மத்திய அரசாங்கத்தின் தேர்தல் வாக்குறுதிகளில் முதன்மையானதான, வருமான வரி குறைப்புக்கான புதிய திட்டம், ஜூலை மாதத் தொடக்கத்தில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இதுதொடர்பில் விளக்குகிறார் திரு.கோகுலன்.
மூன்று கட்டங்களில் ஒரு திட்டம்:
வருமான வரியைக் குறைப்பதற்கான மூன்று கட்டங்களைக் கொண்ட திட்டம் ஜூலை 2-ஆம் நாள் செவ்வாய்க்கிழமை இரவு கீழ் சபையில் நிறைவேற்றப்பட்டது .
மத்திய அரசு தனது 158 பில்லியன் டாலர் வருமான வரி குறைப்பு திட்டத்தின் மூன்று கட்டங்களையும் கடக்கப் போதுமான கிராஸ்பெஞ்ச் ஆதரவை, ஜுலை 4-ஆம் நாள் வியாழக்கிழமை பெற்ற பின்னர், இந்தத் திட்டம் சட்டமாக இயற்றப்பட்டது.
முதல் கட்டம்: குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் ஈட்டுபவர்களுக்கு 2018/19 ஆம் ஆண்டிற்கான வரிவிலக்கு வருமானமாக $1080 வரை வழங்கப்படும்.
இரண்டாவது கட்டம்: 2022/23 முதல், $45,000 வரை சம்பாதிக்கும் மக்களுக்கு 19 சதவீத வரி விகிதம் வழங்கப்படும்.
மூன்றாவது கட்டம்: 2024/25 இல் வரவிருக்கும் இறுதிக் கட்டம், $45,000 முதல் $200,000 வரை சம்பாதிக்கும் மக்களுக்கு வருமான வரி விகிதத்தை 30 சதவீதமாக உயர்த்துகிறது.
2018-19 நிதி ஆண்டில் எவ்வளவு வரி எனக்குதிரும்பக் கிடைக்கும்?
நீங்கள் எவ்வளவு வருமானம் வாங்குகிறீர்கள் என்பதைப் பொறுத்து $255 முதல் 0 1,080 வரை வரிப்பணம் திரும்பத் தரப்படும்.
உங்கள் ஆண்டு வருமானம்:
- $37,000க்கு கீழ் இருந்தால் - நீங்கள் $255 திரும்பப் பெறுவீர்கள்.
- $37,000 முதல் $48,000 வரை - $255 முதல் $1,080 வரை திரும்பக் கிடைக்கும்.
- $48,000 முதல் $90,000 வரை - $ 1,080 மொத்தமாகக் கிடைக்கும். வரி கணக்கீடுகள் தேவையில்லை.
- $90,000 முதல் $126,000 வரை - $1,080 முதல் $ 0 வரை.
- $126,000 க்கு மேல் - பூஜ்ஜியம்.
அரசாங்கம் சொல்லும் தனிநபர் வருமான வரித் திட்டத்தின் நோக்கங்கள் என்ன?
- குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் உள்ளவர்களுக்கு வரி நிவாரணம் வழங்குதல்.
- நடுத்தர வருமானம் கொண்டவர்களின் வரிகளை நிலைப்படுத்துதல்.
- வரி அமைப்புகளை எளிதாக்குவதன் மூலம் ஆஸ்திரேலியர்கள் செலுத்தும் வருமான வரியைக் குறைத்தல்.
எதிர்கட்சி எதிர்ப்பும் ஆதரவும்:
புதிய வருமான வரிக்குறைப்புச் சட்டத்தின், மூன்றாம் கட்டத்தை அகற்றுவதற்கும், இரண்டாம் கட்டத்தை விரைவில் வழங்குவதற்கும் சட்ட மசோதாவில் திருத்தம் கொண்டு வருவதற்கான லேபர்கட்சியின் முயற்சிகள் வீணாகின.
எனினும் எதிர்க்கட்சி புதிய சட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்தது. ஏனென்றால் லேபர் தொழிலாளர்களுக்குக் கிடைக்கும் வரி குறைப்பை எதிர்க்காது என்று வாதிட்டது.
கிரீன்ஸ் கட்சி முற்றிலுமாக புதிய வரிக் குறைப்பு சட்டத்தை எதிர்த்தது.
அரசாங்கத்திற்கு ஆகும் செலவு:
வரி குறைப்புக்களை வழங்குவதற்கு அரசாங்கம் தனது நிதிநிலையில் ஒரு விலையைக் கொடுக்க உள்ளது. இது அரசாங்கம் வருவாயில் பெறும் தொகையை குறைக்கும், முக்கியமாக உபரி வருமானத்தைப் பாதிக்கும்.
2029-30 வரையிலான 10 ஆண்டுகளில், வரி குறைப்பு தொகுப்பின் விலை $158 பில்லியன் ஆகும்.
இத்திட்டத்தின் படி முதல் கட்டத்திற்கு $15 பில்லியன், இரண்டாவது கட்டத்திற்கு $48 பில்லியன் மற்றும் மூன்றாம் கட்டத்திற்கு $95bn செலவாகும் எனக் கூறப்படுகிறது.
இந்த வரிக்குறைப்புத் திட்டம், நாம் திரும்பப் பெறும் வரியை (tax return) அதிகப்படுத்துமா?
கடந்த ஆண்டுக்கான வருமான வரி தாக்கலில் இருந்து, திரும்பக் கிடைக்க வேண்டிய வரியில் $1080 வரை அதிகமாகக் கிடைக்கும். ஆனால் அது எப்போதுமே அல்ல. ஏனென்றால், வரிக்குறைப்பு என்பது அரசுக்கு நாம் செலுத்த வேண்டிய வரியின் அளவைக் குறைப்பதாகும். நமக்குத் திரும்பக் கிடைக்கும் வரியைக் கூட்டுவது அல்ல என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.




