோரியாவில் கொரோனாவினால் இறந்தவர்களின் எண்ணிக்கை 105 ஆக உயர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
உங்களுக்கு சளி அல்லது flu அறிகுறிகள் ஏற்பட்டால் வீட்டிலேயே இருங்கள். மற்றும் உங்கள் மருத்துவரை அழைத்து சோதனைக்கு ஏற்பாடு செய்யுங்கள். அல்லது Coronavirus Health Information Hotline-ஐ 1800 020 080 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.
கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டால் மிகவும் இலேசான அறிகுறிகள் முதல் நிமோனியா வரை செல்லக்கூடும் என அரச இணையத்தளம் கூறுகின்றது. காய்ச்சல்,தொண்டைநோவு, இருமல், உடற்சோர்வு, சுவாசிப்பதில் சிரமம் போன்ற அறிகுறிகள் முக்கியமானவை.
உங்களுக்கு கடுமையான உடல்நலக்குறைவு ஏற்பட்டால் அல்லது சுவாசிப்பதற்கு சிரமம் ஏற்பட்டால் 000 என்ற இலக்கத்தை அழையுங்கள்.
ஒவ்வொருவருக்கிடையிலும் 1.5 மீட்டர் சமூக இடைவெளியைப் பேணுங்கள்.
அரசால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள COVIDSafe செயலியை உங்கள் கைபேசியில் தரவிறக்கிக்கொள்ளுங்கள்.
கொரோனா வைரஸ் (COVID-19) குறித்த முக்கிய தகவல்கள் sbs.com.au/coronavirus என்ற எமது இணையத்தில் 63 மொழிகளில் கிடைக்கின்றன.
Share
