ஆஸ்திரேலியாவில் சென்ற ஆண்டு $552 பில்லியன் மொத்த வருமானவரி அரசுக்கு வந்ததாக ஆஸ்திரேலியா வரி அலுவலகம் தெரிவிக்கிறது, இதன் மதிப்பு உள்நாட்டு உற்பத்தியில் 27 .8 சதவீதமாகும்.
ஆஸ்திரேலியாவில் பெரும்பாலான தனிநபர்களே வருமானவரி செலுத்துகிறார்கள். அதிலும் சம்பளம் வாங்கும் ஊழியர்களே அதிகம் இருக்கிறார்கள்.
ஒரு நிதி ஆண்டு என்பது ஜூலை முதல் ஜூன் வரை12 மாதங்களை கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.

தனிநபர்கள் கடந்த ஆண்டு கட்டிய வரியிலிருந்து இந்த நிதியாண்டில் ஏதாவது திரும்ப பெறமுடியுமா?
சென்ற ஆண்டு அக்டோபர் 6 (2020-21) அன்று சமர்ப்பிக்கப்பட்ட நிதி நிலை அறிக்கையில் கோவிட் பெருந்தொற்று காரணமாக தனிநபர் வரியில் பல சலுகைகள் தரப்பட்டது. அதன்படி வரி குறைப்பு (Tax cut) முன் தேதியிட்டு அதாவது ஜூலை 2020 முதல் கொண்டு வரப்பட்டது. இந்த வரிக்குறைப்பை ஆஸ்திரேலியா வரி அலுவலகம் சென்ற டிசம்பர் மாதம் முதல் அமுல்படுத்தியது. அதன்படி நிறுவனங்கள் தனிநபர் சம்பளத்தில் பிடித்தம் செய்த வரியை குறைத்து நடைமுறைப்படுத்தியது. அதன் மூலம் சம்பளம் பெறுபவர்களுக்கு முன்னர் பெற்ற சம்பளத்தை விட சிறிது அதிகமாக பணம் கிடைத்தது.
இந்த வரிக்குறைப்பு தாமதமாக நடைமுறைக்கு வந்ததால் ஜூலை முதல் நவம்பர் வரை பெறப்பட்ட சம்பளத்தில் வரிக்குறைப்பு அவர்களுக்கு கிடைக்கவில்லை. அப்படி விட்டுப்போன சலுகையை நாம் இந்த ஆண்டு வருமானவரி தாக்கல் செய்தவுடன் உடனடியாக பெற்றுக்கொள்ள முடியும்.
அதுபோல சம்பளம் பெறாத தனிநபர் ஏற்கனவே அட்வான்ஸ் வரி -அதிகமாக வரி செலுத்தியிருந்தால் புதிய வரி அட்டவணையின் படி அதை திருப்பி பெற முடியும். இந்த நிதி ஆண்டு வரி அட்டவணை கொடுக்கப்பட்டுள்ளது.

அது போல ஆண்டு வருவாய் $37,000 வரை வருமானம் பெறும் தனி நபர்களுக்கு அதிகபட்சமாக $700 (Low Income Tax Offset) வரி சலுகை கிடைக்கும் இதற்கு முன்னர் $445 ஆக இருந்தது.

இதுதவிர வீட்டிலிருந்தே வேலை செய்யும் ஊழியர்கள் (Home Office) தாங்கள் அலுவல் காரணமாக செய்யும் செலவுகளை குறிப்பாக தொலைபேசி, அலைபேசி, இணையதளம், பயணச்செலவுகள், பயிற்சி கட்டணம், மின்சார செலவுகள், அலுவல் சீருடை சலவை, காகிதம் முதலிய எழுது பொருள்கள் அதற்கான நுகர்பொருட்கள் போன்ற செலவுகளை தனிநபர்கள் தங்களுக்குடைய வரி கணக்கில் சேர்த்து அதன் மூலம் அவர்கள் கட்டிய வரியை ஓரளவிற்கு மீண்டும் பெறமுடியும். இது போன்ற செலவுகளுக்கு உரிய ரசீது மற்றும் ரெகார்ட் வைத்திருக்க வேண்டும். அதே போல தனிநபர் செய்த சொந்த செலவுகளை இதில் சேர்க்கக்கூடாது.
ஆஸ்திரேலிய வருமானவரி அலுவலகம் இந்த ஆண்டு எதையெல்லாம் கண்காணிக்கலாம்?
சென்ற ஆண்டு ஆஸ்திரேலியா வருமானவரி அலுவலகம் கோவிட் பெருந்தொற்று சலுகைகளை கவனத்தில் கொண்டு செயல்பட்டது. அதன்படி Superannuation வைப்பிலிருந்து தவறாக பணம் எடுத்தவர்கள் மீது நடவடிக்கை எடுத்தது, மேலும் நிறுவனங்கள் அரசிடமிருந்து பெற்ற சலுகைகள் (Job Keeper benefit), ஹோம் ஆபிஸ் செலவுகள், தவறாக காண்பித்த வாடகை சொத்து வருமானம் போன்றவற்றில் கவனம் கொண்டது.
இந்த ஆண்டு வருமானவரி அலுவலகம் எந்த பகுதிகளில் அதிகம் கவனம் செலுத்தப்போகிறது என்ற கேள்விக்கு, சென்ற வாரம் ஏபிசி செய்தி நிறுவனத்திற்கு பேட்டி அளித்த ஆஸ்திரேலியா வருமானவரி உதவி ஆணையர் Tim Loh, இந்த ஆண்டு முக்கியமாக Gig பொருளாதாரம், கிரிப்டோ(Bitcoin/Crypto Currency) பணத்தின் மூலம் கணக்கில் காட்டாத லாபம், வீட்டிலிருந்து வேலை செய்பவர்கள் காண்பிக்கும் செலவுகள் மற்றும் வாடகை சொத்து வைத்திருப்பவர்கள் தங்கள் சொந்த வீட்டில் செய்த செலவை வாடகை சொத்தில் தவறாக காண்பிக்கும் செலவுகள் போன்றவற்றில் முழு கவனம் கொள்ளப்போவதாக குறிப்பிட்டுள்ளார்.

Gig பொருளாதாரம் என்பது பாரம்பரிய பொருளாதாரத்திலிருந்து வேறுபட்டது. Gig பொருளாதாரத்தில் பகுதி நேரமாக செய்யும் வேலைகள் அடங்குகிறது. அதன்படி Uber உணவு டெலிவரி வருமானம், Uber டாக்ஸி வருமானம், Airbnb மூலம் பெறும் வாடகை, youtube-இல் பெறும் வருமானம், கணக்கில் காட்டாத ஆன்லைன் வர்த்தகம், பாட்காஸ்ட் மூலம் பெறும் வருமானம் மற்றும் நெட் கேம் வருமானம் இப்படி பல வருமானங்கள் உள்ளது. Gig பொருளாதாரம் குறைந்தது ஆஸ்திரேலியா டாலர் 50 பில்லியன் இருக்கலாம் என்று நம்பப்படுகிறது.
இதன் மூலம் வருகின்ற வருமானங்களை பெரும்பாலானவர்கள் கணக்கில் சேர்ப்பதில்லை என்று கூறப்படுகிறது. அதனால் இந்த பிரிவில் வருமானவரி அலுவலகம் கூடுதலாக கண்காணிக்கலாம் என்று தெரியவருகிறது.
கடந்த ஆண்டு பத்துலட்சத்திற்கும் மேலானவர்கள் ஹோம் ஆபீஸ் செலவுகளை தங்கள் வருமானவரி கணக்கில் சேர்த்துள்ளதாக அரசு தெரிவித்துள்ளது, கோவிட் பெருந்தொற்று தளர்வுகள் மற்றும் தடைகள் முழுமையாக தொடர்வதால் இந்த ஆண்டும் இது போன்ற செலவுகள் அதிகரிக்கும் என்பதால் அதில் கவனம் செலுத்துவதாக வருமானவரி உதவி ஆணையர் தெரிவித்துள்ளார்.

அதுபோல ஆஸ்திரேலியாவில் 600,000 க்கும் மேற்பட்ட வரி செலுத்துவோர் தற்போது பிட்காயின் போன்ற கிரிப்டோ சொத்துக்களை வர்த்தகம் செய்வதாக வருமானவரி அலுவலகம் கண்டறிந்துள்ளது. அவர்கள் அனைவரும் தங்கள் கிரிப்டோ கரன்சி மூலதன ஆதாயங்கள் அல்லது இழப்புகளை தங்கள் வருமானவரி கணக்கில் சேர்க்கவேண்டும் என்று அரசு எதிர்பார்க்கிறது.
மேலும் கிரிப்டோ முதலீட்டாளர்கள் சரியான அளவு வரி செலுத்துகிறார்கள் என்பதை உறுதிப்படுத்த ATO வரி செலுத்துவோர் தரவை வரி வருமானத்துடன் தொடர்ந்து சரி பார்த்து வருவதாக சொல்கிறார் திரு Loh.
"கிரிப்டோகரன்ஸிகளில் முதலீடு செய்யும் நபர்களின் கணிசமான அளவு தற்போது அதிகரித்துள்ளதாக" அவர் மேலும் கூறினார்.
உண்மையாக வரி செலுத்துவோர் இதைப்பற்றி எல்லாம் கவலைப்பட தேவையில்லை என்பது அனைவரின் கருத்தாக பார்க்கப்படுகிறது.
கொரோனா குறித்த தகவல்கள்
உங்களுக்கு சளி அல்லது flu அறிகுறிகள் ஏற்பட்டால் வீட்டிலேயே இருங்கள். மற்றும் உங்கள் மருத்துவரை அழைத்து சோதனைக்கு ஏற்பாடு செய்யுங்கள். அல்லது கொரோனாவைரஸ்உதவிமையத்தை 1800 020 080 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.
கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டால் மிகவும் இலேசான அறிகுறிகள் முதல் நிமோனியா வரை செல்லக்கூடும் என அரச இணையத்தளம் கூறுகின்றது. காய்ச்சல், தொண்டை நோவு, இருமல், உடற்சோர்வு, சுவாசிப்பதில் சிரமம் போன்ற அறிகுறிகள் முக்கியமானவை.
உங்களுக்கு கடுமையான உடல்நலக்குறைவு ஏற்பட்டால் அல்லது சுவாசிப்பதற்கு சிரமம் ஏற்பட்டால் 000 என்ற இலக்கத்தை அழையுங்கள்.
ஒவ்வொருவருக்கிடையிலும் 1.5 மீட்டர் சமூக இடைவெளியைப் பேணுங்கள்.
அரசால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள COVIDSafe செயலியை உங்கள் கைபேசியில் தரவிறக்கிக்கொள்ளுங்கள்.
கொரோனா வைரஸ் (COVID-19) குறித்த முக்கிய தகவல்கள் sbs.com.au/coronavirus என்ற எமது இணையத்தில் 63 மொழிகளில் கிடைக்கின்றன.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.
டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.
