நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தின் Northern Beaches பகுதியில் ஏற்பட்ட கொரோனா பரவல் மூலம் மேலும் 30 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து இப்பரவல் மூலம் தொற்றுக்கண்டவர்களின் மொத்த எண்ணிக்கை 70 ஆகியுள்ளது.
இந்தப் பின்னணியில் Central Coast, Blue Mountains உட்பட Greater Sydney பகுதிகளில் வாழ்பவர்கள் விக்டோரியா மாநிலத்திற்குள் நுழைவதற்கு இன்று-ஞாயிறு நள்ளிரவுமுதல் தடைவிதிக்கப்படுகிறது.
இத்தடை நடைமுறைப்படுத்தப்பட்டபின் குறித்த பகுதிகளிலிருந்து விக்டோரியா வருபவர்கள் 14 நாட்கள் ஹோட்டல்களில் தனிமைப்படுத்தப்படுவர் என Premier Daniel Andrew அறிவித்தார்.
அதேநேரம் சிட்னியிலுள்ள விக்டோரியர்கள் திங்கட்கிழமை நள்ளிரவுக்குள் விக்டோரியா திரும்பவேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளதுடன், இவர்கள் தமது வீடுகளில் 14 நாட்களுக்கு தனிமைப்படுத்தலுக்கு உள்ளாக வேண்டுமென்பதுடன் கோவிட் சோதனையை மேற்கொள்ள வேண்டுமெனவும் தெரிவிக்கப்படுகிறது.
திங்கட்கிழமை நள்ளிரவுக்குப் பின்னர் திரும்பிவரும் விக்டோரியர்களுக்கு வீடுகளில் தனிமைப்படுத்திக்கொள்ளும் வாய்ப்பு வழங்கப்படாது எனவும் அவர்களும் ஹோட்டல்களில் தனிமைப்படுத்தப்பட வேண்டுமெனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
விக்டோரியா மாநிலத்தில் கடந்த 51 நாட்களாக சமூகப் பரவல் ஊடாக எவ்வித தொற்றுக்களும் பதிவுசெய்யப்படாதநிலையில் இப்பயணத்தடை எத்தனை நாட்களுக்குத் தேவையோ அத்தனை நாட்களுக்குத் தொடரும் என Premier Daniel Andrew அறிவித்தார்.
உங்களுக்கு சளி அல்லது flu அறிகுறிகள் ஏற்பட்டால் வீட்டிலேயே இருங்கள். மற்றும் உங்கள் மருத்துவரை அழைத்து சோதனைக்கு ஏற்பாடு செய்யுங்கள். அல்லது Coronavirus Health Information Hotline-ஐ 1800 020 080 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.
உங்களுக்கு கடுமையான உடல்நலக்குறைவு ஏற்பட்டால் அல்லது சுவாசிப்பதற்கு சிரமம் ஏற்பட்டால் 000 என்ற இலக்கத்தை அழையுங்கள்.
ஒவ்வொருவருக்கிடையிலும் 1.5 மீட்டர் சமூக இடைவெளியைப் பேணுங்கள்.
அரசால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள COVIDSafe செயலியை உங்கள் கைபேசியில் தரவிறக்கிக்கொள்ளுங்கள்.
கொரோனா வைரஸ் (COVID-19) குறித்த முக்கிய தகவல்கள் sbs.com.au/coronavirus என்ற எமது இணையத்தில் 63 மொழிகளில் கிடைக்கின்றன.
Share
