Highlights
- இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்துள்ளதால் மே 15ம் திகதி வரை அங்கிருந்து ஆஸ்திரேலியா வரும் விமானங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
- தடையை மீறி கட்டார், சிங்கப்பூர் மற்றும் மலேசியா நாடுகள் ஊடாக பலரும் ஆஸ்திரேலியா வர முயற்சிக்கின்றனர்.
- ஆஸ்திரேலியாவை வந்தடைவதற்கான குறுக்கு வழிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளதாக ஆஸ்திரேலிய அரசு தெரிவித்துள்ளது.
இந்தியாவிலிருந்து வரும் விமானங்களுக்கு இடைக்காலத்தடை விதிக்கப்பட்டுள்ளதையடுத்து வேறு நாடுகள் ஊடாக பயணம் செய்து ஆஸ்திரேலியாவை வந்தடையும் நடவடிக்கையில் பலர் ஈடுபட்டிருந்ததாகவும், இந்த வழிகளும் தற்போது அடைக்கப்பட்டுவருவதாகவும் பிரதமர் ஸ்கொட் மொறிசன் தெரிவித்தார்.
இந்தியாவில் கொரோனா வைரஸ் கட்டுக்கடங்காமல் பரவியதையடுத்து எதிர்வரும் மே 15ம் திகதி வரை அங்கிருந்து வரும் விமானங்களுக்கு தடை விதிப்பதாக இந்த வார ஆரம்பத்தில் ஆஸ்திரேலிய அரசு அறிவித்தது.
இதையடுத்து ஆஸ்திரேலியா திரும்புவதற்கு திட்டமிட்டிருந்த பலரது பயண ஏற்பாடுகள் தடைப்பட்டன.
எனினும் பல பயணிகள் இத்தடையையும் மீறி இந்தியாவிலிருந்து புறப்பட்டு வேறு வழிகள் ஊடாக ஆஸ்திரேலியாவை வந்தடையும் முயற்சியில் ஈடுபட்டமை கண்டறியப்பட்டது.
குறிப்பாக டோஹா ஊடாக இரு ஆஸ்திரேலிய கிரிக்கட் வீரர்கள் நாட்டை வந்தடைந்ததையடுத்து இது குறித்த பல விமர்சனங்கள் எழுந்திருந்தன.
அதேநேரம் தமது விமான சேவை ஊடாக ஆஸ்திரேலியாவுக்கு பயணம் செய்ய முடியும் என்பதை Qatar Airways நேற்றையதினம் உறுதிப்படுத்தியிருந்தது.
இதையடுத்து Qatar Airways-உடன் நேரடியாக பேச்சு நடத்தப்பட்டு குறித்த வழி ஊடாக ஆஸ்திரேலியாவை வந்தடைவதைத் தடுப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பிரதமர் ஸ்கொட் மொறிசன் 9 news-இடம் தெரிவித்தார்.
இது தவிர இந்தியாவிலிருந்து மலேசியா மற்றும் சிங்கப்பூர் வழியாக பயணிகள் ஆஸ்திரேலியாவை வந்தடைவதைத் தடுக்கும் நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாக பிரதமர் தெரிவித்தார்.
மேலும் இப்படியாக குறுக்குவழிகளைப் பயன்படுத்தி இந்தியாவிலிருந்து ஆஸ்திரேலியாவுக்கு வருவதைத் தடுப்பதற்கான மேலதிக கட்டுப்பாடுகளை விதிப்பது தொடர்பில் தேசிய அமைச்சரவைக் கூட்டத்தில் ஆராயப்படும் எனவும் பிரதமர் குறிப்பிட்டார்.
அதுமட்டுமல்லாமல் இந்தியா தவிர கொரோனா பரவல் அதிகமுள்ள ஏனைய நாடுகளிலிருந்து ஆஸ்திரேலியா வரும் விமானங்களுக்கு இடைக்கால தடை விதிப்பது தொடர்பிலும் ஏனைய மாநிலங்களின் தலைவர்களுடன் பேச்சு நடத்த எதிர்பார்த்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.
டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.
உங்களுக்கு சளி அல்லது flu அறிகுறிகள் ஏற்பட்டால் வீட்டிலேயே இருங்கள். மற்றும் உங்கள் மருத்துவரை அழைத்து சோதனைக்கு ஏற்பாடு செய்யுங்கள். அல்லது Coronavirus Health Information Hotline-ஐ 1800 020 080 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.
உங்களுக்கு கடுமையான உடல்நலக்குறைவு ஏற்பட்டால் அல்லது சுவாசிப்பதற்கு சிரமம் ஏற்பட்டால் 000 என்ற இலக்கத்தை அழையுங்கள்.
ஒவ்வொருவருக்கிடையிலும் 1.5 மீட்டர் சமூக இடைவெளியைப் பேணுங்கள்.
அரசால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள COVIDSafe செயலியை உங்கள் கைபேசியில் தரவிறக்கிக்கொள்ளுங்கள்.
கொரோனா வைரஸ் (COVID-19) குறித்த முக்கிய தகவல்கள் sbs.com.au/coronavirus என்ற எமது இணையத்தில் 63 மொழிகளில் கிடைக்கின்றன.
Share





