கிறிஸ்மஸ் புதுவருட பண்டிகைக் காலத்தில் பரிசுப்பொதிகள் மற்றும் இணையம் மூலம் கொள்வனவு செய்த பொருட்களின் பெயரால் இடம்பெறும் மோசடிகள் தொடர்ந்தும் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறிப்பாக நீங்கள் வீட்டிலில்லாத காரணத்தால் உங்களது பெயருக்கு வந்த ஒரு பொதியை கையளிக்க முடியவில்லை என்ற மின்னஞ்சல் Australia Post நிறுவனத்தின் பெயரால் பலருக்கும் அனுப்பப்பட்டுள்ளதாகவும், இதன் ஊடாக மோசடி இடம்பெறுவதாகவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
நீங்கள் தவறவிட்ட பொதியை தபால்நிலையத்தில் சென்று பெற்றுக்கொள்வதற்கான திகதி மற்றும் நேரத்தை தெரிவுசெய்வதற்கான இணைப்பிற்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டிருக்கும் இணைப்பிற்கு நீங்கள் சென்றால், அது உங்கள் கணணிக்குள் மோசடிக்காரர்கள் செல்வதற்கு வழியேற்படுத்திவிடும் என்பதால், எவ்வித இணைப்புக்களையும் அழுத்த வேண்டாமென எச்சரிக்கப்பட்டுள்ளது.
'Undeliverable package' என்ற போர்வையில் வரும் மின்னஞ்சல்களைத் திறக்காமலிருப்பதே நல்லது என Australia Post அறிவுறுத்தியுள்ளது.
Australia Post ஒருபோதும் தவறவிட்ட பொதிகளைப் பெற்றுக்கொள்வதற்கென மின்னஞ்சல் இணைப்புக்களை அனுப்புவதில்லை என்பதுடன், வாடிக்கையாளர்களின் தனிப்பட்ட மற்றும் நிதி சம்பந்தப்பட்ட தகவல்களை மின்னஞ்சல் மற்றும் குறுஞ்செய்தியூடாக கோருவதில்லை எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
