Highlights
- ஏப்ரல் 3ம் திகதி பெர்த் சிறுவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஐஸ்வர்யா இரண்டு மணிநேரத்திற்கு மேல் காக்கவைக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
- ஐஸ்வர்யா இறந்து நான்கு வாரங்கள் கழிந்தும் அவரது மரணத்திற்கான காரணம் தொடர்பில் இதுவரை குடும்பத்தினருக்கு தெரியப்படுத்தப்படவில்லை என குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
- ஐஸ்வர்யாவின் மரணத்திற்கு நீதி கிடைக்கவேண்டும் என்பதற்காக உண்ணாநிலைப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளதாக பெற்றோர் கூறியுள்ளனர்.
பெர்த் சிறுவர் மருத்துவமனையின் அவசர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டு நீண்டநேரம் சிகிச்சைக்காக காத்திருந்தநிலையில் மரணமடைந்த தமது மகளுக்கு நீதி கிடைக்க வேண்டும் என வலியுறுத்தி இச்சிறுமியின் பெற்றோர் உண்ணாநிலைப் போராட்டம் நடத்திவருகின்றனர்.

கடந்த ஏப்ரல் 3ம் திகதி பெர்த்தின் Morley பகுதியைச் சேர்ந்த இந்தியப்பின்னணி கொண்ட ஏழு வயதான ஐஸ்வர்யாவுக்கு காய்ச்சல் ஏற்பட்டதையடுத்து பெர்த் சிறுவர் மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவுக்கு கொண்டுசெல்லப்பட்டார்.
அங்கு சுமார் 2 மணிநேரங்கள் ஐஸ்வர்யா காத்திருந்ததாகவும், தனது மகளுக்கு உடனடியாக சிகிச்சை ஆரம்பிக்குமாறு அங்கிருந்தவர்களிடம் பல தடவைகள் கோரிக்கைவிடுத்த போதிலும் அவர்கள் அதைக் காதில் போட்டுக்கொள்ளவில்லை எனவும் தாயாரான பிரஷிதா தெரிவித்துள்ளார்.
மருத்துவர்கள் ஐஸ்வர்யாவை பார்வையிட்டபோது அவரது நிலைமை மிகமோசமடைந்திருந்ததாகவும், சிகிச்சை ஆரம்பித்து சிறிது நேரத்தில் ஐஸ்வர்யா மரணமடைந்துவிட்டதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.
உரிய நேரத்தில் சிகிச்சை வழங்கப்பட்டிருந்தால் ஐஸ்வர்யா உயிரிழந்திருக்க மாட்டார் எனவும் மருத்துவமனையின் அலட்சியப்போக்கு மற்றும் கவனக்குறைவினால் தமது மகளை இழந்துவிட்டதாகவும் தந்தையார் முரளிதரன் அஸ்வத் தெரிவித்துள்ளார்.

ஐஸ்வர்யாவுக்கு சிகிச்சை வழங்குவதில் ஏற்பட்ட தாமதம் தொடர்பில் WA Child and Adolescent Health Services (CAHS) உள்ளக விசாரணைகளை மேற்கொண்டபோதிலும் இதுகுறித்த அறிக்கை இன்னமும் வெளியாகவில்லை எனவும் தமது மகளின் மரணத்திற்கான காரணம் இன்னமும் தெரியவரவில்லை எனவும் பெற்றோர் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து ஐஸ்வர்யாவின் மரணத்துக்கு நீதிகோரியும் இதைப்போன்ற நிலைமை வேறு எந்தக் குழந்தைக்கும் ஏற்பட்டுவிடக்கூடாது என்பதற்காகவும் தாம் உண்ணாநிலைப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளதாக முரளிதரன் அஸ்வத் தெரிவித்துள்ளார்.
ஐஸ்வர்யாவின் மரணம் தொடர்பில் சுயாதீன விசாரணை நடத்தப்படுவதற்கான நடவடிக்கைகளை மேற்கு ஆஸ்திரேலிய அரசு மேற்கொள்ளும்வரை தமது போராட்டம் தொடரும் என பெர்த் சிறுவர் மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவுக்கு வெளியே இந்தப் போராட்டத்தை ஆரம்பித்துள்ள அஸ்வத்தும் பிரஷிதாவும் தெரிவித்துள்ளனர்.
உங்களுக்கு சளி அல்லது flu அறிகுறிகள் ஏற்பட்டால் வீட்டிலேயே இருங்கள். மற்றும் உங்கள் மருத்துவரை அழைத்து சோதனைக்கு ஏற்பாடு செய்யுங்கள். அல்லது Coronavirus Health Information Hotline-ஐ 1800 020 080 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.
கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டால் மிகவும் இலேசான அறிகுறிகள் முதல் நிமோனியா வரை செல்லக்கூடும் என அரச இணையத்தளம் கூறுகின்றது. காய்ச்சல், தொண்டை நோவு, இருமல், உடற்சோர்வு, சுவாசிப்பதில் சிரமம் போன்ற அறிகுறிகள் முக்கியமானவை.
உங்களுக்கு கடுமையான உடல்நலக்குறைவு ஏற்பட்டால் அல்லது சுவாசிப்பதற்கு சிரமம் ஏற்பட்டால் 000 என்ற இலக்கத்தை அழையுங்கள்.
ஒவ்வொருவருக்கிடையிலும் 1.5 மீட்டர் சமூக இடைவெளியைப் பேணுங்கள்.
அரசால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள COVIDSafe செயலியை உங்கள் கைபேசியில் தரவிறக்கிக்கொள்ளுங்கள்.
கொரோனா வைரஸ் (COVID-19) குறித்த முக்கிய தகவல்கள் sbs.com.au/coronavirus என்ற எமது இணையத்தில் 63 மொழிகளில் கிடைக்கின்றன.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.
டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.
