ஆஸ்திரேலியாவிலிருந்து நாடுகடத்தலை எதிர்கொண்டிருந்த சிங்கப்பூர் பின்னணி கொண்ட தமிழ் குடும்பத்தின் நாடுகடத்தல் தடுக்கப்பட்டுள்ளதுடன் இக்குடும்பத்திற்கு நிரந்தர வதிவிட உரிமை வழங்கப்பட்டுள்ளது. எதிர்வரும் 21 ஆம் திகதி சொந்த நாடான சிங்கப்பூருக்கு நாடு கடத்தப்படவுள்ளதாக ஆஸ்திரேலிய குடிவரவு அமைச்சினால் அறிவிக்கப்பட்ட ராஜசேகரன் குடும்பத்தின் சார்பில், ராஜசேகரனின் புதல்வி வாணிசிறீ ஆஸ்திரேலிய மக்களிடம் பகிரங்க உதவியை நாடியிருந்ததுடன், தந்தையின் உடல்நிலையின் அடிப்படையில் நாடுகடத்தப்படவுள்ள தமது குடும்பம் ஆஸ்திரேலியாவில் தொடர்ந்து வசிக்க விரும்புவதாகவும் ஆஸ்திரேலிய சமூகத்துக்கு சேவையாற்றுவது தனது இலட்சியம் என்றும் கூறியிருந்தார். இந்தப்பின்னணியில் அமைச்சரின் தலையீட்டையடுத்து தமது நாடுகடத்தல் தடுக்கப்பட்டு நிரந்தர வதிவிட உரிமை வழங்கப்பட்டுள்ளதாக திரு. ராஜசேகரன் நம்மிடம் தெரிவித்தார். இதனைச் சாத்தியப்படுத்தியதில் ஆஸ்திரேலிய மக்களுக்கே பெரும்பங்கு இருப்பதாக குறிப்பிட்ட திரு.ராஜசேகரன் அனைவருக்கும் தனது நன்றிகளையும் தெரிவித்தார்.
நாடுகடத்தப்படவிருந்த இக்குடும்பத்தின் கதையை கீழ்க்காணும் ஒலிக்கீற்றின் ஊடாக செவிமடுக்கலாம்.
Share




