Key Points
- லேபர்கட்சி குறைந்தபட்சம் 49 இடங்களை வென்றுள்ளது - அறுதிப்பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்க இது போதுமானது.
- "நம்பிக்கை எப்போதும் வெறுப்பைத் தோற்கடிக்கும்" என்பதை தேர்தல் முடிவுகள் காட்டுவதாக Premier Daniel Andrews கூறுகிறார்.
- இலவச Kinder அதிக மருத்துவமனைகள் மற்றும் விரிவுபடுத்தப்பட்ட இலவச TAFE படிப்பு என "நேர்மறையான திட்டங்களை" தமது ஆட்சி வழங்கும் என அவர் வாக்குறுதியளித்தார்.
விக்டோரியா நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றிபெற்று, அறுதிப்பெரும்பான்மையுடன், மூன்றாவது முறையாக லேபர் கட்சி ஆட்சியமைக்கிறது.
லேபர் கட்சியின் உறுதியான தேர்தல் வெற்றி, 'வெறுப்பின் மீதான நம்பிக்கையின் வெற்றி' என்று Premier Daniel Andrews பாராட்டியுள்ளார்.
மாநில நாடாளுமன்றத்தின் lower house-கீழ்சபையில் லேபர் கட்சி அறுதிப்பெரும்பான்மையைப் பெற்றுக்கொள்ளும் என்பது இதுவரை வெளியான தேர்தல் முடிவுகளிலிருந்து உறுதியானதையடுத்து, அவரது குடும்பத்தினரின் வாழ்த்துகளுடனும், கட்சி உறுப்பினர்களின் "இன்னும் நான்கு ஆண்டுகள்" என்ற கோஷங்களுடனும் Premier Daniel Andrews வரவேற்கப்பட்டார்.
Legislative Assembly இல், 45 ஆசனங்களைப் பெறும் கட்சி ஆட்சியமைக்கும் என்பதால், லேபர் கட்சி குறைந்தபட்சம் 49 இடங்களை வென்று, மூன்றாவது தடவையாக ஆட்சியமைக்கிறது.
லிபரல்-நஷனல் கூட்டணி 24 இடங்களையும், கிரீன்ஸ் கட்சி குறைந்தது 4 இடங்களையும் பெறுகின்றன.
ஞாயிற்றுக்கிழமை காலை நிலவரப்படி பதினொரு இடங்கள் யாருக்குச் செல்லும் என்பது உறுதியற்ற நிலையில் இருந்தன. இருப்பினும் இவற்றில் ஏழு இடங்களில் லேபர் கட்சி முன்னிலையில் இருந்தது.
அனைத்து விக்டோரியர்களுக்குமான அரசு
லேபர் கட்சிக்கு வாக்களிக்காதவர்கள் உட்பட அனைத்து விக்டோரியர்களுக்குமான ஆட்சியை வழங்கவுள்ளதாக Premier Daniel Andrews உறுதியளித்தார். வெறுப்பின் மீதான நம்பிக்கையின் வெற்றியே அவரது வெற்றிக்கு காரணம் என்று கூறினார்.
"நீங்கள் எப்படி வாக்களித்திருந்தாலும், ஒவ்வொரு விக்டோரியருக்கும் பயனளிக்கும் வகையில் எங்கள் நேர்மறையான திட்டத்தின் ஒவ்வொரு கூறுகளையும் நாங்கள் வழங்குவோம்" என்று Premier Daniel Andrews ஆதரவாளர்களை உற்சாகப்படுத்தினார்.
முன்னாள் பிரதமர் Paul Keatingஐ மேற்கோள் காட்டிய Daniel Andrews, தலைமை என்பது பிரபலமானதைச் செய்வதல்ல. தலைமை என்பது சரியானதைச் செய்வதாகும் எனக் குறிப்பிட்டார்.
அந்தவகையில் "முக்கியமானதை" செய்யும் ஒரு அரசிற்கு மக்கள் ஒப்புதல் அளித்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
கோவிட் தொற்றுநோயால் விக்டோரிய மாநிலம் எதிர்கொண்ட கடுமையான சவால்களையும் அவர் நினைவுகூர்ந்தார்.

100 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் இத்தகைய சம்பவத்திற்கு எதிர்வினையாற்றும்வகையில், விக்டோரியர்கள் ஒன்றிணைந்து தடுப்பூசி போட்டுக்கொண்டதற்காக அவர் மக்களைப் பாராட்டினார்.
"சிலர் கூறுவது போல் நாங்கள் பிளவுபடவில்லை, மாறாக அறிவியலில் உள்ள நம்பிக்கையினாலும், நமது நம்பிக்கையினாலும், ஒருவருக்கொருவர் உள்ள அக்கறையினாலும் நாங்கள் ஒன்றுபட்டுள்ளோம்" என்று Premier கூறினார்.
"அந்த கருணை உணர்வு, அந்த இணைப்பு உணர்வு, நாம் அனைவரும் ஒன்றாக இருக்கிறோம் என்ற உணர்வு இன்றும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. நண்பர்களே, நம்பிக்கை எப்போதும் வெறுப்பை வெல்லும்." என்றார் Daniel Andrews,

சனிக்கிழமை இரவு 10.50 மணியளவில், எதிர்கட்சித்தலைவர் Matthew Guy தோல்வியை ஏற்றுக்கொள்ளும் உரையை நிகழ்த்தினார்.
"இந்தத் தேர்தலுக்குப் பிறகு, விக்டோரியர்களாக நாங்கள் ஒன்றிணைவோம், நமது மாநிலத்தின் சிறந்தவர்கள் நமக்கு முன்னால் இருக்க வேண்டும், நமக்குப் பின்னால் இருக்கக்கூடாது" என்று கட்சி உறுப்பினர்களிடம் அவர் கூறினார்.
இதேவேளை இரண்டாவது தேர்தல் தோல்வியையடுத்து, விக்டோரிய லிபரல் கட்சியின் தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக Matthew Guy தெரிவித்துள்ளார்.
அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள Matthew Guy, கட்சித் தலைவராக நீடிக்கப் போவதில்லை என்பதை உறுதிப்படுத்தினார்.
"புதிய தலைவர் பதவிக்கு வேட்பாளராக இருக்கப்போவதில்லை" என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அடுத்த நான்கு ஆண்டுகளுக்கு விக்டோரியாவை லேபர் கட்சி ஆட்சிசெய்யவுள்ள பின்னணியில், அதிக மருத்துவமனைகள், விரிவுபடுத்தப்பட்ட இலவச TAFE படிப்பு மற்றும் மாநில மின்சார ஆணையத்தின் மறுசீரமைப்பு என "நேர்மறையான திட்டங்களை" தமது ஆட்சி வழங்கும் என Premier Daniel Andrews வாக்குறுதியளித்தார்.
இதேவேளை நாட்டின் பிரதமர் Anthony Albanese நேற்றிரவே தனது twitter தளமூடாக, விக்டோரிய Premier Daniel Andrews-க்கு வாழ்த்துத் தெரிவித்திருந்தார்.
லேபர்கட்சி பிரச்சாரத் தலைவரும், முன்னாள் துணைப் premierருமான James Merlino, இது ஒரு அற்புதமான வெற்றி என்று கூறினார்.
"கடுமையான போட்டி உள்ள இடங்களில் நாங்கள் வெற்றி பெறுவோம் என்று நான் நம்புகிறேன்" என்று அவர் செய்தியாளர்களிடம் கூறினார்.
"ஒட்டுமொத்தமாக இது லேபர் கட்சிக்கு மிகவும் அசாதாரணமான வெற்றியாகும். எங்கள் மாநிலத்தின் premierராக Dan மூன்றாவது முறையாக பதவியேற்கிறார்." என James Merlino குறிப்பிட்டார்.
இதேவேளை குயின்ஸ்லாந்து Premier Annastacia Palaszczuk, "சிறந்த வெற்றிக்கு" தனது வாழ்த்துக்களை தெரிவிப்பதாக நேற்றிரவு twitterஇல் தெரிவித்திருந்தார்.
இதுஒருபுறமிருக்க இதுவரை வெளியான முடிவுகளின்படி, விக்டோரிய கிரீன்ஸ் கட்சி சிறந்த முடிவைப் பெறுவதற்கான பாதையில் உள்ளது என கிரீன்ஸ் தலைவர் Adam Bandt தெரிவித்துள்ளார்.
முன்னெப்போதையும் விட அதிகமான மக்கள் கிரீன்ஸ் கட்சிக்கு வாக்களித்தனர் எனவும், குறிப்பாக காலநிலை மாற்றம் குறித்த நடவடிக்கைக்கும், மலிவு விலையில் வீடுகள் மற்றும் அரசியலில் ஒருமைப்பாட்டைக் கொண்டுவருதல் போன்ற தமது திட்டங்களுக்காக விக்டோரியர்கள் வாக்களித்தனர் எனவும் Adam Bandt தெரிவித்தார்.
கிரீன்ஸ் கட்சி மக்களை ஒருபோதும் ஏமாற்றாது எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
இதுஒருபுறமிருக்க, நேற்றைய தேர்தலின்போது வாக்குச் சீட்டு தட்டுப்பாடு நிலவியதை விக்டோரியா தேர்தல் ஆணையம் twitterஇல் உறுதி செய்தது.
"இடைக்காலமாக, வாக்காளர்களுக்கு வெற்று வாக்குச்சீட்டுகள் வழங்கப்பட்டன, வேட்பாளர்களின் பெயர்கள் வாக்குச்சீட்டில் கையால் எழுதப்பட்டன. இந்த சூழ்நிலையில் இது ஏற்றுக்கொள்ளக்கூடிய அணுகுமுறை" என்று ஆணையம் கூறியது.
விக்டோரிய நாடாளுமன்றத்தில் 88 ஆசனங்களைக் கொண்ட Legislative Assembly அல்லது Lower house, மற்றும் 40 அங்கத்தவர்களைக் கொண்ட Legislative Council அல்லது Upper house ஆகிய இரண்டுக்குமான அங்கத்தவர்களைத் தெரிவுசெய்வதற்கான நேற்றைய தேர்தலில், 1,700 வாக்களிக்கும் மையங்களில், இரண்டு மில்லியன் வாக்குகள் பதிவாகியிருந்தன.
பதிவுசெய்யப்பட்ட 4.4 மில்லியன் விக்டோரியர்களில் கிட்டத்தட்ட பாதி பேர் ஏற்கனவே முன்கூட்டியே வாக்களிக்கும் மையங்களில் அல்லது தபால் மூலமாக வாக்களித்துள்ளதன்காரணமாக வாக்குகளை எண்ணி, இறுதி முடிவுகளை வெளியிடுவது தாமதமாகக்கூடும் என, மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
எது எப்படியிருப்பினும் அறுதிப்பெரும்பான்னையைப் பெற்று விக்டோரியாவில் மூன்றாவது முறையாக லேபர் ஆட்சியமைப்பது உறுதியாகிவிட்ட நிலையில், 3000 நாட்கள் பதவியில் இருக்கும் ஐந்தாவது விக்டோரிய premier ஆகிறார் Daniel Andrews.
எதிர்வரும் ஈஸ்டர் வரை அவர் premierராக இருந்தால், John Cain Jr அவர்களின் சாதனையை முறியடித்து, விக்டோரியாவின் வரலாற்றில் மிக நீண்ட காலம் பணியாற்றிய லேபர் premier என்ற பெருமையை Daniel Andrews பெறுவார்.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது
tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.
