தமிழகப் பார்வை!: கர்ணன் கோவையில் கைது
The News Minute Source: The News Minute
நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் சிறைத்தண்டனை பெற்று கடந்த 43 நாட்களாக தலைமறைவாக இருந்த கொல்கத்தா உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி கர்ணன் நேற்று இரவு கோவையில் கைது செய்யப்பட்டார். தமிழகத்தை பூர்விகமாக கொண்ட நீதிபதி கர்ணன் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாக பணியாற்றியபோது, உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி மற்றும் சகா நீதிபதிகள் மீது ஊழல் குற்றச்சாட்டுகளை சுமத்தினர். பின்னர் கர்ணனை கொல்காத்தா உயர் நீதிமன்றத்திற்கு மாற்றி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. பின்னர் இந்திய உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி மற்றும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் மீது கடும் குற்றச்சாட்டுகளை சுமத்திய நீதிபதி கர்ணன் அவர்களுக்கு சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தார். பின்னர் இந்திய உச்சநீதிமன்றம் அவருக்கு ஆறு மாதம் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. தீர்ப்பிற்கு பிறகு தலைமறைவாக இருந்த நீதிபதி கர்ணன் இந்த மாதம் 12 -ஆம் தேதி ஓய்வு பெற்றார். நேற்று கொல்கத்தா போலீசார் முன்னாள் நீதிபதி கர்ணனை கோவையில் உள்ள சிறிய கிராமத்தில் கைது செய்தனர். கொல்கத்தா உயர்நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்காக முன்னாள் நீதிபதி கர்ணன் இன்று கொல்கத்தா கொண்டு செல்லப்படுகிறார். முன்னாள் நீதிபதி கர்ணனின் கைது மற்றும் அதன் பின்னணி குறித்து விளக்குகிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்.
Share



