விக்டோரியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை புதிய உச்சத்தை தொட்டுள்ளது.
கடந்த 24 மணிநேரத்தில் 532 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்ட அதேநேரம் மேலும் 6 பேர் மரணமடைந்துள்ளனர்.
கொரோனா பரவல் ஆரம்பித்ததுமுதல் ஆஸ்திரேலியாவில் ஒரேநாளில் பதிவுசெய்யப்பட்ட அதிகூடிய COVID-19 தொற்றுக்களின் எண்ணிக்கை இதுவாகும்.
உயிரிழந்தவர்களில் 3 பெண்களும் 3 ஆண்களும் அடங்குகின்ற அதேநேரம் இவர்களில் ஒரு ஆண் தனது 50 வயதுகளிலுள்ளவர் என குறிப்பிடப்படுகிறது.
இதையடுத்து விக்டோரியாவில் கொரோனாவினால் இறந்தவர்களின் எண்ணிக்கை 77 ஆக உயர்ந்துள்ள அதேநேரம் ஆஸ்திரேலியா முழுவதும் பலியானோர் எண்ணிக்கை 161 ஆக உயர்வடைந்துள்ளது.
COVID-19 தொற்றுக்குள்ளானவர்களில் அதிதீவிர சிகிச்சைப் பிரிவிலுள்ள 44 பேர் உட்பட 245 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சைபெற்று வருகின்றனர்.
விக்டோரியாவில் ஏற்பட்டுள்ள இரண்டாம்கட்டப் பரவலைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்கு அனைவரும் உதவவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ள Premier Daniel Andrews, நோய் அறிகுறிகள் உள்ளவர்கள் வேலைக்குச் செல்லவேண்டாம் என அறிவுறுத்தியுள்ளார்.
மெல்பேர்ன் மற்றும் Mitchell Shire பகுதிகளில் stage 3 கட்டுப்பாடுகள் நடைமுறைப்படுத்தப்பட்டு 3 வாரங்கள் ஆகின்ற பின்னணியில் அடுத்துவரும்நாட்களில் கட்டுப்பாடுகள் மேலும் இறுக்கமாக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
உங்களுக்கு சளி அல்லது flu அறிகுறிகள் ஏற்பட்டால் வீட்டிலேயே இருங்கள். மற்றும் உங்கள் மருத்துவரை அழைத்து சோதனைக்கு ஏற்பாடு செய்யுங்கள். அல்லது Coronavirus Health Information Hotline-ஐ 1800 020 080 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.
கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டால் மிகவும் இலேசான அறிகுறிகள் முதல் நிமோனியா வரை செல்லக்கூடும் என அரச இணையத்தளம் கூறுகின்றது. காய்ச்சல், தொண்டை நோவு, இருமல், உடற்சோர்வு, சுவாசிப்பதில் சிரமம் போன்ற அறிகுறிகள் முக்கியமானவை.
உங்களுக்கு கடுமையான உடல்நலக்குறைவு ஏற்பட்டால் அல்லது சுவாசிப்பதற்கு சிரமம் ஏற்பட்டால் 000 என்ற இலக்கத்தை அழையுங்கள்.
ஒவ்வொருவருக்கிடையிலும் 1.5 மீட்டர் சமூக இடைவெளியைப் பேணுங்கள்.
அரசால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள COVIDSafe செயலியை உங்கள் கைபேசியில் தரவிறக்கிக்கொள்ளுங்கள்.
கொரோனா வைரஸ் (COVID-19) குறித்த முக்கிய தகவல்கள் sbs.com.au/coronavirus என்ற எமது இணையத்தில் 63 மொழிகளில் கிடைக்கின்றன.
Share
