Highlights
- நியூசவுத் வேல்ஸ் மாநிலத்தில் சமூகப் பரவல் ஊடாக புதிதாக ஒருவருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
- மிக ஆபத்தான திரிபடைந்த Delta வகை கொரோனா வைரஸ் தொற்று மாநிலத்தில் பரவிவருகிறது.
- இன்று பிற்பகல் 4 மணிமுதல் சிட்னி பெருநகரம் மற்றும் Blue Mountains பகுதியில் பொதுப்போக்குவரத்தைப் பயன்படுத்தும் அனைவரும் முகக்கவசம் அணியவேண்டும்.
50 வயதுகளிலுள்ள நபர் ஒருவரே புதிதாக தொற்றுக்கண்டவர் ஆவார்.
இதையடுத்து அங்கு கோவிட் தொற்றுக்கண்டோர் எண்ணிக்கை ஐந்தாக அதிகரித்துள்ளது.
சர்வதேச விமானசேவைக் குழுவினரை ஏற்றிச்செல்லும் பணியில் ஈடுபட்ட 60 வயதுகளிலுள்ள ஓட்டுனர் ஒருவருக்கு முதன்முதலாக தொற்று உறுதிப்படுத்தப்பட்டிருந்தநிலையில், அவரிடமிருந்தே இன்றையதினம் தொற்று உறுதிப்படுத்தப்பட்ட நபருக்கு வைரஸ் பரவியதாக Premier Gladys Berejiklian தெரிவித்தார்.
குறித்த ஓட்டுநர் சென்றிருந்த இடமொன்றிற்கு புதிதாக தொற்று உறுதிப்படுத்தப்பட்ட நபரும் சென்றிருந்ததாகவும், இருவரும் மிகக்குறுகிய நேரமே தொடர்பு எல்லைக்குள் இருந்தபோதிலும் இவ்வைரஸ் தொற்று ஏற்பட்டுவிட்டதாகவும் Gladys Berejiklian தெரிவித்தார்.
அதேநேரம் குறித்த ஓட்டுநருக்கு ஏற்பட்டிருப்பது இந்தியாவில் முதன்முதலில் இனங்காணப்பட்ட மிகவும் ஆபத்தான Delta வகை கொரோனா வைரஸ் தொற்று என்பதால் இதன் பரவல் மிகவும் வேகமாக இடம்பெற்றுள்ளதாக மாநில தலைமை சுகாதார அதிகாரி Kerry Chant தெரிவித்தார்.
இதேவேளை சிட்னி பெருநகரம் மற்றும் Blue Mountains பகுதியில் பொதுப்போக்குவரத்தைப் பயன்படுத்தும் அனைவரும் முகக்கவசம் அணியவேண்டுமென்ற கட்டுப்பாடு இன்று பிற்பகல் 4 மணிமுதல் நடைமுறைக்கு வருகிறது.
அதேபோன்று முதியோர் மற்றும் ஊனமுற்றோர் பராமரிப்பு மையங்களுக்கு அநாவசியமாக எவரும் செல்ல வேண்டாம் என Premier Gladys Berejiklian கோரிக்கைவிடுத்துள்ளார்.
இதுஒருபுறமிருக்க தொற்று முதன்முதலாக இனங்காணப்பட்ட ஓட்டுநரிடமிருந்து அவரது மனைவிக்கும் தொற்று ஏற்பட்டிருந்தபின்னணியில் இவர்கள் இருவரும் நோய்த்தொற்றுடன் பல இடங்களுக்குச் சென்றிருந்தனர்.
இந்த இடங்கள் அனைத்தும் exposure sites பட்டியலில் சேர்க்கப்பட்டன.
குறித்த பட்டியலில் இடம்பெற்ற cafe ஒன்றுக்குச் சென்றிருந்த 70 வயதுப் பெண் ஒருவருக்கு நேற்றையதினம் தொற்று உறுதிப்படுத்தப்பட்டிருந்தது.
அதேநேரம் நேற்றையதினம் தொற்று உறுதிப்படுத்தப்பட்ட Baulkham Hills பகுதியைச் சேர்ந்த 40 வயதுகளிலுள்ள நபரது கோவிட் சோதனை முடிவு தவறானதாகவோ அல்லது பல நாட்களுக்கு முன்னர் இவருக்கு தொற்று இருந்திருக்கக்கூடும் எனவும் கருதப்படுவதால் இதுகுறித்த விசாரணை தொடர்கிறது.
நியூசவுத் வேல்ஸ் மாநில மக்கள் மிகுந்த விழிப்புடன் இருக்கவெண்டுமெனவும் அதிகளவில் மக்கள் கூடும் இடங்களுக்குச் செல்லவேண்டாம் எனவும் Premier Gladys Berejiklian வலியுறுத்தினார்.
அதுமட்டுமல்லாமல் சிறியளவிலான அறிகுறிகள் தோற்றினாலும் உடனடியாக கோவிட் சோதனையை மேற்கொள்ளுமாறு அவர் வலியுறுத்தினார்.
இதேவேளை புதிதாக தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுவருவதால் இவர்கள் சென்றுவந்த இடங்களின் பட்டியலும் விரிவாக்கப்பட்டுள்ளது.
கோவிட் தொற்றாளர்கள் சென்றுவந்த இடங்களின் முழுமையான பட்டியலை www.nsw.gov.au/covid-19 என்ற இணைப்பில் பார்வையிடலாம்.
கொரோனா குறித்த தகவல்கள்
உங்களுக்கு சளி அல்லது flu அறிகுறிகள் ஏற்பட்டால் வீட்டிலேயே இருங்கள். மற்றும் உங்கள் மருத்துவரை அழைத்து சோதனைக்கு ஏற்பாடு செய்யுங்கள். அல்லது கொரோனாவைரஸ்உதவிமையத்தை 1800 020 080 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.
கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டால் மிகவும் இலேசான அறிகுறிகள் முதல் நிமோனியா வரை செல்லக்கூடும் என அரச இணையத்தளம் கூறுகின்றது. காய்ச்சல், தொண்டை நோவு, இருமல், உடற்சோர்வு, சுவாசிப்பதில் சிரமம் போன்ற அறிகுறிகள் முக்கியமானவை.
உங்களுக்கு கடுமையான உடல்நலக்குறைவு ஏற்பட்டால் அல்லது சுவாசிப்பதற்கு சிரமம் ஏற்பட்டால் 000 என்ற இலக்கத்தை அழையுங்கள்.
ஒவ்வொருவருக்கிடையிலும் 1.5 மீட்டர் சமூக இடைவெளியைப் பேணுங்கள்.
அரசால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள COVIDSafe செயலியை உங்கள் கைபேசியில் தரவிறக்கிக்கொள்ளுங்கள்.
கொரோனா வைரஸ் (COVID-19) குறித்த முக்கிய தகவல்கள் sbs.com.au/coronavirus என்ற எமது இணையத்தில் 63 மொழிகளில் கிடைக்கின்றன.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.
Share

