"தாய்மொழி மூளையில் உறைந்து போய் இருக்கும்"

Source: SBS Tamil
உலகத் தாய்மொழி நாள் பெப்ரவரி 21 அன்று உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகின்றது. 1952 இல் இந்த நாளன்று அன்றைய கிழக்கு பாகித்தான் தலைநகர் தாக்காவில் வங்காள மொழியை அரசகரும மொழியாக ஆக்கக் கோரி நடத்தப்பட்ட போராட்டத்தின் போது உயிர்நீத்த நான்கு மாணவர்களின் நினைவாக இந்நாள் உலகளாவிய முறையில் மொழி தொடர்பாக நினைவு கூரப்படும் சிறப்பு நாளாகக் கொண்டாடப்படுகிறது. வங்காள தேச அரசாங்கத்தின் முயற்சிகள், அனைத்துலக அமைப்புகளது ஆதரவுகள் காரணமாக ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனத்தால் (UNESCO) ஐக்கிய நாடுகள் அமைப்பின் 1999, பெப்ரவரி 21 பொது மாநாட்டின் 30 ஆவது அமர்வில் இந்நாளை அனைத்துலக தாய் மொழிநாளாக அறிவித்தது. பல்வேறு சமூகங்களின் மொழி, பண்பாட்டுத் தனித்தன்மைகளைப் பேணுவதுடன் அவற்றுக்கிடையிலான ஒற்றுமையையும் உருவாக்கும் எண்ணத்தோடு இந்த நாளை யுனெஸ்க்கோ அறிவித்தது. 2000 ஆம் ஆண்டு முதல் இந்த நாளானது உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகின்றது. இந்த சர்வதேச தாய்மொழி தினத்தை சிறப்பிக்குமுகமாகவும் தங்கள் தாய் மொழியைப் பாதுகாக்க தங்களது உயிரைத் தியாகம் செய்த அனைவரையும் மதிக்குமுகமாகவும் ஆஸ்திரேலிய தமிழ்ச் சங்கத்தின் தலைவர் முனைவர் செல்வராஜா மாரிமுத்து மற்றும் NSW Federation of Community Schools உப தலைவர் திருநந்தக்குமார் ஆகியோரது கருத்துகளுடன் நிகழ்ச்சி படைக்கிறார் குலசேகரம் சஞ்சயன்.
Share



