கொரோனா பரவல் காரணமாக சர்வதேச எல்லைகள் கடந்த பல மாதங்களாக மூடப்பட்டிருந்த காரணத்தால், ஆஸ்திரேலியாவுக்கு குடிபெயர்வோரின் எண்ணிக்கை 2022-2023 நிதியாண்டில் 180,000 ஆக காணப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கொரோனா பரவல் காரணமாக ஆண்டுதோறும் ஆஸ்திரேலியாவுக்கு குடிபெயர்வோரின் எண்ணிக்கை இரண்டாவது உலகப்போர் காலத்திற்குப் பின்னர் முதற்தடவையாக 2020-21 இல் பாரியளவில் குறைவடைந்திருந்தது.
எனினும் தற்போது வழமைநிலை திரும்ப ஆரம்பித்துள்ளதால், 2022-2023 நிதியாண்டில் குடிபெயர்வோரின் எண்ணிக்கை 180,000 ஆக காணப்படும் எனவும், 2023-24 இல் இந்த எண்ணிக்கை 213,000 ஆக அதிகரிக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
ஆஸ்திரேலியாவிற்குள் Humanitarian visa program-மனிதாபிமான அடிப்படையில் உள்வங்கப்படும் அகதிகளின் எண்ணிக்கை, முந்தைய இரண்டு ஆண்டுகளைப் போலவே 13,750 என்று தொடர உள்ளது. ஆனால் ஆப்கானிஸ்தான் நாட்டவர்களுக்கு கூடுதல் இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆப்கானிலிருந்து வெளியேறும் மக்களுக்கென கூடுதலாக 16,500 இடங்கள் அடுத்த நான்கு ஆண்டுகளுக்கு ஒதுக்கப்படுகின்றன. இதற்கென 665.9 மில்லியன் டொலர்கள் நிதிநிலை அறிக்கையில் ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
இதேவேளை ஆப்கான் நாட்டினருக்கு அடுத்த நான்கு ஆண்டுகளில் 15,000 விசாக்களை அரசு ஒதுக்குவதாகவும், மனிதாபிமான திட்டத்தின்கீழ் 10,000 மற்றும் குடும்ப விசாக்களின்கீழ் 5,000 என இந்த விசாக்கள் ஒதுக்கப்படுவதாகவும் கடந்த ஜனவரி மாதம், குடிவரவு அமைச்சர் Alex Hawke அறிவித்திருந்தார்.
அந்தவகையில் மொத்தமாக அடுத்த நான்கு ஆண்டுகளுக்கு ஆப்கானிஸ்தான் நாட்டவர்களுக்கு 30,000 க்கும் மேற்பட்ட அகதி விசாக்களை ஆஸ்திரேலியா வழங்கும்.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.
டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.
