SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.
டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.
நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் ஆகிய ஐம்பூதங்களும் இல்லாமல் நாம் உயிர்வாழ முடியாது. ஆனால், அவற்றில் ஏதாவது ஒன்றாவது சீற்றம் கொண்டால், இயற்கை இடையூறுகள் ஏற்படலாம். சில வேளைகளில் இயற்கைப் பேரழிவுகள் ஏற்படலாம்.

பனிச்சரிவுகள் மற்றும் நிலச்சரிவுகள்; நில நடுக்கங்கள்; எரிமலை வெடித்தல்; புயல்; வெள்ளம்; நீரில் தோன்றும் சுழிகள்; நீரியல் நிகழ்வுகள்; சுனாமி; வானிலை பேரழிவுகள்; வெப்ப மண்டல சூறாவளி; பனிப்புயல்; ஆலங்கட்டி மழை; குளிர் அலைகள்; வெப்ப அலைகள்; வறட்சி; இடியுடன் கூடிய பெரு மழை; சூறாவளி; தீ புயல்கள்; காட்டுத் தீ; சூரியனில் ஏற்படும் பட்டொளி என்று பல்வேறு வகை இயற்கை நிகழ்வுகள் சில வேளைகளில் மக்களின் உயிர்களுக்கோ, உடமைகளுக்கோ, மற்றைய உயிரினங்களுக்கோ, அல்லது கட்டுமானங்களுக்கோ அழிவை ஏற்படுத்தலாம்.
அண்மையில் மெல்பன் நகரில் நிலநடுக்கம் நிகழ்ந்தது நாம் அறிந்த செய்தி. அது தொடர்பாக, ஆஸ்திரேலிய வரலாற்றில் பதியப்பட்ட இயற்கை அழிவுகள் குறித்த ஒரு பார்வை இது.

1851ஆம் ஆண்டு முதல் இன்று வரை நம் நாட்டில் 55 நில நடுக்கங்கள் நிகழ்ந்துள்ளன என்றால் நம்புவீர்களா? ஆனால், ஒப்பீட்டளவில், நில நடுக்கங்களால் ஏற்படும் உயிர்ச்சேதங்கள் மிகக் குறைவு தான். பதியப்பட்ட 55 நில நடுக்கங்களின் போது 15 பேர் மட்டுமே உயிர் இழந்துள்ளார்கள். வளர்ந்து வரும் நாடுகளில் நில நடுக்கங்கள் நடந்தால் உயிர்ச்சேதங்கள் அதிகமாக இருக்கும், நம் நாட்டைப் போன்ற வளர்ந்த நாடுகளில், உயிர்ச்சேதங்கள் குறைவாக இருந்தாலும், மக்களின் உடமைகளுக்கும் கட்டுமானங்களுக்கும் ஏற்படும் அழிவு ஒப்பீட்டளவில் மிக அதிகமாக இருக்கும்.
தெற்கு ஆஸ்திரேலியாவிலுள்ள Warooka என்ற இடத்தில் 1902ஆம் ஆண்டு ஏற்பட்ட நில நடுக்கத்தில் இரண்டு பேர் உயிரிழந்தார்கள். NSW மாநிலத்திலுள்ள New Castle என்ற இடத்தில் 1989ஆம் ஆண்டு கிறிஸ்மஸ் தினத்திற்கு மூன்று நாள் கழித்து, மக்கள் இயல்பாக நடமாடிக் கொண்டிருந்தார்கள். ஆனால், பேருந்து ஓட்டுநர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டிருந்ததால், வழமையை விட New Castle நகரில் மக்கள் கூட்டம் குறைவாக இருந்தது. பேருந்து ஓட்டுநர்களுடன் ஒரு நேர்காணலை நடத்திக் கொண்டிருந்த தொலைக்காட்சி நிருபர் ஒருவர் நில நடுக்கம் நடப்பதை பதிந்துள்ளார்.

உயிர்ச்சேதங்களை ஏற்படுத்திய இயற்கைப் பேரழிவுகள் என்று பார்த்தால், சிட்னியில் உள்ள Bondi கடற்கரையில் பெரும் அலை ஒன்று 1938ஆம் ஆண்டு அடித்தது. கடலில் நீந்திக்கொண்டிருந்தவர்கள் அந்த அலையால் இழுத்துச் செல்லப்பட்டார்கள். 245 பேர் கடலிலிருந்து காப்பாற்றப் பட்டார்கள்; 60 பேருக்கு மருத்துவ சிகிச்சை தேவைப்பட்டது, 35 பேர் மயக்கமுற்றிருந்தார்கள்.... அத்துடன், ஐந்து பேர் உயிர் நீத்தார்கள்.
Tornado என்று அழைக்கப்படும் சுழல்காற்று சூறாவளி நம் நாட்டில் நடப்பது மிகக் குறைவுதான், இருந்தாலும் பிரிஸ்பன் நகருக்கு வடக்கே நூசா எனும் பிரபல சுற்றுலா இடத்திற்கு அருகிலுள்ள கின் கின் என்ற சிறிய சமூகம் 1971ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 14ஆம் நாள் எதிர்கொண்டது. இதன் போது மூன்று பேர் கொல்லப்பட்டார்கள், எட்டு பண்ணை வீடுகள் அழிந்தது மட்டுமின்றி நகரத்தின் ஒரு பகுதிக்கு கணிசமான அளவு சேதம் ஏற்பட்டது.

மேற்கு ஆஸ்திரேலியாவின் Gracetown என்ற கடற்கரையோரப்பகுதி பாடசாலை மாணவர்கள், 1996ஆம் ஆண்டு ஒரு நிகழ்வில் கலந்து கொண்டிருந்த வேளை, நிலச்சரிவு ஏற்பட்டு, 30 தொன் எடையான மண் மற்றும் பாறைகள் வீழ்ந்ததால் ஐந்து பேர் மரணித்தார்கள். அதற்கடுத்த வருடம், Thredbo என்ற பனிச் சறுக்கு சுற்றுலா இடத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் 18 பேர் இறந்தார்கள். நிலச்சரிவு நடந்து 60 மணி நேரத்தின் பின், உயிரோடு ஒருவர் கண்டுபிடிக்கப் பட்டார்.
Hailstorm எனப்படும் ஆலங்கட்டி மழை, பார்ப்பதற்கு அழகாகத்தான் இருக்கும். ஆனால், அது வாகனங்களுக்கும் மக்களின் உடமைகளுக்கும் பேரழிவை ஏற்படுத்துகின்றன. பதியப்பட்ட நம் நாட்டின் வரலாற்றில், ஐந்து முறை ஆலங்கட்டி மழை பேரழிவை ஏற்படுத்தியது மட்டுமின்றி உயிர்களையும் காவு கொண்டிருக்கிறது. 1947, 1998 மற்றும் 1999ஆம் ஆண்டுகளில் சிட்னியிலும், 2008 மற்றும் 2014ஆம் ஆண்டுகளில் பிரிஸ்பன் நகரிலும் மிகப் பெரிய அழிவுகளையும் ஏற்படுத்தியது மட்டுமின்றி மொத்தமாக 9 பேர் இதனால் இறந்துள்ளார்கள். இதில் கவலைக்குரிய விடயம் என்னவென்றால், 1998 ஏற்பட்ட ஆலங்கட்டி மழை, Sydney- Hobart Yacht Race என்ற படகோட்டப் போட்டி நடந்த வேளையில் ஏற்பட்டது. படகில் சென்றவர்கள் ஆபத்தில் இருப்பது தெரிந்தும், மற்றவர்கள் அவர்களைக் காப்பாற்ற முயலவில்லை என்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

வெள்ளம் மற்றும் சூறாவளி போன்றவை ஏற்படுத்திய பேரழிவுகளால், இதுவரை சுமார் 600 பேர் இறந்துள்ளார்கள். மஹினா என்ற பெயர் சூட்டப்பட்ட சூறாவளி வரப் போகிறது என்பதை கடலில் உள்ளவர்களுக்கு அறிவிக்க 1899ஆம் ஆண்டில் தொலை தொடர்பு சாதனங்கள் பயனில் இருக்கவில்லை. பதியப்பட்ட வரலாற்றில் இதுவரை 19 பாரிய பேரழிவுகளை ஏற்படுத்திய வெள்ளம் மற்றும் சூறாவளி ஏற்பட்டிருந்தாலும், மஹினா என்ற சூறாவளி மட்டும் 400ற்கும் மேலதிகமான கடற் தொழிலாளர்களின் உயிர்களைப் பறித்துள்ளது. அதற்கடுத்தபடியாக 1974ஆம் ஆண்டு டார்வின் நகரைத் தாக்கிய Cyclone Tracy, 74 பேரின் உயிரைக் கொண்டு போனது மட்டுமின்றி அந்த நகரத்தில் பலத்த சேதத்தையும் ஏற்படுத்தியது.

இந்த இயற்கைப் பேரழிவுகள் எல்லாவற்றையும் விட நம் நாட்டில் மிக அதிகமான அழிவை ஏற்படுத்துவது காட்டுத்தீ . ஒவ்வொரு வருடமும் காட்டுத்தீ நாட்டின் ஏதாவது ஒரு பக்கத்தில் அழிவை ஏற்படுத்துகிறது. வரலாற்றில் இதுவரை சுமார் 65 பெரும் காட்டுத் தீ பேரழிவுகள் பதியப்பட்டுள்ளன. 939 பேர் இதனால் மரணித்துள்ளார்கள். கோடை நெருங்கிறது. எந்த இடத்தில் இந்த வருடம் காட்டுத்தீ தன் கைவண்ணத்தைக் காட்டப் போகிறதோ என்று பலர் ஏங்க ஆரம்பித்துள்ளார்கள்.

1.
READ MORE

ஆஸ்திரேலிய இசைப் பரப்பு
2.
3.
4.
5.
6.
7.
8.
9.












