அரசு தமது சம்பள உயர்வு கோரிக்கைக்கு உரிய தீர்வு தராததையடுத்து ஏற்கனவே திட்டமிட்டபடி நாளை முதல் போராட்டத்தில் குதிக்கவுள்ளதாக விக்டோரிய பொலீஸார் தெரிவித்துள்ளனர்.
இப்போராட்டத்தின் ஒரு அங்கமாக வேக கண்காணிப்புகமரா உள்ள இடங்களுக்கு அருகே நின்று- வாகன ஓட்டிகளுக்கு- எதிரே கமரா உள்ளது என்பதை முன்கூட்டியே சமிக்ஞை காட்டி எச்சரிக்கவுள்ளதாக தொழிற்சங்கத்தில் இணைந்துள்ள பொலீஸார் அறிவித்துள்ளனர்.
இதன்மூலம் பொதுமக்கள் பாதுகாப்பு பேணப்படும் அதேநேரம் அபராதம் மூலம் அரசுக்கு கிடைக்கும் வருமானமும் குறைக்கப்படும் என அவர்கள் கூறியுள்ளனர்.
நான்கு வீத சம்பள உயர்வு கோரி விக்டோரிய பொலீஸ் சம்மேளனம் கடந்த பல மாதங்களாக நடத்திய பேச்சுக்களின் அடிப்படையில், இரண்டு வீத சம்பள உயர்வையே அரசு வழங்குவதற்கு முன்வந்துள்ளது. ஆனால், அது போதாது என விக்டோரிய பொலீஸ் சம்மேளனம் கூறுகிறது.
ஆஸ்திரேலியாவிலேயே அதி உயர் சம்பளமாக ஆண்டொன்றுக்கு நான்கு லட்சத்து 41 ஆயிரம் டொலர்கள் பெறுகின்ற விக்டோரிய Premier Daniel Andrews, மாநிலத்தின் பாதுகாப்பினை உறுதி செய்யும் பொலீஸாருக்கு நான்கு வீத சம்பள உயர்வு கொடுப்பதற்கு அடம்பிடிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என பொலீஸ் சம்மேளனம் தெரிவித்துள்ளது.
இந்த பணிப்புறக்கணிப்பில் 17 ஆயிரத்து 200 பொலீஸார் ஈடுபடுபவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை பணிப்புறக்கணிப்பில் ஈடுபடும் பொலீஸார் கீழ்க்காணும் செயற்பாடுகளை மேற்கொள்ளவுள்ளதாக அறிவித்துள்ளனர்.
- கமரா உள்ள இடங்களுக்கு அருகில் நின்று-எதிரே கமரா உள்ளதால் மெதுவாகச் செல்லுமாறு வாகன ஓட்டிகளுக்கு எச்சரித்தல்.
- அரச திணைக்களங்கள் மற்றும் நிறுவனங்களுக்கான மாதாந்த அறிக்கைகள், புள்ளிவிபரங்கள், ஆலோசனைகள் போன்றவற்றை தயாரிப்பதை நிறுத்துதல்.(அவசர சூழ்நிலைகள் தவிர)
- பொலீஸ் வாகனங்களின் மீது சம்பள உயர்வை வலியுறுத்தும் சுலோகங்களை ஒட்டுதல்.
- சம்பளமில்லாமல் overtime-நிர்ணயிக்கப்பட்ட நேரத்திற்கும் கூடுதலாக வேலை பார்ப்பதை நிறுத்துதல்.
- பாடசாலை வலயங்களில் மாணவர்கள் வீதியைக் கடப்பதற்கு உதவுதல்.
