Highlights
- மே 28 முதல் விக்டோரியாவிலுள்ள 40-49 வயதுக்குட்பட்டவர்கள் Pfizer தடுப்பூசியை போட்டுக்கொள்ள முடியும்.
- 50 வயது அல்லது அதற்கு மேற்பட்டவர்களுக்கு AstraZeneca தடுப்பூசி தொடர்ந்தும் வழங்கப்படுகிறது.
- 1800 675 398 என்ற இலக்கத்தில் அழைத்து முன்பதிவு செய்யுமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது.
இதன்மூலம் அரைவாசிக்கும் மேற்பட்ட விக்டோரிய மாநிலத்தவர்கள் தம்மை கோவிட்டிலிருந்து பாதுகாத்துக் கொள்வதற்கென Pfizer அல்லது AstraZeneca தடுப்பூசி பெறுவதற்கு தகுதிபெறுகின்றனர்.
50 வயது அல்லது அதற்கு மேற்பட்டவர்களுக்கு AstraZeneca தடுப்பூசி வழங்கப்பட்டுவரும் நிலையில் 50 வயதுக்கு குறைந்தவர்களுக்கு Pfizer தடுப்பூசியே சிறந்தது என பரிந்துரைக்கப்பட்டிருந்தது.
அத்துடன் 50 வயதுக்கு குறைந்தவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையிலேயே Pfizer தடுப்பூசி வழங்கப்பட்டது.
இந்நிலையில் நாளை முதல் 40-49 வயதுக்குட்பட்ட எவரும் முன்னுரிமை அடிப்படையில் அல்லாமல் சாதாரணமாகவே Pfizer தடுப்பூசியைப் போட்டுக்கொள்ள முடியுமென விக்டோரிய அரசு அறிவித்துள்ளது.
Pfizer தடுப்பூசி விக்டோரியாவின் அனைத்து தடுப்பூசி மையங்களிலும் கையிருப்பில் இல்லை என்பதால் இதனைப் போட்டுக்கொள்ள விரும்பும் 40-49 வயதுக்குட்பட்டவர்கள் 1800 675 398 என்ற இலக்கத்தை அழைத்து முன்பதிவு செய்வது அவசியம் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

A mass vaccination hub at the Royal Exhibition Building in Melbourne, Wednesday, April 21, 2021. Source: AAP/Luis Ascui
அதேநேரம் 50 வயதுக்கு மேற்பட்டவர்கள் AstraZeneca தடுப்பூசியை தொடர்ந்தும் தடுப்பூசி வழங்கும் மையங்கள் ஊடாகவும் இத்திட்டத்தில் பங்கேற்கும் மருத்துவ மையங்கள் ஊடாகவும் பெற்றுக்கொள்ள முடியும்.
விக்டோரியாவிலுள்ள பல தடுப்பூசி மையங்கள் முன்பதிவு இல்லாமல் வரும் 50 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு AstraZeneca தடுப்பூசியை வழங்குகின்றபோதிலும் 1800 675 398 என்ற இலக்கத்தில் அழைத்து முன்பதிவு செய்வது விரும்பத்தக்கது என விக்டோரிய சுகாதாரத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
விக்டோரிய அரசின் ஏற்பாட்டில் மாநிலம் முழுவதும் சுமார் 30 க்கும் மேற்பட்ட தடுப்பூசி மையங்கள் ஊடாக தடுப்பூசிகள் வழங்கப்பட்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.
உங்களுக்கு சளி அல்லது flu அறிகுறிகள் ஏற்பட்டால் வீட்டிலேயே இருங்கள். மற்றும் உங்கள் மருத்துவரை அழைத்து சோதனைக்கு ஏற்பாடு செய்யுங்கள். அல்லது கொரோனாவைரஸ்உதவிமையத்தை 1800 020 080 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.
கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டால் மிகவும் இலேசான அறிகுறிகள் முதல் நிமோனியா வரை செல்லக்கூடும் என அரச இணையத்தளம் கூறுகின்றது. காய்ச்சல், தொண்டை நோவு, இருமல், உடற்சோர்வு, சுவாசிப்பதில் சிரமம் போன்ற அறிகுறிகள் முக்கியமானவை.
உங்களுக்கு கடுமையான உடல்நலக்குறைவு ஏற்பட்டால் அல்லது சுவாசிப்பதற்கு சிரமம் ஏற்பட்டால் 000 என்ற இலக்கத்தை அழையுங்கள்.
ஒவ்வொருவருக்கிடையிலும் 1.5 மீட்டர் சமூக இடைவெளியைப் பேணுங்கள்.
அரசால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள COVIDSafe செயலியை உங்கள் கைபேசியில் தரவிறக்கிக்கொள்ளுங்கள்.
கொரோனா வைரஸ் (COVID-19) குறித்த முக்கிய தகவல்கள் sbs.com.au/coronavirus என்ற எமது இணையத்தில் 63 மொழிகளில் கிடைக்கின்றன.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.
Share


