விக்டோரிய மாநிலத்தில் பிறக்கும் திருநங்கைகள் தங்கள் பிறப்புச் சான்றிதழ்களில் பட்டியலிடப்பட்ட பாலினத்தைத் தேர்ந்தெடுப்பதற்கான உரிமையை நேற்று விக்டோரிய மாநில நாடாளுமன்றம் சட்டமாக்கியது. மகாராணியின் ஒப்பந்தம் கிட்டியதும், இது நடைமுறைக்கு வரும்.
அறுவை சிகிச்சை செய்யாமல், அவர்களின் பிறப்புச் சான்றிதழ்களில் எந்த பாலினம் என்று தேர்ந்தெடுக்கும் சுதந்திரம் அவர்களுக்கு இப்போது கிடைக்கிறது.
இந்த சட்டம், விக்டோரிய நாடாளுமன்றத்திற்கு உள்ளும், வெளியேயும் பலமாக விவாதிக்கப்பட்டு வந்தது, தொடர்ந்தும் விவாதிக்கப்படுகிறது.
“இது சட்டமாக்கப்பட்ட மற்றைய மாநிலங்களிலும், நாடுகளிலும், பலர் தம் பாலின அடையாளத்தை மாற்றவில்லை என்றாலும், அவர்களின் உத்தியோக ஆவணங்களிலுள்ள பாலின அடையாளம், அவர்கள் வாழும் வாழ்க்கையின் யதார்த்தத்தைப் பிரதிபலிக்கிறதா என்பதை உறுதிப்படுத்த, மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள ஒரு தேர்வாகும்” என்று சமத்துவத்துக்கான அமைச்சர் (Equality Minister) Martin Foley, இன்று காலை 3AW வானொலிக்குக் கூறினார்.
டாஸ்மேனியா, தெற்கு ஆஸ்திரேலியா ஆகிய மாநிலங்களும் Northern Territory, மற்றும் ACT பிராந்தியங்களும் இதனை ஏற்கனவே சட்டமாக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
டாஸ்மேனியா மாநிலம் தான் பிறப்புச் சான்றிதழ்களில் பாலின அடையாளத்தைத் தேர்ந்தெடுக்க சட்டம் கொண்டு வந்த முதல் மாநிலம். இந்த வருடம் ஏப்ரல் மாதம் தான் இந்தப் புதிய சட்டம் அங்கு நடைமுறைப்படுத்தப்பட்டது.
பாலின வேறுபாடு குறித்த ஆர்வலர்கள், சமூக ஊடகங்களில் தமது வெற்றியை வெளிப்படுத்திக் கொண்டாடினர். ஆஸ்திரேலியாவில் திருநங்கைகளின் சமத்துவத்திற்கான போராட்டத்தில், இது குறிப்பிடத்தக்க வெற்றியைக் குறிக்கிறது.
