Highlights
- விக்டோரியாவில் மிக ஆபத்தான திரிபடைந்த Delta வகை தொற்றுக்கண்டோர் எண்ணிக்கை பத்தாக உயர்ந்துள்ளது.
- விக்டோரியாவில் சமூகப் பரவல் ஊடாக புதிதாக நால்வருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
- மெல்பன் பெருநகரப்பகுதி முழுவதும் முடக்கநிலை மேலதிகமாக ஒரு வாரத்திற்கு நீடிக்கப்பட்டுள்ளது.
கிட்டத்தட்ட 30 ஆயிரம் பேரிடம் மேற்கொள்ளப்பட்ட சோதனைகளில் இருவருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டிருந்ததாக இன்று காலை இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் அறிவிக்கப்பட்டிருந்தநிலையில், தற்போது மேலும் இருவருக்கு தொற்று இனங்காணப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தொற்றுக்கண்டவர்களில் ஒருவர் ஆசிரியர் எனவும் மற்றவர் நிதி நிறுவனத்தில் பணிபுரிபவர் எனவும், இவர்கள் இருவரும் ஏற்கனவே தொற்றுக்கண்டவர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்கள் என்பதால் ஏற்கனவே தனிப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டிருந்தவர்கள் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
இதில் குறித்த ஆசிரியருக்கு ஏற்பட்டிருப்பது அதிக ஆபத்தான Delta வகை கொரோனா வைரஸ் தொற்றாகும்.
இதையடுத்து விக்டோரியாவில் திரிபடைந்த Delta வகை தொற்றுக்குள்ளானோர் எண்ணிக்கை பத்தாக அதிகரித்துள்ளது.
இதுதவிர இன்றையதினம் தொற்று உறுதிப்படுத்தப்பட்ட மற்றைய இருவரில் ஒருவர் Arcare முதியோர் பராமரிப்பு இல்லத்தில் வாழும் 79 வயது நபர் எனவும் மற்றவர் அங்கு பணியாற்றுபவர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
குறித்த 79 வயது நபருக்கு Pfizer தடுப்பூசியின் இரண்டு டோஸ்களும் வழங்கப்பட்டிருந்ததாகவும், பராமரிப்பு பணியாளருக்கு முதலாவது டோஸ் மட்டும் போடப்பட்டிருந்தாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இவர்கள் தவிர வெளிநாட்டிலிருந்து திரும்பிவந்து விடுதியில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள ஆறு பேருக்கும் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதேவேளை மெல்பனில் புதியவகை Delta கொரோனா வைரஸ் தொற்று எவ்வாறு ஏற்பட்டது என்பது இதுவரை தெரியவரவில்லை.
Delta வகை வைரஸ் வெளிநாட்டிலிருந்தே ஆஸ்திரேலியாவுக்கு வந்திருக்க வேண்டும் எனவும் குறிப்பாக தனிமைப்படுத்தல் விடுதி ஒன்றிலிருந்தே இந்தவகை வைரஸ் பரவியிருக்க வேண்டுமென்றும் நம்பப்படுகிறது.
கோவிட் பரவலைக் கட்டுப்படுத்தவென மெல்பன் பெருநகரம் முழுவதும் இரண்டாவது வாரமாக முடக்கநிலை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
விக்டோரியாவில் தொற்றுக் கண்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்தும் அதிகரித்துவருவதால் அவர்கள் சென்றுவந்த இடங்களின் எண்ணிக்கை 360-ஐ தாண்டியுள்ளது.
அந்த இடங்களின் விவரங்களை தமது இணையத்தில் வெளியிட்டுள்ள விக்டோரிய சுகாதாரத்துறையினர் குறிப்பிட்ட நேரங்களில் குறித்த இடங்களில் இருந்தவர்கள் உடனடியாக தனிமைப்படுத்தலுக்கு உள்ளாகும் அதேநேரம் கோவிட் சோதனையை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தியுள்ளனர்.
இதுஒருபுறமிருக்க விக்டோரியாவில் ஏற்பட்டுள்ள கோவிட் பரவலால் நலிவடைந்துள்ள சுற்றுலாத்துறையைக் கட்டியெழுப்ப சுமார் 32 மில்லியன் டொலர்கள் நிதிஒதுக்கீடு செய்யப்படுவதாக விக்டோரிய acting premier James Merlino அறிவித்தார்.
உங்களுக்கு சளி அல்லது flu அறிகுறிகள் ஏற்பட்டால் வீட்டிலேயே இருங்கள். மற்றும் உங்கள் மருத்துவரை அழைத்து சோதனைக்கு ஏற்பாடு செய்யுங்கள். அல்லது கொரோனாவைரஸ்உதவிமையத்தை 1800 020 080 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.
கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டால் மிகவும் இலேசான அறிகுறிகள் முதல் நிமோனியா வரை செல்லக்கூடும் என அரச இணையத்தளம் கூறுகின்றது. காய்ச்சல், தொண்டை நோவு, இருமல், உடற்சோர்வு, சுவாசிப்பதில் சிரமம் போன்ற அறிகுறிகள் முக்கியமானவை.
உங்களுக்கு கடுமையான உடல்நலக்குறைவு ஏற்பட்டால் அல்லது சுவாசிப்பதற்கு சிரமம் ஏற்பட்டால் 000 என்ற இலக்கத்தை அழையுங்கள்.
ஒவ்வொருவருக்கிடையிலும் 1.5 மீட்டர் சமூக இடைவெளியைப் பேணுங்கள்.
அரசால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள COVIDSafe செயலியை உங்கள் கைபேசியில் தரவிறக்கிக்கொள்ளுங்கள்.
கொரோனா வைரஸ் (COVID-19) குறித்த முக்கிய தகவல்கள் sbs.com.au/coronavirus என்ற எமது இணையத்தில் 63 மொழிகளில் கிடைக்கின்றன.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.
Share


