இலங்கையின் அடுத்த அதிபரைத் தேர்வுசெய்வதற்கான தேர்தல் நேற்று செப்டம்பர் 21ஆம் தேதி நடைபெற்றது.
இந்தத் தேர்தலில் தற்போதைய அதிபர் ரணில் விக்ரமசிங்க, தேசிய மக்கள் சக்தியைச் சேர்ந்த அநுரகுமார திஸாநாயக்க, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ ஆகியோர் முக்கிய வேட்பாளர்களாகப் பார்க்கப்பட்டனர். இவர்கள் தவிர, முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ஸவின் மகன் நாமல் ராஜபக்ஸ இந்தத் தேர்தலில் போட்டியிட்டிருந்தார். தவிரவும் தமிழ் பொது வேட்பாளராக அரியநேத்திரனும் களமிறங்கியிருந்தார். இவர்கள் தவிர இன்னும் 33 வேட்பாளர்கள் இந்த தேர்தலில் போட்டியிட்டிருந்தனர்.

இந்நிலையில் தற்போதைய அதிபர் ரணில் விக்ரமசிங்க, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ, தேசிய மக்கள் சக்தியைச் சேர்ந்த அநுரகுமார திஸாநாயக்க ஆகியோருக்கிடையே கடும் மும்முனைப் போட்டி காணப்பட்ட பின்னணியில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் அனுரகுமார திஸாநாயக்க முன்னணியில் இருக்கிறார்.
தபால் வாக்குகள் தொடக்கம் இதுவரை எண்ணப்பட்ட வாக்குகள் வரையிலும் அநுரகுமார திஸாநாயக்க அதிகமான வாக்குகளைப் பெற்றுள்ளார். இரண்டாவது இடத்தில் சஜித் பிரேமதாஸவும் மூன்றாவது இடத்தில் ரணில் விக்ரமசிங்கவும் உள்ளனர்.

இதேவேளை நடைபெற்றுமுடிந்த இலங்கை அதிபர் தேர்தலில் பெரும்பான்மை வாக்குகளைப் பெற்று தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க வெற்றி பெற்றுள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் செயற்பாட்டாளர் மிலிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
அதிபர் தேர்தலில் அநுரகுமார திஸாநாயக்க வெற்றிபெற்றுள்ளதாகவும், அரசியலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன சார்பில் போட்டியிட்ட நாமல் ராஜபக்ஸ வெற்றிபெற்றுள்ளதாகவும் அவர் தனது பேஸ்புக் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
அதேநேரம் இலங்கையின் தற்போதைய வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தனது எக்ஸ் தளப்பதிவில் தேசிய மக்கள் சக்தியின் அதிபர் வேட்பாளர் அநுரகுமார திஸாநாயக்கவிற்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
தான் அதிபர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவாக பிரசாரம் செய்த போதிலும், இலங்கை மக்கள் தமது முடிவை எடுத்துள்ளனர் எனவும் அநுரகுமார திஸாநாயக்கவுக்கான மக்களின் ஆணையை நான் முழுமையாக மதிக்கிறேன் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இவரைத் தொடரந்து ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா, அதிபர் வேட்பாளர் அநுர குமார திஸாநாயக்கவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இவர்களைத்தவிர மேலும் பலர் தமது சமூக வலைத்தளங்களில் அநுரகுமார திஸாநாயக்கவிற்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துவருகின்றனர்.
இலங்கையில் 2022-ஆம் ஆண்டு ஏற்பட்ட கடும் பொருளாதார நெருக்கடிக்குப் பிறகு நடந்த முதல் அதிபர் தேர்தலில் ஒட்டுமொத்தமாக 75 சதவீதத்திற்கு மேல் வாக்குகள் பதிவாயின.
இலங்கை அதிபர் தேர்தலில் ஒருவர் வெற்றி பெற வேண்டுமெனில், ஒட்டுமொத்தமாக பதிவான வாக்குகளில் 50 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குகளைப் பெற வேண்டும். யாருக்கும் 50 சதவீத வாக்குகள் கிடைக்காவிட்டால், மக்களின் விருப்பு வாக்குகள் எண்ணப்பட்டு, அதன் அடிப்படையில் அடுத்த அதிபர் யார் என்பது தீர்மானிக்கப்படும்.

தற்போதைய நிலையில் அநுரகுமார திஸாநாயக்க 50 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குகளைப் பெறுவதற்கான சாத்தியம் குறைவு என்பதால் இரண்டாம் கட்டமாக விருப்பு வாக்குகள் எண்ணப்படுவதற்கான சாத்தியம் அதிகம் உள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
SBS தமிழின் ஏனைய நிகழ்ச்சிகளைக் கேட்க எமது podcast பக்கத்திற்குச் செல்லவும்.SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக SBS South Asian எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.
