`Civil Engineering Learners’ என்கிற பேஸ்புக் பக்கத்தில், பாகிஸ்தானில் வாழும் Sami Ullah Stanikzai என்பவர் சுத்தியல் ஒளிப்படத்தை பதிவிட்டு, ”உங்கள் ஊரில் இதற்கு என்னய்யா பெயர்’ என்று கேட்டிருந்தார்.
”எங்க ஊரில் இதன் பெயர் சுத்தியல் என்று துபாயில் வாழும் தமிழ்நாடு சிவகாசியை சார்ந்த Vignesh Prabakar பதில் அளித்திருந்தார். கூடவே இதை எதிலாவது அடித்தால் டங் டங் என்று சத்தம் வரும்'' என்று பில்டப் வேறு கொடுத்திருந்தார்.
பெயின்டிங் கான்ட்ராக்டர் நேசமணி தலை இதனால் தான் உடைந்தது என்று நடிகர் வடிவேலு நடித்த பிரண்ட்ஸ் திரைப்படத்தில் இடம்பெற்ற ஒரு காட்சியை மனதில் வைத்து, நகைச்சுவையாகவும் Vignesh Prabakar கூடவே எழுதியிருந்தார்.
இந்த பதிவை வாசித்த Vignesh Prabakarன் நண்பர் தீபன் ராஜ் என்பவர், அது சரி நேசமணி இப்போது நலமா? என்று அப்பாவியாக விசாரிக்க, Vignesh Prabakar கிண்டலாக #Pray_for_Neasamani என்ற Hashtagஐ ட்விட்டரில் பதிய பற்றிக்கொண்டது. அதை தான் எதிர்பார்க்கவில்லை என்கிறார் Vignesh Prabakar.
இப்படி Pray_for_Neasamani எனும் ஹேஸ்டேக் trend ஆனதை இந்திய ஊடகங்களும் எடுத்துக்கூற, பற்றிய நெருப்பு இன்னும் வேகமாகி உலக அளவில் புதன்கிழமையும் நேற்றும் எல்லா செய்திகளையும் பின்தள்ளி No 1 இடத்தை அடைந்தது Pray_for_Neasamani எனும் ஹேஸ்டேக்.
எப்படி இப்படி? என்ற கேள்வியோடு ப்ரெண்ட்ஸ் திரைப்படத்தில் வடிவேலு தலையில் அல்லது contractor நேசமணி தலையில் சுத்தியலைப் போட்டு அவரை மூர்ச்சையாக்கும் பாத்திரத்தில் நடித்த ரமேஷ் கண்ணா அவர்களிடம் நாமும் நகைச்சுவையாக கேட்டோம். அவர் தன்னை போலீசார் கைது செய்யத்தேடுவதாக கூறினார்.
சரி, இந்த காட்சி எப்படி படமாக்கப்பட்டது – சுத்தியலை நேசமணியின் தலையில் போட்ட அனுபவத்தை அவர் ரமேஷ் கண்ணா தொடர்ந்து விவரித்தார்.
இப்படி நகைச்சுவை உலகில் trend ஆனது எதைக் காட்டுகிறது என்று இந்தியாவின் Time NOW எனும் தொலைக் காட்சியில் பணியாற்றும் Shabir Ahmed அவரிடம் கேட்டோம். இது தமிழக மக்களின் நகைச்சுவை உணர்வையும் அரசியல் நையாண்டி செய்யும் உணர்வையும் காட்டுவதாக கூறினார்.
ஆனால் நேற்று இந்திய பிரதமராக மோடி அவர்கள் பொறுப்பேற்கும் வேளையில் அந்த செய்தியை மழுங்கடிக்க தமிழக நெட்டிசன்கள் இந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி Pray_for_Neasamani எனும் ஹேஸ்டேக்கை பெரும் trend ஆக்கிவிட்டார்கள் என்று சில இணையதள ஊடகங்கள் கூறுகின்றன. ஆனால் அது தவறான பார்வை என்கிறார் Shabir Ahmed.
தமிழ்நாட்டிலும் சரி, உலகிலும் சரி எத்தனையோ தலைபோற பிரச்சனைகள் இருக்கும்போது இப்படி நகைச்சுவையை trend ஆக்கி பொழுதுபோக்குகிறார்கள் தமிழர்கள் என்று விமர்சனமும் எழுந்துள்ளது. ஆனால் இப்படியான trend உருவாக்குவது தனது நோக்கமாக இருக்கவில்லை என்கிறார் Vignesh Prabakar .





