Highlights
- கோவிட் தடுப்பூசி போட்டவர்கள் வெளிநாட்டு பயணம் மேற்கொள்வது தொடர்பிலான திட்டமொன்று விரைவில் ஆரம்பிக்கப்படலாம்.
- அடுத்த ஆறு முதல் எட்டு வாரங்களில் இத்திட்டம் பரீட்சிக்கப்படலாம் என குறிப்பிடப்படுகிறது.
- இத்திட்டத்தின்கீழ் தனிமைப்படுத்தல் கட்டுப்பாடுகள் குறைந்தளவில் பேணப்படலாம் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.
கோவிட் தடுப்பூசியை முழுமையாக போட்டுக்கொண்டவர்களை வெளிநாடு சென்று வருவதற்கு அனுமதிப்பது தொடர்பான திட்டமொன்றை இன்று செவ்வாயிரவு கூட்டணி கட்சிகளின் கூட்டத்தில் சுகாதார அமைச்சர் Greg Hunt முன்மொழிந்துள்ளதாக The Guardian செய்தி வெளியிட்டுள்ளது.
கோவிட் தடுப்பூசியின் இரண்டு டோஸ்களையும் சரியாக போட்டுக்கொண்டவர்கள் குறைந்தளவு தனிமைப்படுத்தல் கட்டுப்பாடுகளின்கீழ் வெளிநாட்டுப்பயணம் மேற்கொண்டு திரும்புவதை சாத்தியமாக்கும் பரீட்சார்த்த திட்டத்தை அடுத்த ஆறு-எட்டு வாரங்களில் ஆரம்பிப்பது தொடர்பில் இன்றைய கூட்டத்தில் அவர் முன்மொழிந்துள்ளதாக அச்செய்தி குறிப்பிடுகிறது.
கோவிட் தடுப்பூசியானது ஆஸ்திரேலியர்களது பயண ஒழுங்கிலும் ஆஸ்திரேலியாவுக்கு வருபவர்களது பயண ஒழுங்கிலும் எவ்வகையான தாக்கத்தை செலுத்தக்கூடியது என்பது தொடர்பாக அரசாங்கம் விசேட செயலணி ஒன்றை உருவாக்கி ஆராய்ந்ததாகவும் - இதன்படி, தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களை வெளிநாட்டு பயணத்துக்கு அனுமதிப்பது தொடர்பான பரீட்சார்த்த ஒழுங்கொன்றை அடுத்த ஆறு வாரங்களில் தொடங்குவது குறித்து அரசு ஆலோசித்து வருவதாகவும் சுகாதார அமைச்சர் Greg Hunt கூறியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கோவிட் தொற்றினை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துகொண்டிருக்கும் அதேநேரம் வேகமாக தடுப்பூசிகளை போட்டுவருகின்ற அமெரிக்கா, பிரித்தானியா, கனடா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளை சேர்ந்த பயணிகளை ஆஸ்திரேலியாவுக்குள் குறைந்தளவு தனிமைப்படுத்தல் கட்டுப்பாடுகளுடன் அனுமதிப்பது தொடர்பாக அரசு ஆலோசிப்பதாகவும் - அதேவேளை, ஆஸ்திரேலியாவிலிருந்து வெளியேற விரும்பும் பயணிகளையும் அவர்கள் முழுமையாக தடுப்பூசிகளை போட்டிருந்தால் பாதுகாப்பான நாடுகளுக்கு அனுமதிப்பதற்கு அரசு முக்கிய கலந்துரையாடல்களில் ஈடுபட்டுவருவதாகவும் சுகாதார அமைச்சர் தெரிவித்திருக்கிறார் என அச்செய்தி மேலும் கூறுகிறது.
உங்களுக்கு சளி அல்லது flu அறிகுறிகள் ஏற்பட்டால் வீட்டிலேயே இருங்கள். மற்றும் உங்கள் மருத்துவரை அழைத்து சோதனைக்கு ஏற்பாடு செய்யுங்கள். அல்லது கொரோனாவைரஸ்உதவிமையத்தை 1800 020 080 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.
கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டால் மிகவும் இலேசான அறிகுறிகள் முதல் நிமோனியா வரை செல்லக்கூடும் என அரச இணையத்தளம் கூறுகின்றது. காய்ச்சல், தொண்டை நோவு, இருமல், உடற்சோர்வு, சுவாசிப்பதில் சிரமம் போன்ற அறிகுறிகள் முக்கியமானவை.
உங்களுக்கு கடுமையான உடல்நலக்குறைவு ஏற்பட்டால் அல்லது சுவாசிப்பதற்கு சிரமம் ஏற்பட்டால் 000 என்ற இலக்கத்தை அழையுங்கள்.
ஒவ்வொருவருக்கிடையிலும் 1.5 மீட்டர் சமூக இடைவெளியைப் பேணுங்கள்.
அரசால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள COVIDSafe செயலியை உங்கள் கைபேசியில் தரவிறக்கிக்கொள்ளுங்கள்.
கொரோனா வைரஸ் (COVID-19) குறித்த முக்கிய தகவல்கள் sbs.com.au/coronavirus என்ற எமது இணையத்தில் 63 மொழிகளில் கிடைக்கின்றன.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.
Share


