Content warning: This episode contains distressing material, including references to trauma, removal of children, and mentions of Aboriginal and Torres Strait Islander people who have passed away.
ஆஸ்திரேலியாவில் ஐரோப்பிய குடியேற்றத்தைத் தொடர்ந்து, பூர்வீகக்குடியினர் மற்றும் டோரஸ் ஸ்ட்ரெய்ட் தீவு மக்களின் குழந்தைகள் அவர்களின் குடும்பங்களிலிருந்து வலுக்கட்டாயமாக அகற்றப்பட்டு, பூர்வீகக்குடியினர் அல்லாத சமூகத்தில் வாழ நிர்ப்பந்திக்கப்பட்டனர். அவர்கள் அனுபவித்த அதிர்ச்சி மற்றும் துன்புறுத்தல் ஆழமான வடுக்களை ஏற்படுத்தியது.
இந்த வலி இன்றும் உணரப்படுகிறது, தலைமுறைகள் முழுவதும் எதிரொலிக்கிறது. ஆனால் சமூகங்கள் நேர்மறையான மாற்றத்தை உருவாக்க உழைத்துவருகின்றன.
இன்று இந்த மக்கள் திருடப்பட்ட தலைமுறைகளில் இருந்து தப்பிப்பிழைத்தவர்களாக அங்கீகரிக்கப்படுகிறார்கள்.
1910 முதல் 1970கள் வரை, ஆயிரக்கணக்கான பூர்வீகக்குடியினர் மற்றும் டோரஸ் ஸ்ட்ரெய்ட் தீவு மக்களின் குழந்தைகள் அவர்களின் குடும்பங்கள், சமூகங்கள் மற்றும் தேசத்திலிருந்து வலுக்கட்டாயமாக அகற்றப்பட்டனர்.

அக்கால அரச கொள்கைகளின் கீழ், தேவாலயங்கள், நலன்புரி நிறுவனங்கள் மற்றும் அரசு அமைப்புகளின் ஊடாக இந்தக் குழந்தைகள் நிறுவனங்கள் அல்லது பூர்வீகக்குடியினர் அல்லாத குடும்பங்களிடம் சேர்க்கப்பட்டனர்.
இதற்கான காரணம் பூர்வீகக்குடியின குழந்தைகள் வெள்ளையின சமூகத்திற்குள் வளர்க்கப்பட்டால் அவர்கள் சிறந்த வாழ்க்கையைப் பெறுவார்கள் என்பதாக கூறப்பட்டது.
ஆனால் அவர்களை அவர்களின் குடும்பங்கள், கலாச்சாரம், சமூகங்கள், மொழி ஆகியவற்றிலிருந்து பிரிப்பதே உண்மையான நோக்கம் என்கிறார் Yawuru பெண்மணியும் Healing Foundationனின் தலைமை நிர்வாக அதிகாரியுமான Shannan Dodson.
குழந்தைகள் தங்களுக்குச் சொல்லப்படுவதை ஏற்றுக்கொள்வதற்கும், தங்கள் புதிய கலாச்சாரத்தை ஏற்றுக்கொள்வதற்கும் அதிக வாய்ப்புள்ளது என்பதால் அவர்கள் குறிவைக்கப்பட்டனர்.
வரையறுக்கப்பட்ட மற்றும் சீரற்ற பதிவுகள் காரணமாக, எத்தனை குழந்தைகள் இப்படியாக அகற்றப்பட்டனர் என்பதை சரியாகக் கண்டறிவது கடினம். இருப்பினும், பூர்வீகக்குடியின மற்றும் டோரஸ் ஸ்ட்ரெய்ட் தீவு குழந்தைகளில் மூவரில் ஒருவர் என்ற எண்ணிக்கையில் அவர்களின் குடும்பங்களிலிருந்து அழைத்துச் செல்லப்பட்டதாக மதிப்பீடுகள் தெரிவிக்கின்றன.
இதன்மூலம் ஒவ்வொரு பூர்வீகக்குடியினர் மற்றும் டோரஸ் ஸ்ட்ரெய்ட் தீவு சமூகமும் ஆழமாகப் பாதிக்கப்பட்டது என்பது உறுதி - மேலும் இதன் வடுக்கள் அப்படியே உள்ளன.

கட்டாயமாக அழைத்துச் செல்லப்பட்ட பல குழந்தைகள் நாடு முழுவதும் உள்ள அரசு மற்றும் தேவாலயத்தால் வழிநடத்தப்படும் நிறுவனங்களுக்கு கொண்டு செல்லப்பட்டனர் என Shannan Dodson விளக்குகிறார்.
இப்படியாக குழந்தைகளுக்கு ஏற்பட்ட பேரழிவு தாக்கம் அவர்களின் குடும்பங்கள் மற்றும் சமூகங்களுக்கும் பரவியது.
1943 ஆம் ஆண்டு, NSW இல் உள்ள Cootamundra பூர்வீகக்குடி பெண்கள் பயிற்சி இல்லத்தில் நூற்றுக்கணக்கான சிறுமிகளுடன் சேர வேண்டிய கட்டாயம் Gamilaroi மற்றும் Waliwan பெண்மணியான Aunty Lorraine Peetersக்கு ஏற்பட்டது. அப்போது அவருக்கு 4 வயது. அவரது இரண்டு சகோதரர்களும் Kinchela பூர்வீகக்குடி ஆண்கள் பயிற்சி இல்லத்திற்குச் சென்றனர்.
அங்கு தனது அடையாளம் பறிக்கப்பட்டு ஒரு மதம், ஒரு வேலை மற்றும் ஒரு படுக்கை வழங்கப்பட்டதாக அவர் கூறுகிறார்.
அடுத்த 10 ஆண்டுகளுக்கு Aunty Lorraine வெள்ளையின குடும்பங்களுக்கான வீட்டு வேலைக்காரராகப் பயிற்சி பெற்றார்.
இன்று அவர் திருடப்பட்ட தலைமுறையில் தப்பிப் பிழைத்தவர்களுக்கான வலுவான குரலாகவும், வலுக்கட்டாயமாக பிரிக்கப்பட்டதால் ஏற்பட்ட பாதிப்புகளை குணப்படுத்தும் முயற்சியான Marumali திட்டத்தின் நிறுவனராகவும் உள்ளார்.
இன்று பல இளைஞர்கள் தாங்கள் யார், எங்கிருந்து வந்தார்கள் என்று தெரியாதவர்களாக இருக்கிறார்கள் என்று Aunty Lorraine கூறுகிறார்.

உரிய உதவி கிடைக்காததால் தமது பெற்றோர் மற்றும் தாத்தா பாட்டி அனுபவிக்கும் வலியைக் காணும்போது, அந்த மன அதிர்ச்சி பெரும்பாலும் அவர்களை அறியாமலேயே குழந்தைகளுக்குக் கடத்தப்படுகிறது.
இது intergenerational trauma - தலைமுறைகளுக்கு இடையேயான மன அதிர்ச்சி என்று அழைக்கப்படுகிறது என Shannan Dodson விளக்குகிறார்.
தலைமுறைகளுக்கு இடையேயான மன அதிர்ச்சியின் அறிகுறிகள், பூர்வீகக்குடியின பின்னணி கொண்டவர்கள் மத்தியில்- குடும்பங்களின் பிரிவு, வன்முறை, சிறைவாசம், தற்கொலை, போதைப்பொருள் மற்றும் மது அருந்துதல் -ஆகியவற்றின் அதிக விகிதங்களில் தெளிவாகத் தெரிகிறது.
மன அதிர்ச்சியின் சுழற்சியை Healing - குணப்படுத்தல் மூலம் முடிவுக்குக் கொண்டுவர சமூகங்கள் இப்போது செயல்பட்டு வருகின்றன.
Healing -குணப்படுத்துதல் என்பது குடும்ப கட்டமைப்புகள் மற்றும் வலுவான சமூகங்களை மீண்டும் கட்டியெழுப்புவதாகும். இது அடையாளம் மற்றும் பெருமை உணர்வை மீண்டும் கட்டியெழுப்புவதையும் குறிக்கிறது.
திருடப்பட்ட தலைமுறையில் தப்பிப்பிழைத்தவர்கள் தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்வதுடன் வரலாற்று அநீதிகளைப் பற்றி சுதந்திரமாகப் பேச வேண்டியதன் அவசியத்தையும் வெளிப்படுத்துகிறார்கள்.
Intergenerational Trauma Animation, The Healing Foundation
This video contains the voice of a deceased person.
Coota Girls Aboriginal Corporation திருடப்பட்ட தலைமுறைகளில் இருந்து தப்பிப்பிழைத்தவர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களின் சிக்கலான குணப்படுத்தும் தேவைகளை நிவர்த்தி செய்யும் நோக்கத்துடன், Coota Girls Homeஇன் முன்னாள் குடியிருப்பாளர்களால் 2013 இல் நிறுவப்பட்டது.
இந்த இல்லத்தில் இருந்து தப்பிப்பிழைத்த மற்றவர்களுடன் இணைந்து Aunty Lorraine பணியாற்றுகிறார். நீங்கள் ஒரு குழுவாக காயமடைந்திருந்தால், நீங்கள் ஒரு குழுவாக குணமடைவீர்கள் என்று அவர் கூறுகிறார்.
இதற்கிணங்க Coota பெண்கள் ஒன்றாக கூடுவதையே விரும்புகிறார்கள்.
குணப்படுத்தலின் மற்றொரு அம்சம் கல்வி புகட்டுவதாகும். அனைத்து ஆஸ்திரேலியர்களும், நடந்த வரலாற்று அநீதிகளைப் புரிந்துகொள்வதை இது உறுதி செய்கிறது என்று Aunty Lorraine கூறுகிறார்.
2008 இல் ஒரு திருப்புமுனை தருணத்தில், அப்போதைய பிரதமர் கெவின் ரட், திருடப்பட்ட தலைமுறையினர், அவர்களின் சந்ததியினர் மற்றும் அவர்களது குடும்பங்களிடம் நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட மன்னிப்பைக் கோரினார்.
இதையடுத்து பல முயற்சிகள் மற்றும் முன்னேற்றங்கள் இடம்பெற்றுள்ளன. அதில் Healing Foundation நிறுவப்பட்டதும் அடங்கும்.

திருடப்பட்ட தலைமுறைகளுக்கான ஆதரவு சேவைகளுக்கான உதவிகள் அதிகரிக்கப்பட வேண்டுமெனவும் இதன்மூலம் தலைமுறைகளுக்கு இடையேயான குணப்படுத்தலை தொடர முடியும் எனவும் Healing Foundation அழைப்பு விடுக்கிறது.
ஆனால் ஒட்டுமொத்த ஆஸ்திரேலியாவும் தப்பிப்பிழைத்தவர்களின் கதைகளை கேட்பதுடன் அவர்கள் மீண்டெழுவதற்கு உதவுவதே உண்மையான குணப்படுத்தல் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
READ MORE

Closing the Gap என்றால் என்ன?
Subscribe or follow the Australia Explained podcast for more valuable information and tips about settling into your new life in Australia.
Do you have any questions or topic ideas? Send us an email to australiaexplained@sbs.com.au
SBS தமிழின் ஏனைய நிகழ்ச்சிகளைக் கேட்க எமது podcast பக்கத்திற்குச் செல்லுங்கள்.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக SBS South Asian எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்து கொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள். SBS South Asian YouTube channel ஊடாக எமது podcasts மற்றும் videos-ஐப் பார்வையிடுங்கள்.

















