உலகில் தொலைத்தொடர்பு உபகரணங்களைத் தயாரிக்கும் மிகப்பெரிய சீன நிறுவனம் Huawei ‘ஹுவாவே’ அல்லது ‘வாவே’. 4G, மற்றும் 5G எனப்படும் நான்காம், ஐந்தாம் தலைமுறை (radio) கம்பியில்லா மொபைல் தொடர்புகளை ஏற்படுத்துவதற்கான தொழில்நுட்ப உபகரணங்களையும் wireless broadband routers, tablet computers மற்றும் மொபைல் போன்களையும் இந்த நிறுவனம் தயாரிக்கிறது.
iPhone-களைத்தயாரிக்கும் Apple நிறுவனம் விற்பனை செய்வதைவிட அதிகமான ‘ஸ்மார்ட்’ போன்களைத் தயாரித்து Samsung இற்கு அடுத்த படியாக இரண்டாவது இடத்தில் ‘வாவே’ இருக்கிறது. இன்றைய நிலையில் பல அபிவிருத்தியடைந்த நாடுகளும் 5G என்ற ஐந்தாந் தலைமுறை cellular phone களை அறிமுகப்படுத்தும்/விஸ்தரிக்கும் முயற்சிகளில் இறங்கியிருக்கின்றன.
5G தொழில்நுட்பத்தில் முன்னோடியாக இருக்கும் ‘வாவே’, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, மற்றும் ஐரோப்பிய நாடுகளில் 5G தொழில்நுட்பத்திற்குத் தேவையான தொலைத்தொடர்பு உபகரணங்களை விற்பனை செய்யவும், தான் உற்பத்திசெய்யும் Mate X, Mate 20 X போன்ற 5G மொபைல் போன்களைச் சந்தைப்படுத்தவும் ஆர்வமாக இருக்கிறது. இவற்றைத்தடை செய்யவேண்டும், சீன தொலைத்தொடர்பு சாதனங்கள் நாட்டுக்குள் வர அனுமதிக்கக் கூடாது என்று தற்போது எழுந்துள்ள, பிரதானமாக அமெரிக்கா எடுத்துள்ள நிலைப்பாடு பற்றி பரவலாகப்பேசப்பட்டு வருகிறது.
தடைசெய்யவேண்டும் என்பதற்கு அமெரிக்கா சொல்லும் காரணம் என்ன?
‘வாவே’ தனது தொலைத்தொடர்பு சாதனங்கள் மூலமாக அமெரிக்காவுக்குள் espionage என்ற உளவு பார்க்கும் நடவடிக்கைகளில் ஈடுபடும் அபாயம் இருக்கிறது; தகவல் தொழில்நுட்பத்துறையில் சீனா போன்ற வெளிநாட்டு நிறுவனங்கள் ஊடுருவி, தங்களுக்கு சாதகமான சூழ்நிலையை உருவாக்கிக் கொள்ளவும், கட்டமைப்புகள் பலவீனமான சந்தர்பங்களில் உளவு நடவடிக்கைகளில் ஈடுபட்டு நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தவும் சந்தர்ப்பம் ஏற்படுகிறது’ என்பதுதான் அமெரிக்கா சொல்லும் காரணமாகும். ‘வாவே’ யுடன் அமெரிக்க நிறுவனங்கள் எந்தத் தொடர்பும் வைத்துக்கொள்ளக் கூடாது’ என்றும் அமெரிக்கா அறிவித்திருக்கிறது. இந்த குற்றச்சாட்டை ‘வாவே’ மறுக்கிறது.
இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து போன்ற நாடுகளும் ஏறக்குறைய அமெரிக்காவின் நிலைப்பாட்டையே எடுத்திருக்கின்றன.
‘வாவே’ உளவு நடவடிக்கைகளில் ஈடுபடுகிறது என்பது எந்த அளவுக்கு உண்மை?
2012 தொடக்கமே ‘வாவே’ மீது இந்த குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டு வருகின்றன. தற்போது சீனாவுக்கும் அமெரிக்காவுக்குமிடையே (trade war) வர்த்தகப் போர் உச்ச கட்டத்தை எட்டியுள்ள நிலையில் ‘வாவே’க்கு எதிரான அமெரிக்காவின் அதிரடியான நடவடிக்கையில் அரசியல் உள்நோக்கம் இருப்பதாகவும், சீனாவை வர்த்தகப் பேச்சு வார்த்தைகளை நடத்த பேச்சுவார்த்தை மேஜைக்கு இழுக்கும் தந்திரமே இது என்றும் பார்க்கப்படுகிறது. ‘இரு நாடுகளுக்கிடையேயான வர்த்தகப் பேச்சுவார்த்தைகளை நடத்த சீனா முன்வரும் பட்சத்தில், ‘வாவே’ தொடர்பான தடைபற்றி மீள ஆராயலாம்’ என்று அதிபர் ட்ரம்ப் கூறியிருப்பது இதையே உறுதி செய்வதாக அரசியல் நோக்குனர்கள் கருதுகிறார்கள்.




