அகதி 01: உலக நெருக்கடியும் இந்தியாவில் அகதிகளும்

Source: AAP
போரில் இருந்தும், வன்முறையில் இருந்தும் தங்கள் வாழ்க்கையை பாதுகாத்துக் கொள்ள தப்பி வரும் மக்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே வருகின்றது. இன்றைய நிலையில் உலகெங்கும் 68.5 மில்லியன் அகதிகள் (6.8 கோடி) இருப்பதாக ஐ.நா. அகதிகள் ஆணையம் தெரிவித்திருக்கின்றது. இதில் 85% மக்கள் வளரும் நாடுகளிலேயே வசிப்பதாகவும் சுட்டிக்காட்டியுள்ளது. வளர்ந்து கொண்டிருக்கும் நாடுகளின் பட்டியலில் முக்கிய இடத்தில் இருக்கும் இந்தியாவும் பல்வேறு அண்டை நாட்டு அகதிகளின் தற்காலிக வசிப்பிடமாக உள்ளது. இலங்கையை சேர்ந்த ஈழத்தமிழ் அகதிகள், மியான்மரின் ரோஹிங்கியா அகதிகள், திபெத் அகதிகள், கிழக்கு பாகிஸ்தானிலிருந்து வெளியேறிய சக்மா மற்றும் ஹஜாங் இன அகதிகள், இன்னும் சில நாடுகளின் அகதிகள் என சுமார் 2 லட்சம் பேர் இந்தியாவில் அகதிகளாக வாழ்கின்றனர். 1983ம் ஆண்டு இலங்கையில் உச்சம் பெற்ற இனக்கலவரத்தை தொடர்ந்து ஆயிரக்கணக்கான தமிழர்கள் அகதிகளாக வெளியேறினர். அந்த அகதிகள் அலை, போர் முடிந்த பின்னரும் ஓயாமல் வீசிக்கொண்டே இருக்கின்றது. அப்படி வெளியேறிய தமிழ் அகதிகளில் சுமார் 1 லட்சம் பேர் தமிழ்நாட்டில் வாழ்கின்றனர். இந்தியாவின் அகதிகள் சூழலை பிரதானமாக பேசவிருக்கும் ‘அகதி’ என்ற தொடரை மகா.தமிழ்ப் பிரபாகரன், ஊடகவியலாளர் வழங்குகிறார். இதனை SBS தமிழ் வானொலிக்காக தயாரித்திருப்பவர் றைசெல். முதல் பாகத்தில் ‘உலக நெருக்கடியும் இந்தியாவில் அகதிகளும்…’ பாகம் - 1
Share



