விக்டோரியாவில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 222 பேருக்கு கொரோனா தொற்று இனங்காணப்பட்டுள்ள அதேநேரம் 17 பேர் மரணமடைந்துள்ளனர்.
மரணமடைந்தவர்களில் 13 பேர் முதியோர் இல்லங்களில் ஏற்பட்ட பரவலுடன் தொடர்புடையவர்கள் என குறிப்பிடப்படுகிறது.
இதையடுத்து விக்டோரியாவில் கொரோனாவினால் இறந்தவர்களின் எண்ணிக்கை 351 ஆக உயர்ந்துள்ளது. ஆஸ்திரேலியா முழுவதும் பலியானோர் எண்ணிக்கை 438 ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை விக்டோரியாவில் தொடர்ந்து மூன்றாவது நாளாக புதிய தொற்றாளர்களின் எண்ணிக்கை 300க்கும் குறைவாக பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலை தொடரும் என்றும் அடுத்த வாரமளவில் புதிய தொற்றாளர்களின் எண்ணிக்கை நூறாக குறைவடையும் எனவும் எதிர்வுகூறப்பட்டுள்ளது.
தற்போது விக்டோரியா முழுவதும் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களில் அதிதீவிர சிகிச்சைப்பிரிவிலுள்ள 45 பேர் உட்பட 665 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சைபெற்று வருகின்றனர்.
இதுஒருபுறமிருக்க நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
உங்களுக்கு சளி அல்லது flu அறிகுறிகள் ஏற்பட்டால் வீட்டிலேயே இருங்கள். மற்றும் உங்கள் மருத்துவரை அழைத்து சோதனைக்கு ஏற்பாடு செய்யுங்கள். அல்லது Coronavirus Health Information Hotline-ஐ 1800 020 080 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.
கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டால் மிகவும் இலேசான அறிகுறிகள் முதல் நிமோனியா வரை செல்லக்கூடும் என அரச இணையத்தளம் கூறுகின்றது. காய்ச்சல், தொண்டை நோவு, இருமல், உடற்சோர்வு, சுவாசிப்பதில் சிரமம் போன்ற அறிகுறிகள் முக்கியமானவை.
உங்களுக்கு கடுமையான உடல்நலக்குறைவு ஏற்பட்டால் அல்லது சுவாசிப்பதற்கு சிரமம் ஏற்பட்டால் 000 என்ற இலக்கத்தை அழையுங்கள்.
ஒவ்வொருவருக்கிடையிலும் 1.5 மீட்டர் சமூக இடைவெளியைப் பேணுங்கள்.
அரசால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள COVIDSafe செயலியை உங்கள் கைபேசியில் தரவிறக்கிக்கொள்ளுங்கள்.
கொரோனா வைரஸ் (COVID-19) குறித்த முக்கிய தகவல்கள் sbs.com.au/coronavirus என்ற எமது இணையத்தில் 63 மொழிகளில் கிடைக்கின்றன.
Share
