Highlights
- விக்டோரியாவில் சமூகப் பரவல் ஊடாக புதிதாக ஐவருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
- மிக ஆபத்தான திரிபடைந்த Delta வகை தொற்றுக்கண்டோர் எண்ணிக்கை ஒன்பதாக உயர்ந்துள்ளது.
- மெல்பன் பெருநகரப்பகுதி முழுவதும் முடக்கநிலை மேலதிகமாக ஒரு வாரத்திற்கு நீடிக்கப்பட்டுள்ளது.
விக்டோரியாவில் சமூகப் பரவல் ஊடாக புதிதாக ஐவருக்கு கோவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதையடுத்து விக்டோரியாவில் தொற்றுக்கண்டோர் எண்ணிக்கை 70 ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் ஒருவர் குணமடைந்துவிட்டார்.
சுமார் 36 ஆயிரம் பேருக்கு மேற்பட்டவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட சோதனைகளில் ஐவருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டிருந்ததாகவும் இவர்களில் மூவர் ஏற்கனவே தொற்றுக்கண்டவர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.
ஏனைய இருவரும் ஒரே வீட்டைச் சேர்ந்தவர்கள் எனவும் இவர்களுக்கு எந்த வழியூடாக தொற்று ஏற்பட்டதென்று உறுதியாக தெரியாவிட்டாலும் இவர்கள் இருவரும் Craigieburn [Central] மற்றும் Epping Plaza Shopping Centreகளுக்கு அடிக்கடி சென்றுவந்தவர்கள் என குறிப்பிடப்படுகிறது.
வெளிநாட்டிலிருந்து திரும்பிவந்து விடுதியில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள ஒருவருக்கும் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதேவேளை நேற்றையதினம் மெல்பன் மேற்கைச் சேர்ந்த குடும்பமொன்றின் அங்கத்தினர்களுக்கு மிக ஆபத்தான புதியவகை Delta கொரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டிருந்தநிலையில் இவர்களுக்கு எவ்வாறு இந்த தொற்று ஏற்பட்டதென்பது இதுவரை தெரியவரவில்லை.
குறித்த குடும்பம் விடுமுறைக்காக நியூசவுத் மாநிலத்தின் Jervis Bay பகுதிக்குச் சென்றிருந்தபோதிலும் அங்கு எவருக்கும் தொற்று உறுதிப்படுத்தப்படவில்லை.
அதேநேரம் மெல்பனில் திரிபடைந்த Delta வகை தொற்றுக்கண்டோர் எண்ணிக்கை ஒன்பதாக உயர்ந்துள்ளது.
Delta வகை வைரஸ் வெளிநாட்டிலிருந்தே ஆஸ்திரேலியாவுக்கு வந்திருக்க வேண்டும் எனவும் குறிப்பாக தனிமைப்படுத்தல் விடுதி ஒன்றிலிருந்தே இந்தவகை வைரஸ் பரவியிருக்க வேண்டுமென்றும் தான் நம்புவதாக தொற்றுநோய்கள் தொடர்பிலான நிபுணர் Sharon Lewis தெரிவித்தார்.
இந்நிலையில் கோவிட் பரவலைக் கட்டுப்படுத்தவென நடைமுறைப்படுத்தப்பட்ட முடக்கநிலை Regional விக்டோரியாவில் தளர்த்தப்பட்டுள்ள அதேநேரம் மெல்பன் பெருநகரம் முழுவதும் மேலும் ஒரு வாரத்திற்கு நீடிக்கப்பட்டுள்ளது.
விக்டோரியாவில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் தொடர்பில் dhhs.vic.gov.au இணையத்தளத்தில் மேலதிகமாக அறிந்துகொள்ளலாம்.
இதுஒருபுறமிருக்க தொற்றுக் கண்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்தும் அதிகரித்துவருவதால் அவர்கள் சென்றுவந்த இடங்களின் எண்ணிக்கை 360-ஐ தாண்டியுள்ளது.
அந்த இடங்களின் விவரங்களை தமது இணையத்தில் வெளியிட்டுள்ள விக்டோரிய சுகாதாரத்துறையினர் குறிப்பிட்ட நேரங்களில் குறித்த இடங்களில் இருந்தவர்கள் உடனடியாக தனிமைப்படுத்தலுக்கு உள்ளாகும் அதேநேரம் கோவிட் சோதனையை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தியுள்ளனர்.
உங்களுக்கு சளி அல்லது flu அறிகுறிகள் ஏற்பட்டால் வீட்டிலேயே இருங்கள். மற்றும் உங்கள் மருத்துவரை அழைத்து சோதனைக்கு ஏற்பாடு செய்யுங்கள். அல்லது கொரோனாவைரஸ்உதவிமையத்தை 1800 020 080 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.
கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டால் மிகவும் இலேசான அறிகுறிகள் முதல் நிமோனியா வரை செல்லக்கூடும் என அரச இணையத்தளம் கூறுகின்றது. காய்ச்சல், தொண்டை நோவு, இருமல், உடற்சோர்வு, சுவாசிப்பதில் சிரமம் போன்ற அறிகுறிகள் முக்கியமானவை.
உங்களுக்கு கடுமையான உடல்நலக்குறைவு ஏற்பட்டால் அல்லது சுவாசிப்பதற்கு சிரமம் ஏற்பட்டால் 000 என்ற இலக்கத்தை அழையுங்கள்.
ஒவ்வொருவருக்கிடையிலும் 1.5 மீட்டர் சமூக இடைவெளியைப் பேணுங்கள்.
அரசால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள COVIDSafe செயலியை உங்கள் கைபேசியில் தரவிறக்கிக்கொள்ளுங்கள்.
கொரோனா வைரஸ் (COVID-19) குறித்த முக்கிய தகவல்கள் sbs.com.au/coronavirus என்ற எமது இணையத்தில் 63 மொழிகளில் கிடைக்கின்றன.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.
Share


