ஒவ்வொரு வாரமும் புதிதாக 400 பேர் ஆஸ்திரேலியாவில் புகலிடம் கோருகின்றனர் என உள்துறை அமைச்சின் தரவுகள் கூறுகின்றன.
பிப்ரவரி 2022 இல் புகலிடம் கோரிய 618 பேருடன் ஒப்பிடும்போது, விமானம் மூலம் ஆஸ்திரேலியா வந்த 1725 பேர், பிப்ரவரியில் 2023 இல் புகலிடக்கோரிக்கை விண்ணப்பங்களைச் சமர்ப்பித்ததாக புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன.
இதேவேளை புகலிடக்கோரிக்கை நிராகரிக்கப்பட்ட 55 ஆயிரம் பேரின் விண்ணப்பங்கள் Administrative Appeals Tribunal(AAT)இல் மறு ஆய்வுக்காக காத்திருக்கின்றன.
முந்தைய கூட்டணி அரசின் நடவடிக்கைகளே இந்தளவு விண்ணப்பங்கள் தேங்கிக்கிடப்பதற்குக் காரணம் எனக் குறிப்பிட்ட குடிவரவு அமைச்சர் Andrew Giles, AAT இல்லாதொழிக்கப்பட்டு புது அமைப்பு உருவாக்கப்படுவதற்கு இந்த தாமதங்களும் ஒரு காரணம் என்று கூறினார்.
செயல்திறன்மிக்க, அணுகக்கூடிய மற்றும் சுயாதீனமான ஒரு புதிய நிர்வாக மறுஆய்வு அமைப்பை தாம் நிறுவவுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார்.
இதேவேளை லேபர்கட்சி எதிர்க்கட்சியாக இருந்தபோது, விமானத்தில் வரும் புகலிடக் கோரிக்கையாளர்களின் எண்ணிக்கை தொடர்பில் தம்மீது பல்வேறு குற்றச்சாட்டுக்களை முன்வைத்ததாக குறிப்பிட்டுள்ள லிபரல் கூட்டணியின் குடிவரவு செய்தித் தொடர்பாளர் Dan Tehan, தற்போது லேபர் கட்சி ஆட்சியில் கிட்டத்தட்ட 13,000 புகலிடக் கோரிக்கையாளர்கள் விமானம் மூலம் வந்துள்ளனர் எனவும், இந்த பிரச்சினையை சமாளிக்க லேபர்கட்சியிடம் எந்த திட்டமும் இல்லை எனவும் கூறினார்.
விமானம் மூலம் வந்து புகலிடம்கோருவோர் எண்ணிக்கை ஒவ்வொரு மாதமும் அதிகரித்துக்கொண்டே செல்வதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.
