ஆஸ்திரேலியாவில் மோட்டார் வாகன திருட்டு சம்பவங்கள் தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக உயர்ந்துள்ளதாக ஆஸ்திரேலிய புள்ளியியல் பணியகத்தின் சமீபத்திய தரவுகள் தெரிவிக்கின்றன.
கடந்த ஆண்டு மோட்டார் வாகனத் திருட்டு 11 சதவீதம் அதிகரித்துள்ளதை புதிய தரவு உறுதிப்படுத்தியுள்ளது.
இதன்படி கடந்த ஆண்டு வாகனத் திருட்டினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 55,037 ஆக காணப்படும் அதேநேரம், காவல்துறையினரால் பதிவு செய்யப்பட்ட திருட்டுகளின் எண்ணிக்கையும் ஒன்பது சதவீதம் அதிகரித்து 151,200ஐ எட்டியது.
சிறு வணிக திருட்டு உட்பட மற்ற திருட்டு குற்றங்கள் எட்டு சதவீதம் உயர்ந்துள்ளன. மொத்தத்தில் 475,725 சம்பவங்களை காவல்துறையினர் பதிவு செய்துள்ளனர்.
இதேவேளை குயின்ஸ்லாந்தில் வாகன திருட்டுகளின் எண்ணிக்கை 10 ஆண்டுகளில் இல்லாத உச்சத்தை எட்டியுள்ளதை புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன.
இதையடுத்து வாகனங்களைப் பாதுகாக்கும் போது கூடுதல் கவனம் செலுத்துமாறு வாகன ஓட்டிகளுக்கு காவல்துறை புதிய வேண்டுகோளை விடுத்துள்ளது.
குயின்ஸ்லாந்து காவல்துறையின் சமீபத்திய தரவுகளின்படி, மாநிலம் முழுவதும் ஒவ்வொரு நாளும் குறைந்தது 55 கார்கள் திருடப்படுகின்றன.
மேலும் வாகன ஓட்டிகள் தங்கள் service logbook-ஐ பாதுகாக்குமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது.
இந்த புத்தகத்தில் கணிசமானளவு தகவல்கள் இருப்பதால், வாகனங்களை உடைக்கும் போது குற்றவாளிகள் பெரும்பாலும் service logbook-ஐ குறிவைப்பது காவல்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது.
Service logbook-ஐப் பொறுத்து சில விவரங்கள் வாகனத்திற்கான நகல் சாவியைப் பெறவும் பயன்படுத்தப்படலாம் என்று காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.
பாதுகாப்பு முன்னெச்சரிக்கையாக, வாகனத்தின் Service logbook-ஐ தனியாக வைக்குமாறு காவல்துறையினர் அறிவுறுத்துகின்றனர்.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in
பக்கத்திற்குச் செல்லுங்கள்.டிஜிட்டல் வானொலியில்
செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.
