Highlights
- வெளிநாடுகளிலிருந்து ஆஸ்திரேலியா திரும்புவதற்கு அனுமதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அரைவாசியாக குறைக்கப்படுகிறது.
- வெளிநாடுகளிலிருந்து திரும்புபவர்களின் வரம்பு குறைக்கப்பட வேண்டுமென சில மாநிலங்கள் தொடர்ச்சியாக அழுத்தம் கொடுத்துவந்தன.
- நாடுதிரும்பமுடியாமல் சுமார் 34 ஆயிரம் ஆஸ்திரேலியர்கள் வெளிநாடுகளில் சிக்கிக்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
வெளிநாடுகளிலிருந்து ஆஸ்திரேலியா திரும்புவதற்கு அனுமதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை வரம்பு ஜுலை 14ம் திகதி முதல் அரைவாசியாக குறைக்கப்படுவதாக பிரதமர் Scott Morrison அறிவித்துள்ளார்.
இன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தையடுத்து பிரதமர் இவ்வறிவித்தலை விடுத்தார்.
இதன்படி வெளிநாடுகளிலிருந்து ஆஸ்திரேலியா திரும்ப அனுமதிக்கப்படுபவர்களின் வரம்பு வாரமொன்றுக்கு 6370-இலிருந்து 3035-ஆக குறைக்கப்படுகிறது.
இத்தீர்மானத்தை மேற்கொள்வதில் மிக ஆபத்தான Delta வகை கொரோனா வைரஸ் பரவல் முக்கிய காரணம் எனவும், இதன்மூலம் நாட்டிலுள்ள தனிமைப்படுத்தல் மையங்கள் எதிர்கொள்ளும் அழுத்தத்தை குறைக்கமுடியும் எனவும் பிரதமர் Scott Morrison குறிப்பிட்டார்.
வெளிநாடுகளிலிருந்து திரும்புபவர்களின் வரம்பு குறைக்கப்பட வேண்டுமென விக்டோரியா, குயின்ஸ்லாந்து, மேற்கு ஆஸ்திரேலியா மற்றும் தெற்கு ஆஸ்திரேலியா ஆகிய மாநிலங்கள் தொடரச்சியாக அழுத்தம் கொடுத்துவந்த பின்னணியில் அரசின் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இதேவேளை நாடுதிரும்பமுடியாமல் சுமார் 34 ஆயிரம் ஆஸ்திரேலியர்கள் வெளிநாடுகளில் சிக்கிக்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
நாடுதிரும்ப அனுமதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை குறைக்கப்படுவதால் ஏற்படும் பாதிப்பைக் குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், வெளிநாடுகளில் சிக்கியுள்ளவர்களை அழைத்துவருதற்கு அதிக எண்ணிக்கையில் சிறப்பு விமானங்கள் ஏற்பாடு செய்யப்படும் எனவும் பிரதமர் Scott Morrison தெரிவித்தார்.
ஆனால் எத்தனை சிறப்பு விமானங்கள் ஏற்பாடு செய்யப்படுமென்ற தகவல்களை அவர் வெளியிடவில்லை.
இந்த வரம்பு ஆகக்குறைந்தது அடுத்த ஆண்டு ஆரம்பம்வரை நடைமுறையில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதிகளவான ஆஸ்திரேலியர்கள் தடுப்பூசி போட்டுக்கொண்டபின் இந்த வரம்பை மீண்டும் அதிகரிப்பது குறித்து ஆலோசிக்கப்படும் எனவும் பிரதமர் கூறினார்.
வெளிநாடுகளிலிருந்து திரும்பிவருபவர்களில் 80 வீதமானவர்கள் ஆஸ்திரேலிய குடியுரிமை உள்ளவர்கள் என அவர் குறிப்பிட்டார்.
கொரோனா குறித்த தகவல்கள்
உங்களுக்கு சளி அல்லது flu அறிகுறிகள் ஏற்பட்டால் வீட்டிலேயே இருங்கள். மற்றும் உங்கள் மருத்துவரை அழைத்து சோதனைக்கு ஏற்பாடு செய்யுங்கள். அல்லது கொரோனாவைரஸ்உதவிமையத்தை 1800 020 080 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.
கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டால் மிகவும் இலேசான அறிகுறிகள் முதல் நிமோனியா வரை செல்லக்கூடும் என அரச இணையத்தளம் கூறுகின்றது. காய்ச்சல், தொண்டை நோவு, இருமல், உடற்சோர்வு, சுவாசிப்பதில் சிரமம் போன்ற அறிகுறிகள் முக்கியமானவை.
உங்களுக்கு கடுமையான உடல்நலக்குறைவு ஏற்பட்டால் அல்லது சுவாசிப்பதற்கு சிரமம் ஏற்பட்டால் 000 என்ற இலக்கத்தை அழையுங்கள்.
ஒவ்வொருவருக்கிடையிலும் 1.5 மீட்டர் சமூக இடைவெளியைப் பேணுங்கள்.
அரசால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள COVIDSafe செயலியை உங்கள் கைபேசியில் தரவிறக்கிக்கொள்ளுங்கள்.
கொரோனா வைரஸ் (COVID-19) குறித்த முக்கிய தகவல்கள் sbs.com.au/coronavirus என்ற எமது இணையத்தில் 63 மொழிகளில் கிடைக்கின்றன.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.