ANZAC தினம் ஆஸ்திரேலியாவின் மிகவும் முக்கியமான தேசிய நாள்களில் ஒன்றாகும்.
இந்த நாளில் ஒவ்வொரு ஆண்டும், போர்கள், மோதல்கள் மற்றும் அமைதி காக்கும் பணிகளில் பணியாற்றியவர்களை நினைவுகூர மக்கள் ஒன்று கூடுகிறார்கள்.
ஆனால் ANZAC தினத்தைப் புரிந்து கொள்வதற்கு — குறிப்பாக நீங்கள் ஆஸ்திரேலியாவுக்கு புதிதாக வந்தவராக இருந்தால் — சிறிது காலம் எடுக்கலாம்.
நாம் யாரின் கதைகளை நினைவுகூருகிறோம் — மேலும் நாம் எப்போதும் கேட்காத கதைகள் உள்ளனவா?
இந்த விவரணத்தில் ஆஸ்திரேலிய வரலாற்றின் ஒரு முக்கியமான பகுதியை ஆராய்கிறோம் — அது பல நேரங்களில் கவனிக்கப்படாமல் போன ஒன்று — பூர்வீகக்குடி மற்றும் டோரஸ் ஸ்ட்ரெய்ட் தீவு மக்களின் சேவை.
பல பூர்வீகக்குடி மற்றும் டோரஸ் ஸ்ட்ரெய்ட் தீவு மக்கள் ஆஸ்திரேலிய ஆயுதப்படைகளில் சேவை செய்துள்ளனர். அதில் முதல் மற்றும் இரண்டாம் உலகப்போர்களும் அடங்கும் — அதிகாரப்பூர்வமாக சேர அனுமதிக்கப்படாத காலங்களிலும், அவர்கள் பூர்வீகக்குடி அல்லாத ஆஸ்திரேலியர்களுடன் சேர்ந்து சேவை செய்துள்ளனர்.
இன்று, இந்தக் கதைகள் அங்கீகரிக்கப்பட்டு நினைவுகூரப்பட வேண்டும் என்ற முயற்சிகள் அதிகரித்து வருகின்றன.

Ngunnawal/Gomeroi இனத்தைச் சேர்ந்த Michael Bell இந்தப் பணியில் ஈடுபட்டுள்ளார். ஆஸ்திரேலிய போர் நினைவகத்தில் Indigenous Liaison Officerஆக பணியாற்றும் அவர், பூர்வீகக்குடி மற்றும் டோரஸ் ஸ்ட்ரெய்ட் தீவு மக்களின் சேவை மற்றும் தியாகத்தை அடையாளம் காணவும் அங்கீகரிக்கவும் உதவுகிறார். குறிப்பாக போர்படையில் சேவை செய்தவர்களையும், நாட்டின் உள்ளேயே போர் முயற்சிகளை ஆதரித்தவர்களின் சேவையையும் அங்கீகரிக்க உதவுகிறார்.
இந்தப் பணியின் மூலம், ஒரு தெளிவான சித்திரம் வெளிப்படத் தொடங்கியுள்ளதாக Michael Bell கூறுகிறார்.
ஆஸ்திரேலிய ஆயுதப்படைகளில் சேவை செய்துள்ள பூர்வீகக்குடி மற்றும் டோரஸ் ஸ்ட்ரெய்ட் தீவு மக்களின் எண்ணிக்கை, மேலும் பதிவுகள் கண்டுபிடிக்கப்படுவதால் தொடர்ந்து அதிகரித்து வருகின்றது.
ஆனால் அடிக்கடி கேட்கப்படும் ஒரு கேள்வி — இந்த எண்ணிக்கைகள் பூர்வீகக்குடி அல்லாத ஆஸ்திரேலியர்களுடன் ஒப்பிடும்போது எப்படி இருக்கின்றன?
ஏறக்குறைய ஒரே அளவில் இருப்பதாக Michael Bell கூறுகிறார்
அதாவது, முக்கியமான தடைகளை எதிர்கொண்ட போதிலும், பூர்வீகக்குடி மக்கள் பூர்வீகக்குடி அல்லாத ஆஸ்திரேலியர்களுக்கு இணையான அளவில் சேவையில் சேர்ந்துள்ளனர்.
அப்படியானால் அந்த தடைகள் என்ன?
பல மட்டங்களில் கட்டுப்பாடுகள் இருந்தன என்று Michael Bell விளக்குகிறார்.

பூர்வீகக்குடி மக்களுக்கு நாட்டின் பல பகுதிகளுக்கு சுதந்திரமாகச் செல்ல கட்டுப்பாடுகள் இருந்தன.
அவர்கள் முழுமையான ஆஸ்திரேலிய குடிமக்களாக அங்கீகரிக்கப்படவில்லை — சில சந்தர்ப்பங்களில், சட்டத்தின் கீழ் மனிதர்களாக கூட கருதப்படவில்லை.
மேலும், இராணுவக் கொள்கைகள் பெரும்பாலும் ஐரோப்பியப் பாரம்பரியம் இல்லாதவர்களை விலக்கி வைத்தன.
இவை அனைத்தும் சேர்ந்து, சேவையாற்ற விரும்பியவர்களுக்குப் பெரும் தடைகளை உருவாக்கின.
ஆனால் இந்தக் கட்டுப்பாடுகள் இருந்தபோதிலும், பலர் இராணுவத்தில் சேருவதற்காக அசாதாரணமான முயற்சிகளை மேற்கொண்டனர்.
இத்தகைய கதைகள் உறுதியையும் பொறுமையையும் — சம உரிமைகள் வழங்கப்படாத நாட்டிற்கே சேவை செய்யும் ஆழமான விருப்பத்தையும் வெளிப்படுத்துகின்றன.
ஆனால் இந்த வீரர்கள் வீட்டிற்கு திரும்பிய பிறகு என்ன நடந்தது?
பல பூர்வீகக்குடி முன்னாள் வீரர்களுக்கு, போர் முடிவடைந்தது சமத்துவத்தை அர்த்தப்படுத்தவில்லை.
அவர்கள் திரும்பிய சமுதாயம் இன்னும் பாகுபாடு மற்றும் கட்டுப்பாடுகளால் நிரம்பியதாகவே இருந்தது.
அவர்கள் மீண்டும் பிரிவினைக்குள் தள்ளப்பட்டனர். சட்டப்பூர்வ அங்கீகாரம் இல்லாமை, நில உரிமை மீதான கட்டுப்பாடுகள், சம ஊதியமின்மை, தங்கள் குழந்தைகளை நிர்வகிப்பதில் உள்ள கட்டுப்பாடுகள், 'திருடப்பட்ட தலைமுறைகள்' என அனைத்தும் முழு வீச்சில் இருந்ததாக Michael Bell சொல்கிறார்.
சில பூர்வீகக்குடி முன்னாள் ராணுவ வீரர்களால் சலுகைகளைப் பெற முடிந்தாலும் பலருக்கு சமூக மற்றும் அரசியல் கட்டுப்பாடுகள் காரணமாக ஆதரவு கிடைக்கவில்லை.
மற்ற முன்னாள் வீரர்களுடன் தொடர்பு கொள்ளவும் கடினமாக இருந்தது.
போரில் இருந்து திரும்பிய வீரர்கள் RSL கிளப்புகளில் சேர ஊக்குவிக்கப்பட்டனர் —இவை முன்னாள் ராணுவ வீரர்களுக்கு ஆதரவளிக்கும் மற்றும் ANZAC தின விழாக்கள் போன்ற நிகழ்வுகளை ஏற்பாடு செய்யும் சமூக அமைப்புகளாகும்.
ஆனால் இவை பெரும்பாலும் மது வழங்கப்படும் இடங்களாக இருந்ததால், பூர்வீகக்குடி மக்களுக்கு அங்கு நுழைய கட்டுப்பாடுகள் இருந்தன.
இதனால் அவர்கள் ஆதரவும் சமூக தொடர்பும் பெற முடியாமல் இருந்தனர்.
இன்று, மறக்கப்பட்ட இந்த வரலாற்றுக்கு அதிக அங்கீகாரம் கிடைத்து வருகிறது.

சமீப காலங்களில், ஆஸ்திரேலிய போர் நினைவகம், பூர்வீகக்குடி மற்றும் டோரஸ் ஸ்ட்ரெய்ட் தீவு மக்களின் தீவு பின்னணி கொண்டவர்களின் சேவையை கண்டறிந்து பகிர்வதில் அதிகளவான செயற்பாட்டை மேற்கொண்டுள்ளதாக Michael Bell விளக்குகிறார்:
நீண்ட காலமாக மறைக்கப்பட்டிருந்த கதைகள் இப்போது மீண்டும் கண்டறியப்பட்டு, குடும்பங்களுடனும் சமூகங்களுடனும் பகிரப்பட்டு வருகின்றன.
குடும்பங்களுக்கு, இத்தகைய தருணங்கள் மிகவும் வலிமையானவை — அவை வரலாறு, அடையாளம் மற்றும் உறவுகளை மீண்டும் இணைக்க உதவுகின்றன.
அப்படியானால், இந்த ANZAC தினத்தில் — குறிப்பாக நீங்கள் ஆஸ்திரேலியாவுக்கு புதிதாக வந்தவராக இருந்தால் — என்ன நினைவில் கொள்ள வேண்டும்?
இது ஆஸ்திரேலியாவின் முழுமையான வரலாற்றைப் பற்றியது —என்பதுடன் இப்போது, அனைவரும் ஆஸ்திரேலியாவின் முழு வரலாற்றையும் அதன் உண்மை வடிவில் காண வேண்டும் என Michael Bell ஊக்குவிக்கிறார்.
ANZAC தினம் என்பது போர்களிலும் மோதல்களிலும் சேவை செய்தவர்களை நினைவுகூரும் ஒரு நேரமாகும். பல ஆஸ்திரேலியர்களுக்கு, இது வரலாற்றை மதித்து ஒன்றிணையும் ஒரு தருணமாகும்.
ANZAC தினத்தைப் புரிந்துகொள்வது என்பது ஆஸ்திரேலியாவின் முழு கதையையும் புரிந்துகொள்வதையே குறிக்கிறது.
அதில் Aboriginal மற்றும் Torres Strait Islander மக்களின் பங்களிப்புகளையும் அவர்கள் எதிர்கொண்ட சவால்களையும் அங்கீகரிப்பதும் அடங்கும்.
இந்தக் கதைகள் மேலும் பரவலாக பகிரப்பட்டுவரும் போது, அவை ஆஸ்திரேலியாவின் கடந்த காலத்தையும் தற்போதைய நிலையையும் முழுமையாக வெளிப்படுத்துகின்றன.
SBS தமிழின் ஏனைய நிகழ்ச்சிகளைக் கேட்க எமது podcast பக்கத்திற்குச் செல்லுங்கள்.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக SBS South Asian எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்து கொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள். SBS South Asian YouTube channel ஊடாக எமது podcasts மற்றும் videos-ஐப் பார்வையிடுங்கள்.
ஆஸ்திரேலியாவில், புதிய வாழ்க்கையைத் தொடங்குபவர்கள், புதிதாகக் குடியேறியவர்கள், பயனடையும் வகையில் மதிப்புமிக்க தகவல்கள் மற்றும் உதவிக் குறிப்புகளை Australia Explained - “ஆஸ்திரேலியாவை அறிவோம்” நிகழ்ச்சித் தொடர் எடுத்து வருகிறது.
உங்களிடம் ஏதேனும் கேள்விகள் அல்லது வேறு தலைப்புகள் குறித்த யோசனை இருந்தால், australiaexplained@sbs.com.au என்ற மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொள்ளவும்.
To hear more podcasts from SBS Tamil, subscribe to our podcast collection. Listen to SBS Tamil at 12 noon on SBS South Asian channel on Mondays, Wednesdays, Thursdays and Fridays & 8pm on Mondays, Wednesdays, Fridays and Sundays on SBS Radio 2. Find your area’s radio frequency by visiting our tune in page. For listening on DAB+ digital radio, search for ‘SBS Radio’. On SBS South Asian YouTube channel, follow SBS Tamil podcasts and videos. You can also enjoy programs in 10 South Asian languages, plus SBS Spice content in English. It is also available on SBS On Demand










