உலகளாவிய ரீதியில் WhatsApp-செயலி மீது கடந்த திங்களன்று மேற்கொள்ளப்பட்ட தாக்குதலின் பின்னணியில் அரசாங்கங்களே உள்ளதாக சந்தேகிப்பதாக சைபர் பாதுகாப்பு வல்லுனர்கள் தெரிவித்துள்ளார்கள்.
மூன்றாவது நபரினால் ஒட்டுக்கேட்க முடியாத உயர்பாதுகாப்புடைய தொடர்பாடல்முறையாக கருதப்பட்ட WhatsApp மீது உலகளாவிய ரீதியில் கடந்த திங்கட்கிழமை தாக்குதல் நடத்தப்பட்டதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
WhatsApp பயன்படுத்தும் சுமார் 1.5 பில்லியன் பயனாளர்களில் எத்தனைபேர் இந்த தாக்குதலுக்குள்ளானார்கள் என்பது குறித்து உடனடியாக தமக்கு தெரியாது என்று அறிவித்த WhatsApp நிறுவனம், தகவல்களை பாதுகாத்துக்கொள்வதற்கான பொறிமுறையையை அறிவித்திருந்திருந்தது.
தாங்கள் வெளியிட்டிருந்த புதிய update-சீராக்கல் கோப்பினை தரவிறக்கிக்கொள்ளும்படி அனைத்து பயனாளர்களையும் கோரியிருந்தது.
ஆனால், மேற்படி தாக்குதல் குறிப்பிட்ட நபர்களை இலக்குவைத்தே மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவும் அரசுகளை அம்பலப்படுத்துகின்ற மனித உரிமை அமைப்புக்களை சேர்ந்தவர்கள் மற்றும் குற்றவாளிகள் போன்றவர்களை இலக்குவைத்தே இந்த தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இஸ்ரேலை சேர்ந்த நிறுவனத்தின் உதவியுடன் உருவாக்கப்பட்ட தாக்குதல் பொறிமுறையே இதற்காக பயன்படுத்தப்பட்டிருக்கிறது என்றும் கூறப்பட்டது.
இந்த தாக்குதலானது, WhatsApp-க்கு விடுக்கப்பட்ட ஒரு அழைப்பின் மூலம் நடத்தப்பட்டதாகவும் அந்த அழைப்பினை ஏற்றுக்கொண்டாலோ நிராகரித்தாலோ இரண்டு வழிகளாலும் குறிப்பிட்ட பயனாளரின் WhatsApp கணக்கிற்குள் புகுந்து அங்குள்ள சகல தகவல்களையும் பெற்றுக்கொள்வதும் தொடர்ந்தும் அந்த நபரை கண்காணிக்கும் வகையிலான அதிகாரத்தை பெற்றுக்கொள்வதும்தான் இந்த தாக்குதலின் நோக்கமாக இருந்தது என்று WhatsApp அறிவித்திருந்தது.
WhatsApp நிறுவனமும் ஐந்து வருடங்களுக்கு முன்னர் அந்த நிறுவனத்தை வாங்கிக்கொண்ட பேஸ்புக் நிறுவனமும் இந்த தாக்குதல் தொடர்பாக உள்ளக விசாரணைகளை நடத்தியதுடன் அமெரிக்க அரசிடமும் இதுகுறித்த முறைப்பாட்டினை மேற்கொண்டிருந்தன.
ஆனால், தற்போது வெளிவந்துகொண்டிருக்கும் தகவல்களின்படி, இந்த தாக்குதலானது குறிப்பிட்ட நபர்களின் WhatsApp வழியான இரகசிய தொடர்பாடல்களை ஒட்டுக்கேட்பதற்கும் அவர்களது இரகசிய ஆவணங்களை பெற்றுக்கொள்வதற்கும் தங்களுடன் இணைந்து பணியாற்றும் இரகசிய பாதுகாப்பு கம்பனிகளை வைத்து அரசாங்கங்களே இந்த நடவடிக்கையை மேற்கொண்டிருப்பதாக சந்தேகிப்பதாக Sheffield Hallam பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர் Scott Storey கூறியிருக்கிறார்.
