ஆஸ்திரேலியாவில் கடந்த வருடம் வேலைத்தளத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 157 என்று அரச தரவுகள் தெரிவித்துள்ளன. இது கடந்த வருடத்துடன் ஒப்பிடும்போது 13 மரணங்கள் அதிகமாகும்.
இவ்வாறு மரணித்தவர்களில் மூன்றிலொரு பகுதியனானவர்கள் - 55 பேர் - போக்குவரத்து மற்றும் அதனுடன் தொடர்புடைய துறைகளிலும், 31 பேர் விவசாயம் - வனத்துறை - மீன்பிடி ஆகிய துறைகளிலும், 24 பேர் கட்டட துறையிலும், 8 பேர் கனிய மணல்துறையிலும், ஏழு பேர் உற்பத்தி துறையிலும், ஆறுபேர் மின்சாரம் - வாயு - நீர் முகாமைத்துவ துறையிலும் உயிரிழந்துள்ளார்கள் என்று அந்த தரவு மேலும் தெரிவித்துள்ளது.
தவறி விழுந்தவர்கள், மன உளைச்சலால் கீழே விழுந்தவர்கள், வேறு பொருட்களால் தாக்குண்டு விழுந்தவர்கள் என்று பல காரணிகள் இந்த சாவுகளுக்கு காரணமாகியுள்ளன என்று தெரிவித்துள்ள, வேலைத்தள பாதுகாப்பு ஆய்வு அமைப்பு, 2017 - 2018 ஆம் ஆண்டு காலப்பகுதியில் சுமார் ஒரு லட்சத்து ஏழாயிரம் பேர் வேலைத்தளத்தில் காயமடைந்து குறைந்தது ஒரு வாரம் விடுப்பு எடுக்கவேண்டியிருந்திருக்கிறது என்று குறிப்பிட்டுள்ளது.
வேலைத்தளத்தில் தொழிலாளர்களுக்கு ஏற்பட்ட காயங்கள் மற்றும் நோய்களினால் கடந்த வருடம் ஆஸ்திரேலிய பொருளாதாரத்திற்கு ஏற்பட்ட நட்டம் 61 பில்லியன் டொலர்கள் என்றும் அந்தப்புள்ளிவிவரம் மேலும் தெரிவிக்கிறது.
