மனிதன் நிலவில் காலடி வைத்து 50 ஆண்டுகள் பூர்த்தியடைந்திருக்கின்றன. இதுதொடர்பில் விவரணம் ஒன்றை முன்வைக்கிறார் பிரபல வானொலியாளர் இரா.சத்தியநாதன் அவர்கள். நிகழ்ச்சித் தயாரிப்பு றைசல்.
‘மனிதன் எடுத்துவைத்த சிறிய காலடி, இது மனித குலத்தின் பெரும் பாய்ச்சல்’ என்று சந்திரனில் தனது காலடியை முதலில் வைத்த அமெரிக்க விண்வெளிவீரர் Neil Armstrong கூறியது, மனிதகுல வரலாற்றில் பதிவான பிரபலமான வாசகங்களில் ஒன்றாகும்.
அமெரிக்காவுக்கும் சோவியத் யூனியனுக்குமிடையே Cold War என்ற பனிப்போர் உச்சகட்டத்தில் இருந்த அறுபதுகளில், அணு ஆயுத தொழில்நுட்பத்திலும் விண்வெளி விஞ்ஞான தொழில்நுட்பத்திலும் ‘கில்லி’ யார் என்பதை நிர்ணயிக்கும் போட்டியாகவே இது ஆரம்பமானது.
சோவியத் யூனியன் இதில் முந்திக்கொண்டு, 1961 ஏப்ரல் 12ஆம் நாள் மனிதனை விண்வெளிக்கு அனுப்பிய பெருமையைத் தட்டிச்சென்றது. வஸ்தோக் என்ற விண்கலத்தில் விண்வெளிக்குச் சென்ற யூரி ககாரின், பூமியின் சுற்றுவட்டப் பாதையில் 108 நிமிடங்கள் பயணித்து விட்டு பத்திரமாக, பூமிக்குத்திரும்பினார்.
இந்த சாதனை நிகழ்த்தப்பட்ட 43ஆவது நாள், அமெரிக்காவின் அப்போதைய அதிபர் John F Kennedy ‘இன்னும் பத்து ஆண்டுகளில், நிலவுக்கே மனிதனை அனுப்பி பத்திரமாக பூமிக்குக் கொண்டுவருவோம்’ என்ற அறிவித்தலை வெளியிட்டார். ஆனால் அடுத்த இரண்டு ஆண்டுகளுக்குள் அவர் துப்பாக்கியால் சுடப்பட்டு மரணமடைந்தார். அவரது சபதத்தை நிறைவேற்ற அமெரிக்க விஞ்ஞானிகள் உழைத்த உழைப்பின் பயனாகத்தான் 1969 இல் Apollo 11 mission சாத்தியமானது.
பூமியிலிருந்து 3,84,000 கி.மீ. தொலைவில் உள்ள சந்திரனுக்கு, 1969 ஆம் ஆண்டு ஜூலை 16ஆந்திகதி ஏவப்பட்ட அப்பல்லோ 11 விண்கலத்தில் Neil Armstrong, Aldrin மற்றும் Michael Collins ஆகிய மூன்று விண்வெளி வீரர்கள் சென்றார்கள். Rocket, launch escape system, command module, lunar module என்ற நான்கு பகுதிகளைக் கொண்ட Apollo 11 மிகப்பெரும் பொருட்செலவில் மனிதனை நிலவுக்கு அனுப்ப எடுத்த பெரு முயற்சி. இதன் பலனாக Neil Armstrong, Aldrin ஆகிய இருவரும் நிலவில் கால் பதித்தனர்.
மனிதன் நிலவில் இறங்கிய நிகழ்வு பொய்யான நாடகம் என்று பல்வேறு குழுக்கள் விவாதித்து வருகின்றன. இதை Moonlanding conspiracy theories என்கிறார்கள். ‘இது ஹாலிவுட்டின் டிஸ்னி நிறுவனம் தயாரித்த வீடியோ பதிவே’ என்று சிலர் வாதிடுகிறார்கள். எந்த ஒரு விடயத்திலும் எதிர்மறையான விமரிசனங்கள் பலரது கவனத்தையும் கவர்வது மட்டுமல்ல, பொதுசன ஊடகங்களுக்கும் இது நல்ல ‘தீனி’ யாக அமைவதே இவை பகிரப்படுவதற்கு பிரதான காரணங்களாகும்.




