விக்டோரியாவில் கொரோனா தொற்றுக்குள்ளாகியிருக்கும் 75 பேர் கடந்த 24 மணிநேரத்தில் இனங்காணப்பட்டுள்ளனர்.
அதேநேரம் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாத்திரம் 49 பேருக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டிருக்கிறது.
கொரோனா பரவல் குறித்து கட்டுப்பாடுகள் ஆரம்பிக்கப்பட்ட கடந்த மார்ச் 31 ஆம் திகதியிலிருந்து இன்றுவரையான காலப்பகுதியில் ஒரே நாளில் இத்தனைபேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியிருப்பது இன்றுதான் என்று மருத்துவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
கடந்த 12 நாட்களாக தொடர்ச்சியாக இரட்டை இலக்கத்தில் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை அதிகரித்துவருவதாக சுட்டிக்காட்டியுள்ள மருத்துவ வட்டாரங்கள், விக்டோரியாவில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை எதிர்காலத்தில் இன்னும் அதிகரிக்கலாம் என்று எச்சரித்துள்ளன.
அத்துடன், நிலைமை கைமீறிச்செல்லும்போது அதிக தொற்றினை ஏற்படுத்தும் இடங்களுக்கு முழுமையான ஊரடங்கினை கொண்டுவந்து, அதன்மூலம் இந்தப்பரவலை கட்டுப்படுத்த நேரிடலாம் என்று எதிர்வுகூறப்பட்டுள்ளது.
உங்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்தால் உங்களது மருத்துவரையோ அல்லது 1800 020 080 என்ற இலக்கத்தையோ அழையுங்கள்.
கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டால் மிகவும் இலேசான அறிகுறிகள் முதல் நிமோனியா வரை செல்லக்கூடும் என அரச இணையத்தளம் கூறுகின்றது. காய்ச்சல், தொண்டை நோவு, இருமல், உடற்சோர்வு, சுவாசிப்பதில் சிரமம் போன்ற அறிகுறிகள் முக்கியமானவை.
உங்களுக்கு கடுமையான உடல்நலக்குறைவு ஏற்பட்டால் அல்லது சுவாசிப்பதற்கு சிரமம் ஏற்பட்டால் 000 என்ற இலக்கத்தை அழையுங்கள்.
ஒவ்வொருவருக்கிடையிலும் 1.5 மீட்டர் சமூக இடைவெளியைப் பேணுங்கள்.
அரசால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள COVIDSafe செயலியை உங்கள் கைபேசியில் தரவிறக்கிக்கொள்ளுங்கள்.
கொரோனா வைரஸ் (COVID-19) குறித்த முக்கிய தகவல்கள் sbs.com.au/coronavirus என்ற எமது இணையத்தில் 63 மொழிகளில் கிடைக்கின்றன.
