தற்காலிக பாதுகாப்பு விசாக்கள் தொடர்பில் பாரிய மாற்றத்தை அறிவித்துள்ள ஆஸ்திரேலிய அரசு, விசா நிராகரிக்கப்பட்டு எதிர்காலம் என்னவென்று தெரியாதநிலையிலுள்ள 12 ஆயிரம் பேருக்கும் நல்லதொரு முடிவினை வழங்கவேண்டுமென வலியுறுத்தி நேற்று நாடு தழுவிய ரீதியில் ஆர்ப்பாட்ட பேரணிகள் மேற்கொள்ளப்பட்டன.
Palm Sunday-குருத்தோலை ஞாயிறை முன்னிட்டு சிட்னி, மெல்பன் உட்பட சுமார் 20 இடங்களில் இடம்பெற்ற பேரணிகளில், புகலிடக் கோரிக்கையாளர்கள், அகதிகள் மற்றும் அவர்களுக்கு ஆதரவான செயற்பாட்டாளர்கள் என பல ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.

Bridging விசாவில் நிச்சயமற்ற எதிர்காலத்தை எதிர்கொள்பவர்களுக்கு, நிரந்தர வதிவிட உரிமை வழங்கப்பட வேண்டும் என்று பேரணியில் கலந்துகொண்டவர்கள் அழைப்பு விடுத்தனர்.
மேலும் அகதிகள் மற்றும் புகலிடக்கோரிக்கையாளர்கள், நவுறு மற்றும் பப்புவா நியூ கினியில் தங்கவைக்கப்படுகின்றமையை நிறுத்துமாறும் கோரப்பட்டது.
நேற்றைய பேரணியில் பெரும் எண்ணிக்கையிலான தமிழ் அகதிகள் மற்றும் புகலிடக்கோரிக்கையாளர்களும் கலந்துகொண்டனர். சிலர் இப்பேரணிகளில் உரைகளையும் நிகழ்த்தியிருந்தனர்.

இதேவேளை கன்பராவில் இடம்பெற்ற பேரணியில் கலந்துகொண்டு பேசிய சுயாதீன செனட்டர் David Pocock, ஆஸ்திரேலியாவின் அகதிகள் கொள்கைகள் மாற வேண்டிய நேரம் இது என்று வலியுறுத்தினார்.
ஆஸ்திரேலியாவில் TPV அல்லது SHEV விசாவில் வசிக்கும் 19,000 பேர், நிரந்தர விசா பெறுவதற்கு அனுமதிக்கப்படுவார்கள் என்று கடந்த பெப்ரவரி மாதம் ஆஸ்திரேலிய அரசு அறிவித்தது.
ஆனால் முன்னாள் கூட்டணி அரசின் "fast-track" என்று அழைக்கப்படும் நடைமுறையின்கீழ் பாதுகாப்பு விண்ணப்பம் நிராகரிக்கப்பட்ட சுமார் 12,000 பேர் தொடர்பில் எவ்வித தீர்வுகளும் அறிவிக்கப்படவில்லை.
நிரந்தர தீர்வுக்காகக் காத்திருக்கும் 12 ஆயிரம் பேரில், விசா நிராகரிக்கப்பட்ட கிட்டத்தட்ட 10,000 பேர், அமைச்சர் அல்லது நீதித்துறை மறுஆய்வுக்காகக் காத்திருக்கின்றறமை குறிப்பிடத்தக்கது.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in
பக்கத்திற்குச் செல்லுங்கள்.டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.
