Covid 19 என்ற நோயை ஏற்படுத்தும் SARS-CoV-2 வைரஸின் திரிபடைந்த வகை வைரஸ்கள் பல நாடுகளிலும் அவ்வப்போது கண்டுபிடிக்கப்பட்டே வருகின்றன. Alpha முதலில் பிரிட்டனில் கண்டுபிடிக்கப்பட்டது. Beta தென்னாப்பிரிக்காவில் முதலில் அடையாளங்காணப்பட்டது. Gamma பிரேஸில் நாட்டில் இருப்பதாக முதலில் அறிவிக்கப்படது. நாம் எல்லோருக்கும் தெரிந்த வீரியம் மிக்க Delta பற்றி இந்தியாவில் முதன்முதலாக செய்திவந்தது. இதைத்தொடர்ந்து ETA, Iota, Kappa, Lambda, என்ற திரிபடைந்த வைரஸ்கள் பற்றி கடந்த ஆண்டு அறிவிக்கப்பட்டன. இவை கவனத்தில் எடுத்துக்கொள்ளப்பட வேண்டிய திரிபடைந்த வைரஸ்கள் என்று WHO அறிவித்தது.

ஆனால், இவ்வருட ஆரம்பத்தில் Columbia வில் அடையாளங்காணப்பட்டுள்ள Mu என்ற வைரஸ் தொடர்பாக WHO இப்போது பெருமளவில் கவனஞ்செலுத்தி வருகிறது. இந்த Mu என்ற திரிபடைந்த வைரஸ், தென்னமெரிக்கா மற்றும் சில ஐரோப்பிய நாடுகளில் ஒரளவு வேகமாகப் பரவிவருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ‘இருந்தபோதும் Delta அளவு இது வேகமாகப் பரவ வில்லை’ என்று தொற்றுநோயியல் நிபுணர்கள் சொல்கிறார்கள். ஆனால் விஞ்ஞானிகளின் கவலை என்னவென்றால், உலக நாடுகள் பலவற்றிலும் இப்போது செலுத்தப்பட்டுவரும் தடுப்பு மருந்துகள், இந்த திரிபடைந்த Mu வைரஸிற்கு எதிராகவும் immunity என்ற நோயெதிர்ப்புச்சக்தியை உருவாக்குமா என்பதுதான்.
Delta அளவிற்கு வேகமாகப் பரவ வில்லை என்றபோதும் இந்த Mu வைரஸ் ஒருவருக்கு எவ்வளவு மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும்?
Mu என்ற திரிபடைந்த வைரஸ் B1 621 என்ற எண் குறியீட்டால் அடையாளப்படுத்தப்படுகிறது. இதுவரை திரிபு பெற்று உருவாகியுள்ள வைரஸ்களில் முதலில் வந்த Alpha மற்றும் பின்னர் வந்த Delta ஆகிய இரண்டும் வேகமாகப் பரவக்கூடியவை என்பதோடு மோசமான பாதிப்புகளை மனிதர்க்கு ஏற்படுத்த வல்லவை. அவற்றோடு ஒப்பிடும்போது Mu மோசமான விளைவுகளை ஏற்படுத்தாது என்று விஞ்ஞானிகள் கருதினாலும் Mu பற்றி தொடர்ந்து உன்னிப்பாக கவனிக்கவேண்டும் என்று WHO (World Health Organisation - சர்வதேச சுகாதார நிறுவனம்) கருதுகிறது. இதற்கான காரணம் என்னவென்றால் ‘Constellation of mutations that indicate potential properties of immune escape’ என்பதுதான். அதாவது தடுப்பு மருந்துகள் காரணமாக உடலில் உருவாகும் நோயெதிர்ப்புச் சக்திக்கு கட்டுப்படாத சில அம்சங்களை இந்த Mu வைரஸ் கொண்டிருப்பதுதான். ‘இதனால் ஏற்படக்கூடிய ஆபத்து என்னவென்றால், இரண்டு டோஸ் தடுப்புமருந்து போட்டுக்கொண்டவர்கள் கூட இந்த வைரஸால் பாதிக்கப்படக் கூடும் என்பதுதான்’ என்று Queensland பல்கலைக்கழகத்தில் தொற்று நோயியல் துறை நிபுணராகிய டாக்டர் Paul Griffin கூறுகிறார்.

‘இந்த Mu வைரஸின் spike protein என்ற புரதப்பகுதி பெரிதளவு வித்தியாசப்படும் பட்சத்தில், இப்போதுள்ள தடுப்புமருந்துகள் போதுமான பாதுகாப்பை வழங்கமுடியாது’ என்றும் அவர் கூறுகிறார்.
Mu வைரஸ்கள் இப்போதுள்ள தடுப்பு மருந்துகளுக்கு கட்டுப்படாது என்பது நிரூபணமாகியுள்ளதா?
குறிப்பிட்ட தடுப்பு மருந்துகளுக்கு கட்டுப்படாத திரிபடைந்த வைரஸ்கள் ‘escape variant’ என்று அழைக்கப்படுகின்றன. Mu வைரஸ் ஒரு ‘escape variant’ தானா என்பது, இதுவரை நிருபணமாகவில்லை. இருந்தபோதும் ஒரு ‘escape variant’ இற்கு இருக்க க்கூடிய இயல்புகளுள் சில இவற்றுக்கு இருப்பதாக நிபுணர்கள் சொல்கிறார்கள். சர்வதேசமட்டத்தில் பார்க்கும்போது Mu தொடர்பான தொற்றுகள் குறைந்துவருகின்ற போதும் Columbia வில் 39 சதவீதமான தொற்றுக்கள் Mu வைரஸால் ஏற்படுவதாகவும் Ecuador நாட்டில் Mu தொற்றாளர்கள் 13 சதவீத த்தினர் என்றும் WHO சொல்கிறது. Mu வைரஸ் தொடர்பான தொற்றுகள் பற்றி அமெரிக்காவிலும் ஐரோப்பிய நாடுகளிலும் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இந்த ஆய்வுகள் பயனுள்ளவை
WHO நடத்தியுள்ள ஆரம்பகட்ட ஆய்வுகூட ஆய்வுகளைப்பொறுத்தவரை, நோயெதிர்புச்சக்தி காரணமாக உடலில் உருவாகும் antibodies என்ற எதிர்ப்புரதம், Mu வைரஸ்களை பாதிக்கவில்லை என்றே சொல்லப்படுகிறது. இந்த ஆய்வுகூட ஆய்வுகள் பயனுள்ளவை என்றபோதும் இந்த வைரஸ்கள் மனித உடலில் எவ்வாறு செயல்படுகின்றன என்பதை clinical trials என்ற பூரணமான ஆய்வுகளின் மூலமே அறியமுடியும் என்று டாக்டர் Paul Griffin கூறுகிறார். இதே கருத்தை பிரிட்டனில் Public Health Agency யும் தெரிவித்திருக்கிறது. இதை WHO வும் ஆமோதித்திருக்கிறது. அத்தோடு ஆஸ்திரேலியர்களைப் பொறுத்தவரை Mu குறித்து கவலைகொள்ளத்தேவையில்லை என்றும் டாக்டர் Griffin கூறியிருக்கிறார். அமெரிக்காவில் பிரபல தொற்று நோயியல் நிபுணரான Dr. Anthony Fauci கருத்து தெரிவிக்கையில், இந்த variant பற்றி அவானித்து வருவதாகவும் இது பற்றி இப்போது கவலைகொள்ளத்தேவையில்லை என்றும் தெரிவித்திருக்கிறார.
மனித உடலில் எவ்வாறு செயல்படும் என்பதை பூரணமான ஆய்வுகளின் மூலமே அறியமுடியும்
இதைத்தவிர இப்போது கவனத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டுள்ள வேறு variant திரிபுகள் உள்ளனவா?
ஆமாம். பலநாடுகளிலும் பதிவு செய்யப்பட்டுள்ள Eta, அமெரிக்காவில் கடந்த நவம்பர் மாதம் அடையாளங்காணப்பட்ட Iota, இந்தியாவில் கடந்த அக்டோபர் மாதம் பதிவு செய்யப்பட்ட Kappa, கடந்த டிசம்பர் மாதம் Peru வில் அடையாளங்காணப்பட்ட Lambda ஆகியவை குறித்தும் WHO கவனஞ்செலுத்தி வருகிறது .

‘Covid 19 தொற்று நோயை ஏற்படுத்தும் SARS-CoV-2 வைரஸ்கள் பெருமளவில் பரவும் சூழ்நிலையில் mutation என்ற முறையில் மேலும் பல திரிபடைந்த வகைகள் உருவாகும் என்றே எதிர்பார்க்கலாம். ஆகவே variant என்ற திரிபுகள் உருவாகாமல் இருக்க வைரஸ்கள் பரவுவதைக் கட்டுப்படுத்துவதைத்தவிர வேறு வழியில்லை என்றும் தடுப்பு மருந்து ஏற்றிக்கொள்வோரின் எண்ணிக்கை அதிகரிக்க அதிகரிக்க வைரஸ்கள் மனித உடலில் தங்கிப் பெருக முடியாது என்றும் இதனால் பரவுவது கட்டுப்பாட்டுக்குள் வரும்’ என்றும் டாக்டர் Griffin குறிப்பிட்டிருக்கிறார்.
வறிய நாடுகளுக்குத் தடுப்புமருந்துகள்
Covid 19 ஐக் கட்டுப்படுத்தும் முயற்சியில் தடுப்புமருந்துகள் பெரும் பங்காற்றிவரும் பின்னணியில் அபிவிருத்தியடைந்த நாடுகள் தேவைக்கு அதிகமாக தடுப்புமருந்துகளை வாங்கிக் குவித்துவருவதாகவும் வறிய நாடுகள் தடுப்புமருந்துகளைப் பெற்றுக்கொள்ளும் முயற்சியில் பின்தங்கி யிருப்பதாகவும் சொல்லப்படுகிறதே?
உண்மைதான். இன்றைய நிலையில் மேற்குலகநாடுகளில் ஏறக்குறைய 70 சதவீத மக்களுக்கு தடுப்பு மருந்துகள் வழங்கப்பட்டுள்ளன. ஆப்ரிக்கா உட்பட பல வறியநாடுகளில் இது 2 சதவீதம். இந்த ‘vaccine imbalance’ என்ற சம மற்ற தடுப்புமருந்து விநியோகம் பற்றி குரல் கொடுத்து வருகிறார் இங்கிலாந்தின் முன்னாள் பிரதமர் Gordon Brown. மேற்குலக நாடுகள் தேவைக்கு அதிகமான தடுப்புமருந்துகளை வாங்கிக் குவிப்பதுமட்டுமல்ல இவை காலாவதியாகின்ற காரணத்தால் பயன்படாமலும் போகின்றன. இதை ஒரு தார்மீகச் சீற்றமாக (moral outrage) கருதவேண்டும் என்கிறார் திரு. Brown. தேவைக்கு மேல் 3 கோடி தடுப்பு மருந்துகள் மேற்குலக நாடுகள் வசமிருப்பதாகவும் இது அக்டோபர் மாத இறுதியில் 5 கோடியாக அதிகரிக்கும் என்றும் அவர் கூறுகிறார். இது தொடர்பாக உயர்மட்ட உச்சிமாநாடு ஒன்று நடத்தப்படவேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்திருக்கிறார். Joe Biden, Boris Johnson, Angela Merkel , Emmanuel Macron ஆகியோரது ஏகபோக கட்டுப்பாட்டிலேயே உலக தடுப்புமருந்து விநியோகம் இருப்பதாக அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
‘None of us are safe anywhere until all are safe everywhere எல்லா நாடுகளிலும் உள்ளவர்கள் பாதுகாப்பாக இல்லாதபோது எங்களுள் யாரும் பாதுகாப்பாக இருக்கமுடியாது’ என்றும் அவர் கூறியிருக்கிறார்.

இதே கருத்தை WHO தலைவர் Tedros Adhanom Ghebreyesus அவர்களும் தெரவித்திருக்கிறார்.
