26 வயதான Chloe Haines என்ற பெண், கடந்த ஆண்டு ஜூன் மாதம் லண்டன் Stansted விமான நிலையத்திலிருந்து துருக்கியின் Dalaman என்ற இடத்திற்கு Jet2 விமானத்தில் சென்று கொண்டிருந்தபோது, மது போதையில் இருந்தார். விமான பணியாளர்கள் மற்றும் சக பயணிகள் தடுத்ததையும் மீறி, பறந்து கொண்டிருந்த விமானத்தின் கதவைத் திறக்க எத்தனித்தார்.
"இது வரை நாம் எதிர்கொண்ட மோசமான பயணிகளின் நடத்தையை விட Chloe Haines நடத்தை மிக மோசமானதொன்றாகும். அவரது வாழ்நாள் முழுவதும் எங்கள் விமானத்தில் பறக்க தடை விதித்துள்ளோம்" என்று Jet2.com மற்றும் Jet2holidays தலைமை நிர்வாகி Steve Heapy வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, இரண்டு பிரித்தானிய வான்படை போர் விமானங்கள், Jet2 விமானத்திற்குப் பாதுகாப்பாக இரு பக்கமும் பறந்து, Stansted விமான நிலையத்தில் தரையிறங்கச் செய்தன.
அவரது நடத்தை காரணமாக ஏற்பட்ட செலவென்று, 163,000 டொலருக்கும் அதிகமாக பணம் Chloe Haines செலுத்த வேண்டுமென்று Jet2 விமான நிறுவனம் கோரியுள்ளது.
ஏற்கனவே மன நலம் பாதிக்கப்பட்டுள்ள Chloe Haines, அதற்கான மருந்துகளை உட்கொண்டிருந்த அதே வேளை மது அருந்தியதால் அவர் என்ன செய்தார் என்பது அவருக்கே தெரியாது என்று Chloe Hainesஇன் வழக்குரைஞர் வாதிட்டிருந்தார். தான் செய்தது குற்றம் என்று Chloe Haines ஒப்புக் கொண்டுள்ளார்.
இது போல் வேறு சம்பவங்களும் இடம்பெற்றிருப்பதால், 24 மணி நேரமும் விமான நிலையத்தில் மது விற்பனை செய்யப்படுவது தடை செய்யப்பட வேண்டும் என்ற குரல் பிரித்தானியாவில் வலுப்பெற்று வருகிறது.
