வாகனம் ஓட்டும் போது கைபேசி பயன்படுத்துபவர்களைக் கண்டுபிடிக்கவென உலக தரத்தில் அமைந்த சிறப்பு கமராக்கள் ஆஸ்திரேலியாவில் முதல்முறையாக நியுசவுத் வேல்ஸ் மாநிலத்தில் பயன்படுத்தப்படவுள்ளன.
இதற்கான சட்டமுன்வடிவுக்கு நியூசவுத் வேல்ஸ் நாடாளுமன்றம் அண்மையில் அனுமதி வழங்கியுள்ள நிலையில் ஜுலை முதலாம் திகதியிலிருந்து இந்நடைமுறை அமுலுக்கு வரும்.
சவுதி அரேபியா உள்ளிட்ட நாடுகளில் கைபேசி பாவனையாளர்களைக் கண்டுபிடிப்பதற்கான அதிநவீன தொழிநுட்பத்துடன் அமைந்த கமராக்கள் பயன்படுத்தப்பட்டுவரும் நிலையில், இவற்றை நியூசவுத் வேல்ஸ் மாநிலத்தில் பரீட்சார்த்த முறையில் பொருத்துவது என்றும் அம்முயற்சி வெற்றியளிக்கும் பட்சத்தில் அது சட்டமாக்கப்படும் எனவும் நியூ சவுத்வேல்ஸ் மாநில பெருந்தெருக்கள் அமைச்சர் Melinda Pavey தெரிவித்தார்.
கைபேசி பாவனையால் 2012- 2-17 வரையான காலப்பகுதியில் 184 விபத்துக்கள் இடம்பெற்றதாகவும் இதில் 7 பேர் பலியாகியதுடன் 105 பேர் காயமடைந்ததாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதுதொடர்பில் நாடாளுமன்றத்தில் உரையாற்றிய Nationals MP Ben Franklin 2016-17 நிதியாண்டு காலப்பகுதியில் நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் கைபேசி பாவனைக்கான 40 ஆயிரம் அபராதக் கடிதங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும், ஆனால் மில்லியன் கணக்கானக்கானவர்கள் வாகனம் ஓட்டும்போது கைபேசியைப் பயன்படுத்துவதாகவும் இவர்களைக் கண்டுபிடிக்க இப்படியான நடவடிக்கை தேவை எனவும் தெரிவித்தார்.
