Highlights
- மெல்பனில் ஏற்பட்டுள்ள கோவிட் பரவல் காரணமாக தொற்றுக்கண்டோர் எண்ணிக்கை 51 ஆக அதிகரித்துள்ளது.
- பரவலை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் நோக்குடன் விக்டோரியா முழுவதும் 7 நாட்களுக்கு முடக்கநிலை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
- மெல்பன் கோவிட் பரவலின் ஆரம்பப்புள்ளி தெற்கு ஆஸ்திரேலியாவிலுள்ள தனிமைப்படுத்தல் விடுதியுடன் தொடர்புபடுகின்றது.
இதையடுத்து மெல்பனில் ஏற்பட்டுள்ள கோவிட் பரவல் காரணமாக தொற்றுக்கண்டோர் எண்ணிக்கை 51 ஆக அதிகரித்துள்ளது.
புதிதாக தொற்றுக்கண்டவர்களில் ஒருவர் Arcare Maidstone முதியோர் பராமரிப்பு இல்லத்தில் வாழ்பவர் எனவும் மற்றொருவர் அங்கு பணிபுரிபவர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
நேற்றையதினம் குறித்த பராமரிப்பு இல்லத்தைச் சேர்ந்த பணியாளர் ஒருவருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டிருந்தநிலையில் அவரிடமிருந்தே ஏனைய இருவருக்கும் தொற்று பரவியுள்ளதாக குறிப்பிடப்படுகிறது.
இதேவேளை தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்களின் எண்ணிக்கை 4200 ஆக அதிகரித்துள்ளது.

விக்டோரியாவில் தற்போது ஆரம்பித்துள்ள கோவிட் பரவல் மேலும் மோசமடையலாம் என எச்சரித்துள்ள Acting Premier James Merlino எவருக்கேனும் சிறியளவிலான அறிகுறிகள் ஏற்பட்டாலும் உடனடியாக கோவிட் சோதனையை மேற்கொள்ளுமாறு ஊக்குவித்துள்ளார்.
இப்பரவலை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் நோக்குடன் விக்டோரியா முழுவதும் 7 நாட்களுக்கு முடக்கநிலை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள நிலையில் இம்முடக்கநிலை மேலும் நீடிக்கப்படுமா என்ற கேள்விக்குப் பதிலளித்த தலைமை மருத்துவ அதிகாரி Brett Sutton, விக்டோரியாவின் நிலை ஒவ்வொரு நாளும் அவதானிக்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்டுவருவதாகவும் அதைப்பொறுத்தே முடக்கநிலை குறித்த தீர்மானம் மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவித்தார்.
இதுஒருபுறமிருக்க தொற்றுக் கண்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்தும் அதிகரித்துவருவதால் அவர்கள் சென்றுவந்த இடங்களின் பட்டியல் 279 ஆக அதிகரித்துள்ளது.
இந்த இடங்களின் விவரங்களை தமது இணையத்தில் வெளியிட்டுள்ள விக்டோரிய சுகாதாரத்துறையினர் குறிப்பிட்ட நேரங்களில் குறித்த இடங்களில் இருந்தவர்கள் உடனடியாக தனிமைப்படுத்தலுக்கு உள்ளாகும் அதேநேரம் கோவிட் சோதனையை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தியுள்ளனர்.
மெல்பன் கோவிட் பரவலின் ஆரம்பப்புள்ளி தெற்கு ஆஸ்திரேலியாவிலுள்ள தனிமைப்படுத்தல் விடுதியுடன் தொடர்புபடுகின்றமை குறிப்பிடத்தக்கது.
உங்களுக்கு சளி அல்லது flu அறிகுறிகள் ஏற்பட்டால் வீட்டிலேயே இருங்கள். மற்றும் உங்கள் மருத்துவரை அழைத்து சோதனைக்கு ஏற்பாடு செய்யுங்கள். அல்லது கொரோனாவைரஸ்உதவிமையத்தை 1800 020 080 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.
கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டால் மிகவும் இலேசான அறிகுறிகள் முதல் நிமோனியா வரை செல்லக்கூடும் என அரச இணையத்தளம் கூறுகின்றது. காய்ச்சல், தொண்டை நோவு, இருமல், உடற்சோர்வு, சுவாசிப்பதில் சிரமம் போன்ற அறிகுறிகள் முக்கியமானவை.
உங்களுக்கு கடுமையான உடல்நலக்குறைவு ஏற்பட்டால் அல்லது சுவாசிப்பதற்கு சிரமம் ஏற்பட்டால் 000 என்ற இலக்கத்தை அழையுங்கள்.
ஒவ்வொருவருக்கிடையிலும் 1.5 மீட்டர் சமூக இடைவெளியைப் பேணுங்கள்.
அரசால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள COVIDSafe செயலியை உங்கள் கைபேசியில் தரவிறக்கிக்கொள்ளுங்கள்.
கொரோனா வைரஸ் (COVID-19) குறித்த முக்கிய தகவல்கள் sbs.com.au/coronavirus என்ற எமது இணையத்தில் 63 மொழிகளில் கிடைக்கின்றன.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.
டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.
