உலகின் சக்திமிக்க கடவுச்சீட்டு எது எனும் பட்டியல் அவ்வப்போது வெளியாவதுண்டு. ஆனால் இப்படியான பட்டியல் தயாரிப்பு எப்படியான அம்சங்களை கணக்கில் கொள்கிறது என்று உங்களுக்குத் தெரியுமா? மட்டுமல்ல, பாஸ்போர்ட் எனும் முறை எப்படி உருவானது என்று தெரியுமா? விளக்குகிறார் பிரபல வானொலியாளர் இரா.சத்தியநாதன் அவர்கள். நிகழ்ச்சி தயாரிப்பு: றைசெல்.
Henley and partners என்ற நிறுவனம், சர்வதேசரீதியாக பயன்படுத்தப்படும் Passports -கடவுச்சீட்டுகளை, வருடாந்தம் வரிசைப்படுத்துகிறது. இந்தப்பட்டியலில் முதல் இடத்தைப்பிடிக்கும் கடவுச்சீட்டு World’s most powerful passport / Best Passport in the World என்ற அங்கீகாரத்தைப் பெறுகிறது. Visa என்ற, நாட்டுக்குள் நுழையும் அனுமதியை முன்னதாகவே பெற்றுக்கொள்ளாமல், ஒரு நாட்டின் கடவுச்சீட்டைப் பயன்படுத்தி எத்தனை நாடுகளுக்குச் செல்லமுடியும் என்ற அடிப்படையிலேயே, இந்தப்பட்டியல் தயாரிக்கப்படுகிறது.
தனிநாடுகளாக அல்லது தமக்கென்று தனியான கடவுச்சீட்டுக்களைக் கொண்ட நாடுகள், உலகில் 218 நாடுகள் இருப்பதாக கணிக்கப்பட்டிருக்கிறது. இவற்றுள் 190 நாடுகளுக்கு விசா இல்லாமல் செல்லும் அனுமதி உள்ள இரண்டுநாடுகள் இம்முறை இந்தப்பட்டியலில் முதலிடத்தைப் பிடித்திருக்கின்றன. அவை சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகள் ஆகும்.
இரண்டாம் இடத்தில் பிரிட்டனும் மூன்றாம் இடத்தில் பின்லாந்து, ஜெர்மனி மற்றும் தென்கொரியா ஆகிய மூன்று நாடுகளும் இருக்கின்றன. நமது, ஆஸ்திரேலியா எந்த இடத்தில் இருக்கிறது என்று அறிந்துகொள்ள நாம் ஆர்வமாக இருப்போம். ஆஸ்திரேலிய கடவுச்சீட்டு, ஒன்பதாவது இடத்தில் இருக்கிறது. எமது கடவுச்சீட்டைப் பயன்படுத்தி, விசா இல்லாமல் 181 நாடுகளுக்குச் செல்ல முடியும். மலேசிய கடவுச்சீட்டு 12ஆவது இடத்திலும் இந்திய கடவுச்சீட்டு 86ஆவது இடத்திலும் ஶ்ரீலங்கா கடவுச்சீட்டு 95ஆவது இடத்திலும் இருக்கின்றன. பட்டியலில் கடைசி இடத்தைப் பிடித்திருப்பது, ஆப்கானிஸ்தானிய கடவுச்சீட்டாகும். இந்த கடவுச்சீட்டைப் பயன்படுத்தி 25 நாடுகளுக்கு விசா இல்லாமல் பயணம் மேற்கொள்ள முடியும்.
கடவுசீட்டுக்கள் முதலாம் உலகப்போர் முடிவடைந்த காலகட்டத்தில், சுமார் 1920 ஆண்டளவில் பயன்பாட்டுக்கு வந்தன. Bibilical age என்ற வேதாகம காலந்தொட்டு ஒரு வெளிநாட்டுப்பிரஜையை, நாட்டுக்குள் அனுமதிக்க ஓலை, கடிதம், அரச முத்திரை என்று பல்வேறு அடையாள ஆவணங்கள் அல்லது சின்னங்கள் பயன்படுத்தப்பட்டுள்ள போதும் தற்போது நாம் பயன்படுத்துவதற்கு இணையான கடவுச்சீட்டு 1920 ஆம் ஆண்டளவில் புழக்கத்திற்கு வந்தன. அமெரிக்காவில் இது அறிமுகப்படுத்தப்படுவதற்கு எதிராக பல குரல்கள் எழுந்தபோதும், பல்வேறு திக்குகளில் இருந்தும் அமெரிக்காவில் குடியேற முயன்றவர்களைத்தடுக்க, அமெரிக்க அரசாங்கம் இதை அமுல்படுத்தியது.
கடவுச்சீட்டுக்கள் நான்கு பிரதான வர்ணங்களில் மட்டுமே தயாரிக்கப்படுகின்றன. நீலம்,சிவப்பு, பச்சை மற்றும் கறுப்பு வர்ணங்கள். பெரும்பாலான ஐரோப்பிய நாடுகள், சிவப்பு நிறத்திற்கு இணையான burgundy என்ற வர்ணத்தைப் பயன்படுத்துகின்றன. ரஷ்ய கடவுச்சீட்டு கடும் சிவப்பு வர்ணத்தில் தயாரிக்கப்படுகிறது. பெரும்பாலான இஸ்லாமிய நாடுகள் பச்சை நிறத்தைப் பயன்படுத்துகின்றன.
தொழில்நுட்பத்தின் அசுர வேகத்தைப் பிரதிபலிக்கு முகமாக தற்போதைய கடவுச்சீட்டுக்கள், microchips, holograms, biometric photos, barcode என்ற அம்சங்களை உள்ளடக்கியிருக்கின்றன.




