வாக்குறுதியளிக்கப்பட்டபடி ஆஸ்திரேலியாவின் மனிதாபிமான திட்டத்திற்கு நிதிஒதுக்கீடு செய்யப்படாததால் அகதிகள் நிர்க்கதியாகியுள்ளதாக மனித உரிமை செயற்பாட்டாளர்கள் விமர்சித்துள்ளனர்.
மேலும் அகதிகளை வரவேற்பதாக கொடுத்த வாக்குறுதியிலிருந்து லேபர்கட்சி விலகிச் சென்றுள்ளதாக சிலர் குற்றம் சாட்டியுள்ளனர்.
ஆனால் ஒதுக்கப்படும் இடங்களை யார் நிரப்புவது என்பது குறித்த விரிவான திட்டமிடல் முடிந்தபிறகு இது குறித்த அறிவிப்புகள் வெளியாகும் என ஆஸ்திரேலிய அரசு தெரிவித்துள்ளது.
ஆஸ்திரேலியாவிற்கு மனிதாபிமான ரீதியில் அகதிகளை உள்வாங்கும் திட்டத்தை விரிவுபடுத்துவதாக லேபர் கட்சி உறுதியளித்திருந்தது. அதாவது தற்போது ஆண்டுக்கு 18,000 பேர் என்றிருப்பதை 32,000 பேராக அதிகரிக்கப்போவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் அரசின் இரண்டாவது நிதிநிலை அறிக்கையில் அகதிகள் திட்டத்திற்கு கூடுதல் நிதி ஒதுக்கப்படவில்லை.
தனக்குத் தெரிந்தவரை இப்படி ஒரு நிதிநிலை அறிக்கை வெளியானமை இதுவே முதல் முறை என்றும், அரசு தனது இலக்கை எவ்வாறு அடைய விரும்புகிறது என்பதை தற்போது "சொல்ல கடினமாக உள்ளது" என்றும் Refugee Council of Australia தலைமை நிர்வாகி Paul Power கூறினார்.

2021 இல் தலிபான்கள் ஆப்கானிஸ்தானைக் கைப்பற்றியதையடுத்து, நான்கு ஆண்டுகளில் கூடுதலாக 16,000 அகதிகளை உள்வாங்குவதாக உறுதியளிப்பதற்கு முன்பு, முன்னாள் கூட்டணி அரசு ஆண்டுதோறும் ஆஸ்திரேலியாவிற்குள் மனிதாபிமான அடிப்படையில் உள்வாங்கப்படுபவர்களின் எண்ணிக்கையை 13,750 ஆகக் குறைத்திருந்தது.
இந்தப்பின்னணியில் அகதிகள் தொடர்பில் லேபர் கட்சியின் உறுதிப்பாட்டை "முக்கியமான முன்னேற்றம்" என்று விவரிக்கும் Paul Power, சர்வதேச சூழ்நிலையானது அகதிகள் மீதான ஆஸ்திரேலியாவின் "மெத்தனமான" அணுகுமுறையை அம்பலப்படுத்துவதாக கூறினார்.
புகலிடம் கோரும் மக்கள் குறித்த ஆஸ்திரேலியாவின் கடுமையான அணுகுமுறை மற்றும் தடுப்புமுகாம்களுக்காக செலவிடும் பில்லியன்கணக்கான டொலர்கள், சர்வதேசத்திற்கு ஆஸ்திரேலியாவின் நிலைப்பாட்டை வெளிப்படுத்துவதாக அவர் சுட்டிக்காட்டினார்.
ஆஸ்திரேலியாவின் கண்ணோட்டத்தில் லேபர் கட்சியின் செயற்பாடுகள் ஒரு குறிப்பிடத்தக்க முன்னேற்றம் என்றாலும், அகதிகளை அதிகளவில் உள்வாங்கும் நாடுகளுடன் ஒப்பிடும்போது ஆஸ்திரேலியாவின் பங்களிப்பு கடலில் ஒரு துளி மட்டுமே என Paul Power கூறினார்.

இதேவேளை ஆஸ்திரேலியாவின் அகதிகள் உள்வாங்கலை உயர்த்துவதற்கு சமூகத்தவர்களின் ஆலோசனை செயல்முறையைப் பயன்படுத்துமாறு Amnesty International Australia அகதிகள் உரிமைப் பிரச்சாரகர் Zaki Haidari லேபர் கட்சியை வலியுறுத்தினார்.
தேர்தலின்போது அகதிகளுக்கு ஆதரவான சுயேச்சைகள் மற்றும் சிறு கட்சிகள் பலவற்றையும் தேர்ந்தெடுத்த ஆஸ்திரேலியர்கள், தங்கள் அரசு "அதிக மனிதாபிமானத்தைக் காட்ட வேண்டும்" என்று விரும்புவதாக Zaki Haidari கூறினார்.
உலகளவில் அதிகரித்து வரும் மோதல்கள் மற்றும் இடப்பெயர்வு நெருக்கடிகளுக்கு பதிலளிப்பதற்கு மேலும் பலவற்றைச் செய்வதாக லேபர்கட்சி உறுதியளித்துள்ளபோதிலும், இந்த நிதிநிலை அறிக்கையில் எந்த மாற்றத்தையும் காணாதது கவலையை ஏற்படுத்துகிறது எனவும், ஆனால் அகதிகளை கடலுக்கு அப்பால் தடுத்து வைக்க மில்லியன் கணக்கான டொலர்கள் ஒதுக்கப்பட்டுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டார்.
இந்த ஆண்டு உலகெங்கும் இரண்டு மில்லியனுக்கும் அதிகமான அகதிகள் மீள்குடியேற்றம் செய்யப்படுவார்கள் என்று ஐ.நாவின் அகதிகள் அமைப்பான UNHCR கணித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது
tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.
